ஒரு பெண் திருமணம் முடித்துவிட்டால் அவள் வேறொருவனுக்குச் சொந்தமாகிவிடுகிறாள். அவளுடன் முன்னர் அந்நியோன்னியமாக பழகிய அனைவருமே இதன் காரணமாக தமது அந்நியோன்னியத்தை சற்றுத் தளர்த்திக் கொண்டு நடக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அப்பெண்ணுடன் சகஜமாக ஒரு வரம்பிற்குட்படாமல் பேசிப்பழகிய நண்பர்கள் ஏன் உடன்பிறப்புக்கள் கூட, அவள் திருமணம் முடித்த பின்னர் அவளுடனான உறவை சற்றுத் தளர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.
திருமணத்துக்கு முன்பு வரை தனது தந்தையின் பெயரை முதலெழுத்துக்களாகப் பயன்படுத்தியவள் பிறகு தனது கணவனின் பெயரை முதலெழுத்துக்களாகப் பயன்படுத்துகிறாள்.
இந்து மதத்தைப் பொறுத்த வரை ஒரு பெண்ணானவள் திருமணம் முடித்தவள் என்று அடையாளம் கண்டுகொள்ள சில குறி காட்டிகள் இருப்பது வழக்கம். நெற்றியில் குங்குமம், நெற்றி வகிட்டில் இலேசாக குங்குமத் தடவல், கழுத்தில் தாலி தரித்திருப்பது, கால் விரலில் மெட்டி என அவை அமைந்துள்ளன.
இதனால் சில ஆடவர்கள் இச்சைவயப்பட்டு அவர்களை நெருங்குவது தவிர்க்கப்படுகிறது. அவ்வாறு நெருங்க முற்படுபவர்களும் அத்தகைய காரியத்தைச் செய்ய தயங்குவார்கள்.
சிலர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தேவையை நிறைவேற்றிக்கொள்ள நினைத்தாலும் அதற்கு மனம் இடம் தராது. ஆகவே சுதாகரித்துக் கொண்டு தனது முயற்சியிலிருந்தும் பிரயத்தனத்திலிருந்தும் விலகிக் கொள்வார்கள்.
ஆனால் பௌத்தக் கலாசாரம் சற்று வேறுபட்டது. அங்கே பெண்கள் தாலி தரிப்பதில்லை. நெற்றியில் குங்குமம் இடுவதில்லை. அத்தோடு பொதுவாகவே அப்பெண்கள் மனதில் எந்த ஒளிவும் மறைவுமின்றி வெள்ளந்தியாகப் பேசிப் பழகக் கூடிய தன்மை பெற்றவர்கள்.
இயல்பாகவே புன்முறுவல் பூத்து எந்த அந்நியரோடும் கதைக்கக் கூடியவர்கள். சோஷலிசத் தன்மை வாய்க்கப் பெற்றவர்கள்.
ஆனால் இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் தகாத முறையில் நடந்து இன்பம் நுகர நினைப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். அந்தவகையில் ஒரு திருமணமான பெண்ணின் மீது ஒருவன் கொண்ட வெறித்தனமான ஆசையே இம்முறை பதிவாகின்றது.
ஆம். வெலிகம, மிரிஸ்ஸகம என்ற பிரதேசத்தில் குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளாள். தனது மூத்த பிள்ளையைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வதும் தனது கணவனை கவனித்துக் கொள்வதோடு இரண்டரை வயதேயான பிறிதொரு குழந்தையையும் கவனித்து வந்துள்ளாள்.
தனது கணவனையன்றி வேறொரு ஆடவனை மனதளவிலும் நினைக்காத அவள் தனது கணவனுடன் மகிழ்ச்சியானதொரு குடும்ப வாழ்க்கையை நடத்திச் சென்றுள்ளாள்.
ஆனால் இந்த மகிழ்வான வாழ்க்கையின் இனிமையையும் சுகந்தத்தையும் நீண்ட நாள் அனுபவிக்க அப்பெண்ணுக்கு கொடுத்து வைக்கவில்லை. அவளது இல்லற வாழ்வின் இன்பம் வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.
இப்பெண்ணின் வீட்டுக்கு அருகாமையில் வசித்து வந்த ஒருவனின் கண்கள் இப்பெண்ணைச் சுற்றி அடிக்கடி வட்டமிட்டு வந்துள்ளன. அவனது மனம் இவளை அடைய வெகுநாட்களாக துடித்துள்ளது.
இத்தனைக்கும் இவள் ஒரு திருமணமான பெண். அதன் அடையாளமாக அவளுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனரென்று கூட அவனது மனம் எண்ணவில்லை.
