தமிழ் கட்சிகளின் ஐக்கியத்தினால் ரி.என்.ஏ அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தது போலத் தெரிந்தது. ரணில் விக்கிரமசிங்கா பிரதம மந்திரியானதும் சமாதான நடவடிக்கைகளில் ஒரு மகத்தான முன்னேற்றம் ஏற்பட்டது.
எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் அமைப்பாக ரி.என்.ஏ செயற்படும் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். ரி.என்.ஏ உருவாக்கப்பட்டபோது சிலர், அந்தக் கூட்டணி ஐரிஸ் குடியரசு இராணுவத்தின் (ஐஆர்ஏ) ‘சின்பென்” போல எல்.ரீ.ரீ.ஈ யினது அரசியற் கட்சியாக இருக்கும் என நினைத்தார்கள். வேறு சிலர் சமாதான பேச்சுக்களில் ரி.என்.ஏ முக்கிய பங்கினை வகிக்கப் போகிறது எனும் நம்பிக்கையை வளர்த்திருந்தார்கள்.
ஆனால் அப்படி நடக்கவில்லை, சமாதான பேச்சுக்களில் ஒரு அரசியல் பாத்திரமாகிய ரி.என்.ஏயினது பங்கினை எல்.ரீ.ரீ.ஈ தொடக்கத்திலேயே நிராகரித்து விட்டது. புலிகள் இப்போது ரி.என்.ஏ மீது தங்கள் கட்டுப்பாட்டை தீவிரமாகச் செலுத்த விரும்பினார்கள்.
ரி.என்.ஏ யினை சுயாதீனமாக இயங்கவிட்டு அரசியல் நல்லெண்ணத்தை பாராமரிப்பதற்குப் பதிலாக இந்த புதிய அமைப்பை தனது காலடியின் கீழ் கொண்டு வருவதையே எல்.ரீ.ரீ.ஈ விரும்பியது.
மேலும் தமிழ் மக்களுக்கும் மற்றும் பெரிய அளவில் உலகத்துக்கும் எல்.ரீ.ரீ.ஈ சொல்ல விரும்பியது, புலிகளாகிய தாங்கள்தான் எஜமான்கள் மற்றும் ரி.என்.ஏ தங்கள் கட்டளையை சிரமேற் கொண்டு பணியாற்றும் வெறும் ஏவலாட்கள் என்பதை.
குறுகிய காலத்துக்குள்ளேயே ரி.என்.ஏ யினது அடிமைத்தனம் வெளிப்படையாகத் தெரிந்தது. இந்தக் காட்சியில் மிகவும் ஏமாற்றம் தருவது என்னவென்றால் ரி.யு.எல்.எப் பின்பற்றிய இழிவான அடிமைத்தனம்தான், ஆனால் வீரசிங்கம் ஆனந்தசங்கரி இதற்கு மாறாக கௌரவமான ஒரு விதிவிலக்காகத் திகழ்ந்தார்.
ரி.யு.எல்.எப் இடம் அதன் சொந்தமான அரசியல் பலம் இருந்தது மற்றும் புலிகளின் ஆணைக்கு அடிபணியாமல் நிற்கும் சாத்தியமும் இருந்தது, ஆனால் ஒருவேளை புலிகளினால் ஏற்படக்கூடிய மரண அச்சம் காரணமாக அதை செய்ய அவர்களுக்கு துணிவு வரவில்லை.
ஆரம்பத்தில் ரி.என்.ஏ கட்சிகளின் ஒரு தளர்வான அமைப்பாகவே ஒன்று சேர்ந்திருந்தது, ஆனால் புலிகள் அதன் மொத்தக் கட்டுப்பாட்டையும் நிறுவிய பிறகு அவர்களால் இந்த ஐக்கியத்தை ஒரு முழு கட்டமைப்பாக உறுதியாக்க முடியுமாக இருந்தது.
ரி.என்.ஏ யினை கட்சிக் கட்டமைப்பு மற்றும் யாப்புகளுடன் கூடிய ஒரு அரசியற்கட்சியாக பதிவு செய்யவும் அவர்களால் முடியுமாக இருந்தது. ஆனால் எல்.ரீ.ரீ.ஈ அப்படிச் செய்யவில்லை மற்றும் உண்மையில் ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எப் என்பன அத்தகைய ஆலோசனைகளை வழங்கியபோதும் அவை தடுக்கப் பட்டன.
