இயற்கைத் துறைமுகத்துடன் கூடிய, திருகோணமலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மீண்டும் ஒரு சர்வதேச காய்நகர்த்தல்கள் ஆரம்பமாகியுள்ளன. திருகோணமலையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா நீண்டகாலமாகவே முயற்சித்து வந்தது.
அதனைத் தடுப்பதற்காகவும், இலங்கையில் அதிகரித்து வந்த அமெரிக்கத் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் தான், 1987ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி இலங்கையுடன் உடன்பாடு செய்து கொண்டது இந்தியா.
அந்த உடன்பாட்டுக்கு அமைய, இந்தியாவின் நலன்களைப் பாதிக்கக் கூடிய வகையில், வேறெந்த நாட்டுக்கும், திரு கோணமலை உள்ளிட்ட இலங்கையின் துறைமுகங்களை இராணுவத் தேவைக் குப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்ற இணக்கம் ஒன்று உருவானது.
இந்திய – இலங்கை உடன்பாட்டுக்குப் புறம்பாக, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும், இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்திக்கும் இடையில், பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களில் இதுகுறித்து விபரிக்கப்பட்டுள்ளது.
அப்போது, இலங்கையின் துறைமுகங்கள் மீதே அமெரிக்காவினது கவனம் இருந்ததே தவிர, விமானப்படைத் தளங் கள் மீது அதிகமான கவனம் இருக்கவில்லை. எனவே அவை குறித்து ஏதும் விபரிக்கப்பட்டிருக்கவில்லை.
இப்போது, இலங்கையின் துறைமுகங்களையோ, விமானத்தளங்களையோ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எண் ணம் அமெரிக்காவுக்குக் கிடையாது.
ஏனென்றால், முன்னர், எதிரெதிர் முனைகளில் இருந்த இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது ஒரே அணியாக வந்து விட்டன.
இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நகர்வையும், தெற்காசியாவில் மேற்கொள்வதில்லை என்பதே அமெரிக்காவின் இப்போதைய கொள்கை.
ஆனால், இப்போது, இலங்கையின் துறைமுகங்கள், விமானத்தளங்கள் மீது சீனா கண் வைக்கத் தொடங்கியுள்ளது.
1980களில், அமெரிக்காவிடம் இருந்து இந்தியா எத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதோ, அதுபோலவே இப்போது சீனாவிடம் இருந்து இந்தியா எதிர்கொள்கிறது.
அமெரிக்காவை விடவும், வலிமையாக சீனா இலங்கையில் ஊடுறுத்து நிலைகொள்ள முனைகிறது.
இலங்கையின் துறைமுகங்கள், விமானத் தளங்களின் மீது மட்டுமன்றி, உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்திலும், கால் வைத்து, ஒட்டுமொத்தமாக இலங்கை யைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சீனா முனைகிறது.
அதற்காக சீனா இலங்கைக்கு என்றுமில்லாத அளவுக்கு- எந்தக் கட்டுப்பாடுகளுமின்றிக் கடன்களை அள்ளி வீசுகிறது.
தெற்காசியாவில் தனக்குச் சவால் விடக் கூடிய நாடான இந்தியாவைச் சுற்றி ஒரு வளையத்தை அமைப்பதே சீனாவின் திட் டம். அதனை முற்றிலும் வெற்றிகரமாக செயற்படுத்த வேண்டுமானால், இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக் குள் காலடி எடுத்து வைத்த சீனா அதையடுத்து, விமான நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், வீதிகள், ரயில் பாதைகள் என்று கால் வைக்காத துறைகளே இல் லை. இப்போது, சீனாவின் கவனம் நடுத்தரக் கைத்தொழில்களின் மீதும் திரும்பி விட்டுள்ளது.
இதனால் உள்ளூர் தொழில் நிறுவனங் கள் முடங்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
இத்தகைய சூழலில் தான், சீனக்குடாவில், விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க சீனா வுக்கு அனுமதியளிக்கும் முடிவை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கிறது. கடந்த மே மாதம் 29ஆம் திகதி இதற்கான முடிவு இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.
40.3 மில்லியன் டொலர் செலவில், சீனக்குடாவில் விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க, சீனாவின் தேசிய வான் பொறியியல் இறக்குமதி, ஏற்றுமதிக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி இந்தியாவுக்குப் பெரிதும் சவாலான விடயமாக மாறியுள்ளது.
18 சீன பொறியியல் நிபுணர்களைக் கொண்ட குழு, இலங்கைக்கு மேற்கொண் ட பயணத்தின் பின்னர் இந்த முடிவு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டது.
இதன்படி, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் உள்ள விமானப்படைப் பயிற்சி நிலையத்துக்கு அருகாக, இந்த விமானப் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படவுள் ளது.
இந்த விமானப் பராமரிப்பு நிலையம் எதற்காக அமைக்கப்படவுள்ளது – இதனால், இலங்கைக்கு என்ன இலாபம் -சீனாவுக்கு என்ன இலாபம் – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு – இந்த விடயங்கள் தான் முக்கியமாக ஆராயப்பட வேண்டியவை.
