ஜக்காத், ஜஸ்யா இந்த இரண்டு வரி விதிப்புகள் குறித்து தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. ஏனென்றால் ஜக்காத் எனும் வரிவிதிப்பை மிகப் பெரும் பொருளாதாரத் திட்டமாக இஸ்லாமியர்களாலும், இஸ்லாம் ஏனைய மதத்தவர்களை வதைப்பதன் அடையாளமாக ஜஸ்யா எனும் வரிவிதிப்பை இஸ்லாமியர் அல்லாதவர்களும் மிகப் பெரியதாக ஊதிப் பெருக்குகின்றனர்.
இந்த இரண்டு வித வரிகள், இதுவல்லாத எப்படி வியாபரம் செய்யலாம், செய்யக்கூடாது என்று குரானிலும் ஹதீஸிலும் இருக்கும் நன்னெறிப் போதனைகள், வட்டியில்லா வங்கி உள்ளிட்டவற்றைச் சேர்த்துத்தான் இஸ்லாமியப் பொருளாதாரம் என்கிறார்கள்.
அண்மையில் வெடித்துக் கிளம்பிய உலகப் பொருளாதார மந்தத்தின் போது, மீப்பெரும் மாற்றாக இஸ்லாமியப் பொருளாதாரம் முஸ்லீம்களால் முன்வைக்கப்பட்டது.
பொருளாதாரம் என்பது வெறும் வரவு செலவுக் கணக்கும், திட்டங்களும் அல்ல. அது அரசுடன் தொடர்புடையது. அரசு என்பதை அதன் முழுமையான பொருளில் விளங்கிக் கொள்ளாமல் பொருளாதாரம் என்பதை மட்டும் தனித்து விளங்கிக் கொள்ள முடியாது.
எந்தவித அரசாக இருந்தாலும் அது அனைவருக்கும் பொதுவான அரசாக ஒருபோதும் இருக்க முடியாது. அரசின் நோக்கம், அதன் சட்டங்கள், அதன் பாதை போன்றவை அந்த அரசு எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறதோ அந்த வர்க்கத்தின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும்.
அந்த அரசை விரும்புபவர்கள், நேசிப்பவர்கள் என்னதான் நடுநிலையான அரசு, அனைவருக்கும் நீதமான அரசு என்று கூறிக் கொண்டாலும் சாராம்சத்தில் அதன் வர்க்க அடிப்படையை விட்டு எந்த அரசும் விலகிவிட முடியாது.
ஓர் அரசு தன் குடிமக்களிடம் எந்த அளவுக்கு வரி வசூலிக்கிறது என்பதல்ல என்னென்ன விதங்களில் அதை செலவு செய்கிறது என்பதை உள்ளடக்கியதே பொருளாதாரம் என்பதன் உண்மையான பொருள்.
இந்த அடிப்படையில் பாட்டாளி வர்க்கப் பொருளாதாரம், முதலாளித்துவப் பொருளாதாரம் என்று இருக்க முடியுமேயன்றி இஸ்லாமியப் பொருளாதாரம் கிருஸ்தவப் பொருளாதாரம் என்பது போல் இருக்க முடியாது. ஏனென்றால் மதங்களுக்கோ, அதன் மூலங்களுக்கோ வர்க்கங்களும் தெரியாது, வர்க்க பேதங்களும் புரியாது.
இஸ்லாமிய அரசு இரண்டுவித வரிவிதிப்புகளை தன் குடிமக்களிடம் செய்ய வேண்டுமென்று முகம்மது வலியுறுத்தி இருக்கிறார். முஸ்லீம்களிடம் ஜக்காத் எனும் வரியும், முஸ்லீமல்லாதவர்களிடம் ஜஸியா எனும் வரியும் விதிக்கப்படும்.
இது மத அடிப்படையில் விதிக்கப்படும் தனித்தனி வரிகளாக தெரிந்தாலும் தன்மைகளில் இரண்டும் வேறு வேறானவை. முஸ்லீம்களிடம் விதிக்கப்படும் ஜக்காத் அவர்களின் சொத்துகளைக் கணக்கிட்டு அதில் இத்தனை விழுக்காடு எனும் அடிப்படையில் வசூலிக்கப்படுவது.
இதற்கு மாறாக ஜஸியா சொத்துகளின் மீதல்ல, அந்த நாட்டில் அவர்கள் தங்கியிருப்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட அரசின் செலவுகளுக்கான ஈடாக வசூலிக்கப்படுகிறது. இவைகளில் வசூலிக்கப்படும் மதிப்பு முஸ்லீம்களுக்கு கூடுதலா? ஏனைய மதத்தினர்களுக்கு கூடுதலா? என்பதைவிட ஒப்பீட்டளவில் ஏனைய மதத்தினர்களின் குடியுரிமை குறித்த வேறுபாடாகவே கருத வேண்டும். இந்த ஒன்றிலிருந்தே புரிந்து கொள்ள முடியும் ஓர் (இஸ்லாமிய) அரசு அனைவருக்கும் சமமான அரசாக இருக்க முடியாது என்பதை.