மாறாக ரி.என்.ஏ யில் உள்ள கட்சிகளை ஒரு நிரந்தரமான கூட்டணியாக மாற்றாமல் தனித்தனியான கட்சியாக வைத்திருப்பதையே எல்.ரீ.ரீ.ஈ விரும்பியது.
திறமையாகக் கையாழுதல்
இதனால் ஒவ்வொரு கட்சியையும் வௌ;வேறாக திறமையாக கையாழுவதற்கு எல்.ரீ.ரீ.ஈக்கு இயலுமாக இருந்தது. அதேநேரம்; சமாந்தரமான அல்லது போட்டியான ஒரு தமிழ் அரசியல் அமைப்பு உதயமாவதை அல்லது அபிவிருத்தி அடைவதை புலிகள் முன்கூட்டியே உணர்ந்தார்கள்.
ரி.என்.ஏ மொத்தமான ஒரு அமைப்பாகவும் மற்றும் சுயாதீனமான ஒரு கட்சியாக வலுப்பெறுவதை தடை செய்ததோடு எல்.ரீ.ரீ.ஈ கட்சிகளிடையே முரண்பாட்டையும் வளர்த்தது. ஒன்றுக்கு எதிராக மற்றது சூழ்ச்சி திறத்துடன் கையாளப்பட்டது.
ஒரு கட்சியில் உள்ள அங்கத்தவர்களை ஒருவருக்கொருவர் எதிராக மோதும்படியான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. உட்கட்சிவாதம் தூண்டிவிடப்பட்டது. தனிப்பட்ட கதைகளை காவுதல் ஊக்குவிக்கப்பட்டது.
2004 பாராளுமன்ற தேர்தலுக்கான சமயம் வந்தபோது எல்.ரீ.ரீ.ஈ தனது நிலையை மாற்றிக் கொண்டது. வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் ரி.என்.ஏயின் தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவதிலும் புலிகள் முக்கியமான பங்கினை வகித்தார்கள்.
2001 தேர்தலில் ரி.என்.ஏ, ரி.யு.எல்.எப் இன் சின்னமான சூரியனின் கீழ் போட்டியிட்டது. இப்போது ரி.யு.எல்.எப் உத்தியோக பூர்வமாகப் பிரிந்து ஆனந்தசங்கரியின் கீழ் சுயாதீனமாக இயங்கியது.
எனவே ஒரு புதிய சின்னம் தேவையாக இருந்தது. பெடரல் கட்சி என அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சியின் (ஐரிஏகே)சின்னமான வீடு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்( ஏ.சி.ரி.சி) சின்னமான சைக்கிள் ஆகிய இரண்டும் இருந்தது.
ரி.யு.எல்.எப்இனை உருவாக்குவதற்காக 1976லேயே ஐரிஏகே மற்றும் ஏ.சி.ரி.சி ஆகிய இரண்டையும் இணைத்திருந்த போதிலும் இவை இரண்டுமே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்கிற தங்களது தனித்துவமான அடையாளத்தை விசித்திரமான அரசியல் சூழ்நிலை காரணமாக தக்கவைத்துக் கொண்டே வந்தன.
ஐரிஏகே மற்றும் வீட்டு சின்னத்தின் கீழ் முன்செல்லுவது என எல்.ரீ.ரீ.ஈ முடிவு செய்தது. ஐரிஏகே யின் செயலாளர் சேனாதிராஜா.
ரி.என்.ஏயில் உள்ள கட்சிகளிடம் அவர்களது வேட்பாளர்களை முன்னிறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு மேலதிகமாக எல்.ரீ.ரீ.ஈயும் ஒரு புதிய சக்தியை அறிமுகம் செய்தது. எந்தக் கட்சியையும் சாராத சிலரது பெயர்களைக் கொண்ட பட்டியல் ஒன்று எல்.ரீ.ரீ.ஈயின் வசம் இருந்தது.
அவர்களில் பலர் எல்.ரீ.ரீ.ஈயி;ன் முன்னணி நிறுவனங்களில் இருந்த அலுவலகப் பொறுப்பாளர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் கடுமையான புலி ஆதரவாளர்கள். ஒரு சிலர் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்குமான ரி.என்.ஏ வேட்பாளர் பட்டியலை எல்.ரீ.ரீ.ஈ தயாரித்தது.
