மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன் தினம் நான்கு பேர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமும், இன்றைய தினம் ஒருவர் தூக்கிட்டும், இன்னும் இருவர் நஞ்சு அருந்தியும் தற்கொலை செய்துள்ள சம்பவமும் பதிவாகியுள்ளது.
நேற்றைய முன்தினம் ஏறாவூர் போலீஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி,கோரகள்ளிமடு ஆகிய பகுதிகளில் முறையே முப்பது வயதுடைய செல்வம் விக்னேஸ்வரன் ,நாப்பதிரெண்டு வயதுடைய காசிநாதன் கமலேஸ்வரி ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
இம்மரண விசாரணைகளுக்கு பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் ,ஏறாவூர் பொலிசாருடன் சம்பவம் இடம் பெற்ற இடத்துக்கு சமூகமளித்திருந்தார்.
மேலும் இன்று அதிகாலை எண்பத்தேழு வயது நிரம்பிய முதியவர் ஒருவர் அலைமகள் வீதி,விநாயகர் கிராமம்,சித்தாண்டி எனும் பிரதேசத்தில் முந்திரிமரக் கிளையில் நைலான் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவத்தோடு….,
களுவங்கேனியை சேர்ந்த இருபத்திமூன்று வயதுடைய அருளம்பலம் அருள்பிரகாஷ் என்ற இளைஞனும், செங்கலடி, குமாரவேலியார் கிராம மயிலிப்போடி நவரட்ணம் என்ற ஐம்பத்தாறு வயதுடைய குடும்பஸ்தரும் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவமும் பதிவாகியுள்ளது.
இவ்வனைத்து மரண விசாரணைகளுக்கும் சமூகமளித்த பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள், எமது மாவட்டத்தில் அநேகமான தற்கொலைகள் கடன் தொல்லையினாலும்,குடும்பத் தகராறு காரணமாகவும், போதைப்பொருள் பாவனை மூலமாகவும் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இவ்வாறான தற்கொலை வீதங்களை குறைப்பதற்கு கிராம,நகர மட்டங்கள் தோறும் விழிப்புணர்வு அமர்வுகள் சம்பந்தப்பட்ட தரப்பினர்களால் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.</div>
சம்பவம் பதிவேற்றம் செய்யும் போது மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு போலீஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் குளத்தில் நட்பிட்டிமுனையை முனையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.