அப்போது இலங்கை ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில், “விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தங்களது முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கும்வரை காத்திராமல் இலங்கை அரசு ஏன் அவரசப்பட்டு எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்கிறது?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ஜெயவர்த்தனே, “விடுதலைப் புலிகளது முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. அதற்கான உறுதிமொழி இந்திய அரசால் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆயுத ஒப்படைப்பை இந்திய அரசு கவனித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கிறோம்” என்றார்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு இலங்கை ஜனாதிபதி இப்படி அறிவித்தது ஒரு சாமர்த்தியமான நடவடிக்கை என்றும், இந்தியர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை வேறு வழியில்லாமல் நிறைவேற்றியே ஆகவேண்டிய நிலையை ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் எழுதியது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.
இதற்கு மறுதினம் ஆகஸ்ட் 9ம் தேதி பிரதமர் பிரேமதாச தனது இரண்டு வார மௌனத்தை முறித்துக் கொண்டு வாய்திறந்தார்.
கொழும்புக்கு அருகே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரேமதாச பேசியபோது “இலங்கை – இந்திய ஒப்பந்தம் நான் இலங்கைக்கு வெளியே வெளிநாடு ஒன்றில் இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. பிரதமர் என்ற முறையில் என்னைக் கலந்து ஆலோசிக்கவில்லை. எனவே இந்த ஒப்பந்தத்துக்கு நான் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
“இந்த ஒப்பந்தம் தமிழர்களுக்கு குறிப்பிட்ட சில அதிகாரங்களுடன் கூடிய தமிழ் ஈழம் ஒன்றை உருவாக்கிக் கொடுக்கும் ரகசியத் திட்டத்துடன் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கின்றேன்” என்றார் அவர்.
“எமது மூதாதையர்கள் இந்த நாட்டை ஒரு முழு நாடாக விட்டுச் சென்றார்கள். அப்படியான நாடு இப்போது துண்டு துண்டாக உடையக்கூடிய நிலையில் இருக்கின்றது. இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம், நாடு உடைவதைத் தடுக்குமா அல்லது நாட்டை உடையச் செய்யுமா என்று நாங்கள் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று அவர் கூறியது பலரது புருவங்களை உயரவைத்தது.
காரணம் அவர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற வார்த்தைப் பிரயோகம் செய்யாமல், இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் என்றே குறிப்பிட்டிருந்தார்.
அதாவது இது தனிப்பட்ட இருவரால் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் என்றே பார்க்கப்பட வேண்டும் என்று அவர் சொல்லாமல் சொல்லியிருந்தார்.
இந்தப் பேச்சில் இருந்து பிரேமதாசா இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நேரடியாக எதிர்க்கத் துணிந்து விட்டார் என்பதை புரியக் கூடியதாக இருந்தது அவர் இப்படிப் பேசுவதற்கு முன்னர் இரண்டு வாரங்கள் மௌனமாக இருந்தார் என்று கூறியிருந்தோம் அல்லவா.
அந்த இரண்டு வாரங்களிலும் தனது ஆதரவாளர்களையும், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தவர்களையும் மறைமுகமாகச் சந்தித்து ஒன்று திரட்டியிருந்தார். ஜனாதிபதி ஜெயவர்த்தனேவுக்கு எதிராக இறங்குவதற்கு ஒரு களம் அமைத்து வைத்திருந்தார்.
இதற்குக் காரணம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை அரசியலில் இருந்தே ஒதுக்கி வைக்கும் விதத்தில் ஜனாதிபதி ஜெயவர்த்தனே திட்டம் வைத்திருந்தார் என்பது பிரேமதாசவுக்குத் தெரிந்திருந்தது.
ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட தினத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய ஜனாதிபதி ஜெயவர்த்தனே, அந்த விவகாரத்தை வெளிப்படையாகத் தெரிவித்தும் இருந்தார். பல அமைச்சர்களுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் பாணியில் இருந்தன ஜனாதிபதி ஜெயவர்த்தனே கொடுத்த சில பதில்கள்.
இதோ அன்றைய செய்தியாளர் மாநாட்டில் சில கேள்விகளுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனேவால் கொடுக்கப்பட்ட பதில்களைப் பாருங்கள் புரியும்.
கேள்வி: இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு ஒப்பந்தம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?
ஜெயவர்த்தனே: ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது என்பது இலங்கை என்ற நாட்டின் கைகளில் இருக்கின்றது. இலங்கையின் கையில் இருக்கின்றது என்றால் ஜனாதிபதியான எனது கையில் இருக்கின்றது என்றும் அர்த்தம். நான் நிறைவேற்றுவேன்.
கேள்வி: எனது கேள்வி என்னவென்றால், இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு உங்களது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. உங்களது பிரதமரே (பிரேமதாச) இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும்போது இதை எப்படி உங்களால் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் சென்று ஒப்புதலைப் பெறமுடியும்?
(தொடரும்)
இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 05
இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 04