அந்தப் பட்டியலில் ரி.யு.எல்.எப், ஏ.சி.ரி.சி, ரெலோ, ஈபிஆர்எல்எப் கட்சிகளின் வேட்பாளர்களுடன் கட்சி சாராத அங்கத்தவர்கள் பெயர்களும் அடங்கியிருந்தன. வடக்கிற்கான பட்டியலை தமிழ்செல்வன் தனது பிராந்திய தளபதிகளுடன் ஆலோசனை செய்து இறுதி செய்தார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான பட்டியல் கருணா மற்றும் கரிகாலன் ஆகியோரால் இறுதி செய்யப்பட்டது. திருகோணமலை பட்டியல் பதுமன் மற்றும் திலக் ஆகயோரால் இறுதி செய்யப்பட்டது. அது இறுதி செய்யப்பட்டதும் உத்தியோகபூர்வமாக ரி.என்.ஏ அதை அனுமதித்தது. இது ரி.என்.ஏ என்பதை டக்ளஸ் தேவானந்தா ஏளனமாக “புலிகள் பரிந்துரை செய்த முகவர்கள்” என மொழி மாற்றம் செய்ய வழியேற்படுத்தியது.
தேர்தல்
தேர்தல் பிரச்சாரம் மிகுந்த அக்கறையுடன் ஆரம்பமானது. 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அரசியல் அலுவலகம் என்கிற வடிவில் புலிகள் பிரசன்னமாக இருப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தது.
இப்போது இந்த அலுவலகங்களில் புலி அங்கத்தவர்கள் களஞ்சியப்படுத்தப் பட்டார்கள். அவர்களது பணி ரி.என்.ஏ யிற்காக பரப்புரை மேற்கொள்வது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் புலிகள் சார்பான மாணவர் அமைப்புகளுடன் சேர்ந்து திருநெல்வேலி மற்றும் வந்தாறுமூலை வளாகங்களில் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் புலிகளின் ஒரு மோட்டார் சைக்கிள் படையணி, ஆனந்தசங்கரி மற்றும் தேவானந்தா போன்றவர்களின் போட்டி வேட்பாளர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் இறங்கியிருந்தது. தேர்தல் நாளன்று 5000 தொண்டர்களைக் கொண்ட ஒரு செயல்படை ஒரு பிரமாண்டமான வாக்கு மோசடிக் களியாட்டத்தில் இறங்கியிருந்தது.
தேர்தல் நாளும் வந்தது மற்றும் தேர்தல் முடிவுகள் நிச்சயமாக ரி.என்.ஏ க்கு திகைப்பூட்டுவதாகவே இருந்தது. எல்.ரீ.ரீ.ஈ தனது பங்குக்கு பரப்புரையை மேற்கொண்டு பெருமளவு வாக்காளர்களை வாக்களிக்க வைப்பதை உறுதிப்படுத்தியதுடன் பிரமாண்டமான அளவில் வாக்கு மோசடியையும் மேற்கொண்டிருந்தது. தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர் மத்தியில் ரி.என்.ஏ கிட்டத்தட்ட அனைத்தையுமே வாரிக் கூட்டி அள்ளிவிட்டது.
யாழ்ப்பாணத்தில் ரி.என்.ஏ ஒன்பதில் எட்டு ஆசனங்களை வென்றது. செல்வா.கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், நடராஜா ரவிராஜ், சோமசுந்தரம் சேனாதிராஜா, சின்னையா சிவநேசன் மற்றும் எம்கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவாகினார்கள். டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் தனியான ஈபிடிபி வெற்றியாளர்.
வன்னியில் ரி.என்.ஏ ஆறில் ஐந்து ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. செல்வம் அடைக்கலநாதன், விநோதராகலிங்கம், சிவசக்தி ஆனந்தன், சதாசிவம் கனகரத்தினம் மற்றும் சிவானந்தன் கிஷோர் ஆகியோர் தெரிவாகியிருந்தனர். ஆறாவது ஆசனம் முஸ்லிம் காங்கிரசின் றிசாத் பதியுதீனுக்குச் சென்றது.
திருகோணமலையில் ரி.என்.ஏ மிக அதிக அளவான வாக்குகளைப் பெற்றதால் போனஸ் ஆசனமும் அதற்கு கிடைத்தது. சம்பந்தன் மற்றும் துரைரத்தினசிங்கம் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
அம்பாறையில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு தோல்வியடைந்தார், ஆனால் ரி.என்.ஏ சார்பில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான கே.பத்மநாதன் தெரிவானார்.