இலங்கை விமானப்படையிடம் உள்ள சீன விமானங்கள் அனைத்தையும், பராமரிக்கத்தக்க – பழுதுபார்க்கத்தக்க – புதுப்பிக்கத்தக்க – முழு வசதிகளையும் கொண்ட தாக இந்தப் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.
அதாவது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து விமானங்களினதும், உற் பத்திக்குப் பிந்திய சேவைகள் அனைத்தையும், வழங்குவதற்கான தளம் இது.
இலங்கை விமானப்படையிடம் இப்போது, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இஸ் ரேல் போன்ற நாடுகளிடம் வாங்கப்பட்ட பெருமளவு விமானங்கள் உள்ளன.
உத்தி யாகபூர்வமாக உறுதி செய்யப்பட்டாத நிலையில் இவற்றில், வை-12 போக்குவரத்து விமானங்கள் – 09 , எம்.ஏ-60 பயணிகள் விமானங்கள் – 02, எவ்-7 ஜெட் போர் விமானங்கள் 12, பி.ரி-6 எனப்படும் ஒற்றை இயந்திர அடிப்படைப் பயிற்சி விமானங் கள் – 08, கே-8 ஜெட் பயிற்சி விமானங்கள் – 06 ஆகியவை தான், சீனாவிடம் வாங்கப்பட்டவை.
அமெரிக்க, ரஷ்ய, உக்ரேனியத் தயாரிப்பு விமானங்களுடன் ஒப்பிட்டுப் பார்க் கப் போனால், சீனத் தயாரிப்பு விமானங் கள் விமானப்படையிடம் குறைவு தான்.
மொத்தம் 37 சீனத் தயாரிப்பு விமானங்கள் இப்போது விமானப்படையிடம் உள்ளன. அதேவேளை, அமெரிக்காவிடம் வாங்கப்பட்ட 40 விமானங்கள், ஹெலிகொப்டர்களை விமானப்படை வைத்திருக்கிறது.
ரஷ்யாவிடம் வாங்கப்பட்ட 53 விமானங்கள், ஹெலிகளையும் விமானப்படை பயன்படுத்தி வருகிறது.
ஆனால், அமெரிக்காவுடனோ, ரஷ்யாவுடனோ இத்தகைய விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான உடன்பாட்டை செய்து கொள்ள இலங்கை முன்வரவில்லை.
இந்த விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க சீனாவுக்கு அனுமதி அளித்தது பெரிய விவகாரமே இல்லை.
அதனை சீனக்குடாவில் அமைப்பதற்கு அனுமதி அளித்தது தான், சர்ச்சைக்குரியதாக உள்ளது.
இயற்கைத் துறைமுகமான திருகோணமலை, இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பெருந்தளமாகப் பயன்படுத்தக் கூடியது.
அதுவும் இந்தியாவுக்கு மிக அருகாக உள்ளது. கூடவே, விசாலமான விமான ஓடுபாதையும் இருக்கிறது.
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய எண்ணெய் குதங்களும் உள்ளன.
இவை தற்போது இந்தியாவின் ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இத்தகையதொரு கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் காலூன்றக் கிடைத்த வாய்ப்பை சீனா எப்படித் தான் நழுவவிட விரும்பும்?
சீனக்குடாவில், மெதுவாக விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுத்து. அங்கே தனது பொறியியலாளர்களையும், தனக்கான வசதிகளைக் கொண்ட கட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கி விட்டால், பிற்காலத்தில் அதனை ஒரு விரிவான இராணுவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் என்று சீனா கணக்குக் போட்டிருக்கலாம்.
இலங்கையை தன்வசம் வளைத்துப் போடுவதற்கு சீனா வழக்கமாக கையாளும் அதே தந்திரம் தான் இங்கும் கையாளப்பட்டுள்ளது.
இந்த விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்குத் தேவையான நிதியை, அதை உருவாக்கவுள்ள சீனாவின் வான் பொறியியல் ஏற்றுமதி இறக்குமதிக் கூட்டுத்தாபனமே வழங்கப் போகிறது.
குறைந்த வட்டி, தள்ளுபடிச் சலுகைகள் என்று காட்டி இந்த வாய்ப்பை தன் பக்கம் இழுத்திருக்கிறது சீனா.
இந்த விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம், இலங்கைக்கு கிடைக்கவுள்ள இலாபம் என்னவென்றால், விமானப்படையிடம் உள்ள சீனத் தயாரிப்பு விமானங்களை இங்கேயே சீரமைத்து, பழுதுபார்த்து, புதுப்பித்துக் கொள்ளலாம்.
இத்தகைய சேவைகளுக்காக சீனாவுக்கு கப்பலிலோ, விமானத்திலோ அனுப்பி, மீளப் பெறுவதற்கு ஏற்படும், செலவு குறையும்.