அவன் எந்த விலைக் கொடுத்தும் அவளை அடைய வேண்டும் என்ற தீராத மோகங் கொண்டு அவளைப் பின்தொடர்ந்துள்ளான். ஆனாலும் இவனொரு இராணுவ வீரன்.
இவன் மனதில் நினைத்துச் செய்யக் காத்திருக்கும் காரியத்திற்கும் அவனது தொழிலுக்கும் எவ்விதப் பொருத்தப்பாடும் கிடையாது. அவன் இராணுவத்தை விட்டு விலகி வீட்டோடு தாய் தந்தையருடன் இருந்துள்ளான்.
அவர்களும் கூட இவனது இச்செய்கைகள் பற்றி கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவனது வீடும் குறித்த அப்பெண்ணின் வீடும் அருகருகே இருந்தமையால் அடிக்கடி அவளிடம் சென்று அவள் மீதான தனது விருப்பத்தைக் கூறியுள்ளான்.
அத்தோடு தன்னுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுமாறு பல தடவைகள் அவளை தொந்தரவு செய்துள்ளான்.
ஆனாலும் அப்பெண் கட்டிய கணவனுக்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் மனதார துரோகமிழைக்க நினைக்கவில்லை. நல்ல கணவனும் அன்பைப் பொழியும் முத்தான இரு குழந்தைகளும் இருக்கும் போது அவளுக்கு வேற்று ஆடவனுடன் கள்ள உறவு வைத்துக் கொள்ளும் அவசியம் ஏற்படவில்லை. இத்தகைய இழிவான எண்ணமும் அவளுக்கு இருக்கவில்லை.
அதனால் அவள் தொடர்ந்தும் அவனது விருப்பத்தை நிராகரித்து வந்துள்ளாள். ஆனாலும் அவன் அவளை விடுவதாக இல்லை. மோக முள் அவனை வெகுவாகத் தைத்துவிட்டது.
மதுவுக்கு அடிமையானவன் கூட அதிலிருந்து மீண்டு இயல்பு நிலையை அடைய வாய்ப்புள்ளது. ஆனால் மாதுவுக்கு அடிமையானவன் ஒருபோதும் அதிலிருந்து மீட்சி பெற்றுத் திரும்பவே முடியாது. அது திண்ணம்.
அசகாய வல்லமை படைத்த இராவணேஸ்வரனே சீதை என்றவளின் மீது கொண்ட தீராத மோகத்தால் தானே அழிவுண்டான். இவன் மட்டுமென்ன விதிவிலக்கா? இவன் தொடர்ந்து அப்பெண்ணை தனது ஆசைக்கு இணங்கச் செய்ய அவளைத் துன்புறுத்தி வந்துள்ளான்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அவனது தொந்தரவு எல்லை மீற ஆரம்பிக்கவே இது குறித்து அவள் தனது கணவனிடம் கூறியுள்ளாள். அவளது கணவன் இதனை சட்ட ரீதியாக அணுக தீர்மானித்துள்ளான்.
இவனது இந்த எல்லை மீறிய தொந்தரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமையால் கணவனும் மனைவியும் வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளனர்.
அதன் விளைவாக அவன் மே மாதம் 22 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பதினான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். அதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளான்.
கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதி வெளியில் வந்தவன் எந்த மாறுதல்களும் இல்லாமலேயே திரும்பி வந்துள்ளான். அவனது உள்ளத்திலிருந்த தீராத மோகம் பழிவாங்கும் உணர்ச்சியாக பரிமாற்றமடைந்துள்ளது. அவன் முன்யோசனையாக செயற்படவில்லை. மீண்டும் தனது எண்ணத்தை அவளிடம் வெளியிட்டுள்ளான்.
தன்னை சிறைக்கு அனுப்பியதை மனதில் வைத்துக் கொண்டு, அந்த ஒரே காரணத்திற்காக அவளைத் தொடர்ந்து பார்க்கும் போதெல்லாம் மிரட்டி அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளான்.
அவன் சென்ற மாதம் 30 ஆம் திகதியும் அவளை தனது விருப்பத்துக்கு இணங்குமாறு கூறி மிரட்டி நச்சரித்துள்ளான். இதனை மென்மேலும் அனுசரித்துப் பொறுக்க முடியாதவளாய் வெலிகம பொலிஸ் நிலையத்தில் மீண்டுமொருமுறை முறையிட்டுள்ளாள்.
இதனால் பொலிஸார் அவனது வீட்டுக்கு இரண்டு நாட்கள் தொடர்ந்து சென்று அவனை விசாரணைக்குட்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அது பலனளிக்கவில்லை.