மட்டக்களப்பில் உள்ள ஐந்து ஆசனங்களில் நான்கினை ரி.என்.ஏ வென்றது. ரி.கனகசபை, தங்கேஸ்வரி கதிர்காமர், ரி.ஜெயானந்தமூர்த்தி மற்றும் கிங்ஸ்லி ராஜநாயகம் ஆகியோர் தெரிவானார்கள்.அனுபவம் மிக்க மட்டக்களப்பு அரசியல்வாதியும் 1990 முதலே பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் ஜோசப் பரராஜசிங்கம் தோல்வியடைந்தார்.
அதேவேளை ரி.என்.ஏ இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு உரிமையுள்ளதாக இருந்தது. அதில் ஒன்றுக்கு ஜோசப் பரராஜசிங்கமும் மற்றதுக்கு எம்கே கனகேந்திரன் என்கிற ஈழவேந்தனும் நியமிக்கப் பட்டார்கள். ஈழவேந்தன் அசலில் பெடரல் கட்சி மற்றும் ரி.யு.எல்.எப் என்பனவற்றை சேர்ந்தவராக இருந்தாலும் தற்பொழுது எல்.ரீ.ரீ.ஈ துதிபாடுபவராக மாறியிருந்தார்.
இருபத்தியிரண்டு
இப்போது தெரிவு செய்யப்பட்ட இருபதுபேர் மற்றும் நியமிக்கப்பட்ட இருவர் எல்லாமாக 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரி.என்.ஏ வசம் இருந்தார்கள். இந்த 22ல் பதினொருபேர் ரி.என்.ஏயின் ஆரம்பத்தில் இருந்த கட்சிகளைச் சோந்தவர்கள்.
அவர்கள் சம்பந்தன், துரைத்தினசிங்கம், சேனாதிராஜா, ரவிராஜ், பரராஜசிங்கம், (ரி.யு.எல்.எப்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (ஏசிரிசி), செல்வம் அடைக்கலநாதன்,விநோதரராகலிங்கம், சிவலிங்கம் (ரெலோ)மற்றும் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எப்) ஆகியோர். எந்தக் கட்சியையும் சாராத மற்றும் பதினொரு பேர்கள் இருந்தார்கள்.
அவர்கள் செல்வா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன்,சின்னையா சிவநேசன்,சதாசிவம் கனகரத்தினம்,சிவநாதன் கிஷோர், ரி.கனகசபை, தங்கேஸ்வரி கதிர்காமர், ஜெயானந்தமூர்த்தி, அரியநேந்திரன், கே.பத்மநாதன், மற்றும் எம்கே ஈழவேந்தன் ஆகியோர். எனவே ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் கட்சியை சாராதவர்கள் என சம பங்காக பிரிக்கப்பட்டிருந்தனர்.
இதை இலகுவாக சொல்வதானால் இரு தரப்புமே கிரிக்கட், கால்பந்து அல்லது ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்கு பொருத்தமான எண்ணிக்கையை கொண்டிருந்தார்கள். கடைசியாக ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது இதிலாவது நடைமுறைப் படுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம், வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் நடைபெறவில்லை என்கிற கண்டனத்தோடு தனது அறிக்கையை வெளியிட்டதோடு, 2004ல் ரி.என்.ஏயின் தேர்தல் வெற்றி களையிழந்து போனது.
இது ரி.என்.ஏ யில் வென்றவர்கள் அனைவரும் மோசடியால்தான் வென்றார்கள் என்று அhத்தம் இல்லை. அவர்களில் பலர் தங்கள் சொந்த உரிமையில் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அவர்களது பெரும்பான்மை அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிலர் முற்றிலும் மோசடியான வாக்களிப்பு மூலமாகவும் வெற்றி பெற்றிருந்தார்கள்.