அதைவிட, குறுகிய காலத்துக்குள்ளேயே, இத்தகைய சேவைகளை மேற்கொண்டு விடவும் முடியும்.
இதனைவிடப் பெரிய அனுகூலங்கள் என்று இலங்கைக்கு எதுவும் இல்லை.
சீனாவைப் பொறுத்தவரையில், இந்த விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம், சீனக்குடாவில் தனது காலை ஊன்றுவதுடன் மட்டுமன்றி, அதற்கு அப்பாலும், நீண்டகால நலன்களை அடைய முடியும்.
இந்தப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம், தனது ஒரு தொகுதி பொறியியலாளர்களை சீனக்குடாவில் தொடர்ச்சியாகத் தங்கவைக்கப் போகிறது சீனா.
அது பாதுகாப்பு ரீதியான ஒரு நேரடி அனுகூலம்.
அதைவிட, இந்தப் பராமரிப்பு நிலையத்தை அமைத்துக் கொடுத்தால், இலங்கை விமானப்படை ஒரு காலகட்டத்தில், சீனாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.
இங்கு வேறு விமானங்களை பராமரிக்கும் வசதிகள் இருக்காது.
பொதுவாக விமானங்கள் விற்கப்படும் போது, விற்பனைக்குப் பிந்திய சேவைகளை குறித்த தயாரிப்பு நிறுவனமே பொறுப்பேற்கும்.
எனவே, சீனக்குடாவில் சீன நிறுவனத்தினால் அமைக்கப்படும், விமானப் பராமரிப்பு நிலையத்தில் சீன விமானங்களைத் தவிர, மற்றைய நாட்டுத் தயாரிப்பு விமானங்களைப் பராமரிக்க முடியாது.
உதாரணத்துக்கு, சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஈரான் அமைத்துக் கொடுத்த இந்த சுத்திகரிப்பு ஆலையில், அந்த நாட்டு மசகு எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்க வசதிகள் உள்ளன.
இதனால், தான், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் அது அடிக்கடி மூடப்படுகிறது.
அதுபோலத் தான், சீனக்குடாவில் சீனா அமைக்கும் விமானப் பராமரிப்பு நிலையத்தை வேறு தேவைக்குப் பயன்படுத்தவும் வழியிருக்காது.
அதேவேளை, தற்போதுள்ள 37 சீனத் தயாரிப்பு விமானங்களுக்காக இந்தப் பராமரிப்பு நிலையத்தை விமானப்படையால் வைத்திருக்க முடியாது. எனவே, இனிமேல், சீனத் தயாரிப்பு விமானங்களை மட்டுமே, விமானப்படை கொள்வனவு செய்யும்.
அதுவும், கூடிய விரைவில், விமானப்படையிடம் உள்ள மிக் -27, கிபிர் ஆகிய 15 ஜெட் போர் விமானங்கள் கழித்து ஒதுக்கப்படவுள்ளன.
அவற்றுக்குப் பதிலாக, புதிய விமானங்கள் கொள்வனவு செய்யப்படுவது குறித்து விமானப்படை ஆராய்ந்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான், சீனக்குடாவில் விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்கப் போகிறது சீனா.
புதிய விமானக் கொள்வனவின் போது, இதுவும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
இங்கேயே பராமரித்துக் கொள்ளலாம் என்பதால், சீன விமானங்களைக் கொள்வனவு செய்ய விமானப்படை முனையும். அல்லது சீனாவே அதற்கு நெருக்குதல் கொடுக்கவும் கூடும்.
ஆக, இலங்கை விமானப்படையை, கூடிய விரைவில், முற்றிலும் சீன விமானங்களைக் கொண்டதாக மாற்றுவதற்கு சீனாவுக்கு பெரும் உதவியாக அமையும்.
அடுத்து, இதனால், இந்தியாவுக்கு என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது?
இந்தியாவுக்கு மிக அருகாக அமையக் கூடிய இந்த விமான பராமரிப்பு நிலையத்தை, சீனா தனது இராணுவத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதைவிட, இந்தியாவுக்கு மிக அருகாக அமையக் கூடிய இந்த இராணுவ நிலையால், இந்தியாவின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும்.
அதைவிட திருகோணமலைத் துறைமுகத்தையும், எண்ணெய்க் குதங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்தியாவின் திட்டம் மெதுவாக வலுவிழந்து போகும்.
இப்படியாக, இலங்கை மீதான இந்தியாவினது செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு, சீனா அதனை வசப்படுத்திக் கொள்ளும்.
இது தான் இந்தியாவுக்கு உள்ள பிரச்சினை.
இந்தப் பிரச்சினையை இந்தியா எப்படிக் கையாளப் போகிறது?
வெறும் எதிர்ப்போடு நிறுத்திக் கொள்ளப் போகிறதா – அல்லது தடுப்பதற்காக செயலில் இறங்கப் போகிறதா?
– சுபத்ரா