ஆனாலும் இப்பெண் இரண்டாவது முறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்த போது பொலிஸார் ஒழுங்காக தமது கடமையை நிறைவேற்றவில்லையென அப்பெண்ணின் உறவினர்கள் கூறியுள்ளனர். நிலைமை இவ்வாறிருக்க, அப்பெண் வழக்கம் போல தனது இல்லற வாழ்க்கையை செவ்வனே நடத்த ஆரம்பித்துள்ளாள்.
ஆனாலும் அவள் சிறிதும் எதிர்பார்த்திராத சமயத்தில் இயமனின் பாசக்கயிறு அவளை நோக்கிப் பாய்வதற்குத் தருணம் பார்த்துக் காத்திருந்துள்ளது.
இதனை அவள் அறியவில்லை. அவனை சிறைக்கு அனுப்பியதன் விளைவு மோசமான பலனைத் தருமென்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆனால் நடக்க இருந்தது நடந்து முடிந்தது.
ஆம். அன்றைய தினமும் வழமை போலவே குறித்த பெண்ணின் கணவன் அவளிடமிருந்தும் அவனது பிள்ளைகளிடமிருந்தும் விடைபெற்று தான் பணிபுரியும் ஹோட்டலுக்குச் சென்றுள்ளான். அவனும் எந்த பாரதூர விளைவுகளைப் பற்றியும் சிந்தித்திருக்கவில்லை.
அதனையடுத்து அப்பெண் தனது இரண்டரை வயதுக் குழந்தையை சுமந்து கொண்டு மூத்தப் பிள்ளையை அறநெறி வகுப்புக்கு அழைத்துச் சென்றுள்ளாள். அப்போது தான் அவன் இவளை தீர்த்துக் கட்டுவதற்காக இவளை பின்தொடர்ந்து வந்துள்ளதாக பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
ஐம்பது மீற்றர் தூரம் வரையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் தட்டையான ஆயுதமொன்றினால் அவளது தலையை பின்புறமாக வந்த குறித்த இராணுவ வீரன் தாக்கியுள்ளான்.
இத்தாக்குதலினால் அவளது தலையின் பின்புறத்திலும் கழுத்திலும் பலத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவளை ஆயுதம் கொண்டு கொன்று வீழ்த்திய கையோடு அதேவேகத்தில் தனது வீட்டுக்குச் சென்று கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
இச்சம்பவத்தில் பலியான பெண்ணின் கணவன் தனது மனைவியைப் பிரிந்த ஆற்றாமைத் துயரை வெளிப்படுத்திப் பேசுகையில்,
“எனது மனைவிக்கு வெகுநாட்களாகவே அந்த இராணுவ வீரன் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறான். தன்னோடு காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுமாறு எனது மனைவியை காணும் போதெல்லாம் கேட்டு நச்சரித்துள்ளான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இறுதியில் என்னிடமே இதைப் பற்றி என் மனைவி பகிரங்கமாகக் கூறினாள். அவளை நான் சமாதானப்படுத்தினேன்.
பிறகு அவளுடன் வெலிகம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்தேன். அப்போது பொலிஸார் முதல் முறை அவனை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
அவன் அங்கிருந்து வெளியே வந்த பிறகு எனது மனைவியை பழைய படி மீண்டும் தொந்தரவு செய்துள்ளான். அதன் பிறகு மீண்டும் பொலிஸில் சென்று இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்னுமொரு முறைப்பாட்டைப் பதிவுசெய்தோம்.
ஆனால் பொலிஸார் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதனாலேயே இன்று நான் எனது மனைவியையும் எனது பிள்ளைகள் தங்கள் தாயையும் இழந்து நிர்க்கதியான நிலையில் தவிக்கின்றோம்.
பொலிஸார் எனது மனைவி இரண்டாவது முறை முறைப்பாடு செய்த போது அதனைக் கவனித்து தக்க நடவடிக்கை எடுத்து செயற்பட்டிருந்தால் இன்று இந்த நிலைமைக்கு நாங்கள் ஆளாகியிருக்கமாட்டோமல்லவா? ” என்று தன் மனதிலிருந்த துயரை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது குறித்த பெண்ணின் மரணம் தட்டையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டமையினால் மூளையிலும் மண்டையோட்டிலும் ஏற்பட்ட காயங்களினாலேயே சம்பவித்துள்ளதென மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டீ.டீ.சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை நீதிவான் லலிதா வித்தானாச்சியின் உத்தரவுக்கமையவே இப்பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் வழிகாட்டலுக்கமைவாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோனின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் குழுவொன்று இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
(கே.நிரோஷ்குமார்)