புலிகள் உதவியதன் காரணமாக ரி.என்.ஏ தேர்தலில் வெற்றி வாகை சூடியதுடன் 22 ஆசனங்களையும் வென்றிருந்தது. எனினும் இது, அறிவை பெறுவதற்காக சாத்தானிடம் உயிரை விற்ற “பவுஸ்ரெயின் பேரம் பேசலை” ஒத்ததாக இருந்தது. ரி.என்.ஏ தமிழ் மக்களின் குரலை ஒலிப்பதற்குப் பதிலாக புலிகளின் குரலை ஒலிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அவர்கள் பற்றிய நம்பகத்தன்மை உலகத்தின் கண்களிலும் மற்றும் ஸ்ரீலங்காவின் மீதிப்; பகுதியிலும் பூச்சியமாக இருந்தது.
அடிமைத்தனம்
புலிகளும், ரி.என்.ஏயினை அரசியல் அடிமைத்தனத்துக்கு தாழ்த்தியதுடன் அத்தகைய அடிமைப் பண்பு நன்கு பிரசித்தமாவதையும் உறுதிப்படுத்தினார்கள். ரி.என்.ஏயினை அடிக்கடி கிளிநொச்சிக்கு வரவழைத்து அங்குவைத்து புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்செல்வன் அவர்களுக்கு அறிவுறுத்தல்களையும் மற்றும் கட்டளைகளையும் வழங்கினார்.
எல்.ரீ.ரீ.ஈ சார்ந்த விழாக்களில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் புலிகளின் குறியீட்டு சின்னங்களை அணிந்துகொண்டு பிரபாகரன் மற்றும் புலிகளைப் புகழும் துதிப்பாடல்களை பாடவும் வேண்டியிருந்தது.
பாராளுமன்றத்தில் ரி.என்.ஏ ஒரு பரிதாபகரமான கூட்டமாக இருந்தது. சம்பந்தனையும் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களையும் தவிர வேறுயாரும் பயனுள்ள பங்களிப்பு எதையும் வழங்கவில்லை. அநேகமான ரி.என்.ஏ அங்கத்தவர்கள் மோசமாகவும் எரிச்சலூட்டும் வகையிலும் பாராளுமன்றத்தில் நடந்து கொண்டார்கள்.
அவர்களில் எம்கே சிவாஜிலிங்கம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மிகவும் மோசமான பெயரைப் பெற்றிருந்தார்கள். இவை அனைத்தினதும் மொத்த விளைவாக நம்பகத்தன்மை மற்றும் மரியாதை என்பனவற்றில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இதேபோல வெளிநாட்டு இராஜதந்திரிகள் சமூகமும் ரி.என்.ஏயினை அவமதிப்பு மற்றும் வெறுப்புடனேயே பார்த்தது.
கூட்டங்களின் தீர்மானங்கள் பின்பற்றப்பட்டாலும் நடைமுறையில் எந்த கூட்டமும் சிரத்தையுடன் எடுத்துக்கொள்ளப் படவில்லை. குறிப்பாக இந்தியாவுடனான கூட்டங்களிலும் இப்படியே நடைபெற்றது. ரி.என்.ஏ தூதுக்குழு புதுதில்லிக்கு வழமையான யாத்திரைகளை மேற்கொண்ட போதிலும் அதற்கு அற்ப மதிப்பே வழங்கப்பட்டது.
ரி.என்.ஏயினை புலிகளின் ஒரு இணைப்பாக பார்த்தார்களே தவிர வேறெதுவும் இல்லை. இவை அனைத்தினதும் இறுதி விளைவாக, பாராளுமன்றத்தில் உள்ள 225 ஆசனங்களில் ரி.என்.ஏக்கு 22 ஆசனங்கள் கிடைத்திருந்த போதிலும் அதனால் ஸ்ரீலங்காவிலோ அல்லது வெளிநாட்டிலோ பயனுள்ள எதையும் சாதிக்க முடியவில்லை.
புலிப்பாட்டு
2009ல் எல்.ரீ.ரீ.ஈ அழிக்கப்பட்ட பின்னர், நான் உட்பட அநேகர் நம்பியது ரி.என்.ஏ கடந்த காலத்திலிருந்து மீண்டு ஒரு புதிய தொடக்கத்தை பெறும் என்று. எனினும் அது நடக்கவில்லை. ஒருவேளை, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சிவி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபைக்கு ரி.என்.ஏயின் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் புலிப்பாட்டு பாட ஆரம்பித்ததுதான் இவை அனைத்தையும் விட எமக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
கூட்டமைப்பு- புலிகள் இணைப்பு: கூட்டமைப்பு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததெப்படி? (பாகம்-2)