ஜக்காத்தும், ஜஸியாவும் யாருக்கு எவ்வளவு விதிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஹதீஸ்கள் இருக்கின்றன. அந்த அடிப்படையில் ஜக்காத் என்பது முஸ்லீம்களின் சொத்துகள் மீது விதிக்கப்படும் இரண்டரை விழுக்காடு வரியாகும்.
ஒரு முறை வரி செலுத்திய சொத்துக்கு அவரின் ஆயுள் வரை மீண்டும் வரி செலுத்த வேண்டியதில்லை. (இந்த அம்சத்தில் ஒருமுறை வரி செலுத்தினால் போதும் என்றும், ஆண்டு தோறும் செலுத்த வேண்டும் என்றும் இஸ்லாமிய அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு) ஜஸியா என்பது ஜக்காத்தை விட மதிப்பில் குறைவான வரிவிதிப்பு ஆனால் பெண்கள் குழந்தைகள் தவிர ஆண்கள் அனைவர் மீதும் விதிக்கப்படுவது.
ஜக்காத் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக சொத்துடையவர்கள் மீது மட்டுமே விதிக்கப்படுவது ஏனையவர்கள் மீது இல்லை. இந்த சொற்பமான வரி விதிப்பைக் கொண்டு ஏழைகளுக்கு என்ன நலத்திட்டங்களை வழங்கி அவர்களை நிலை உயர்த்திவிட முடியும்? ஆனால் இந்த ஜக்காத் தான் ஏழைகளே இல்லாமல ஆக்கக்கூடிய இஸ்லாத்தின் அருட்கொடை என்கிறார்கள் முஸ்லீம்கள்.
இதற்கு உமர் காலத்தில் ஜக்காத் வாங்க ஆளே இருக்கவில்லை என்று ஹதீஸ் எடுத்துக் காட்டு வேறு. ஆனால் வழிப்பறி போர்களில் கைப்பற்றப்பட்ட பொருட்களுக்காக சச்சரவு நடந்திருக்கிறது என்றும், முகம்மதின் சொத்தை திரும்பக் கேட்டு போரே நடந்திருக்கிறது என்றும் அதே ஹதீஸ் நூல்களில் தகவல்கள் கிடைக்கின்றன.
இதை கருத்தில் கொண்டு பார்த்தால் அன்றைய அரசின் ஏழைகள் சிலரை ஜக்காத்தினால் அல்ல வழிப்பறி போர்கள் மூலம் கிடைத்த ‘கனீமத்’ பொருட்களின் மூலமே வறுமையை ஈடுகட்டியிருக்கிறது என்பது புலனாகும்.
ஜக்காத்தைக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முகம்மது வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
.. .. .. தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளம் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்காகவும், அல்லாவின் பாதையில் போர்புரிவோருக்காகவும், வழிப் போக்கர்களுக்குமே உரியவை. இது அல்லாஹ் விதித்த கடமையாகும் .. .. .. குரான் 9:60
இந்த வசனம் தரித்திரர்கள், ஏழைகள், வழிப்போக்கர்கள் இவர்களுக்கு மட்டுமல்லாது ஜக்காத்தை வசூலிப்பவர்களுக்கான ஊதியமாகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடனை மீட்பதற்காகவும், இராணுவ வீரர்களுக்காகவும், மதம் மாற்றுவதற்கும் ஆகிய அனைத்திற்கும் ஜக்காத்தை செலவு செய்யலாம் என அனுமதிக்கிறது.
இதைக் கொண்டு எப்படி ஒரு நாட்டின் ஏழ்மையை நீக்க முடியும்? இப்போதைய அரசுகள் வறுமை ஒழிப்பு திட்டங்களை தீட்டுகின்றனவே அப்படியா? இஸ்லாம் தோன்றியது முதல் இப்போதுவரை இஸ்லாமே ஆட்சியிலிருக்கும் சௌதி அரேபியாவில் இன்றுவரை ஏழ்மையை ஒழிக்க முடியவில்லை என்பது ஒன்றே போதும் ஜக்காத் ஒரு மாயை தான் என்பதை நிறுவுவதற்கு.
மட்டுமல்லாது அங்கு தற்போது குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் வெட்டிக் குறைக்கப்படுவதும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதும், கடுமையான சட்டங்கள் இருந்தும் சின்னச் சின்ன திருட்டுகள் வெகுவாக அதிகரித்து வருவதும், வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாவதும் ஏழ்மை உருவாகும் இடம் எது என்பதையும்.
இதுபோன்று தர்மங்கள் செய்து விடுவதனால் ஏழ்மை ஒழிந்து விடாது என்பதையும் வெளிப்படையாக போட்டு உடைக்கிறது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் சொத்திருப்பவர்கள் என்ன காரணத்திற்காக ஜக்காத் கொடுக்க வேண்டும் என குரான் குறிப்பிடுகிறது தெரியுமா? கீழ்க்காணும் குரான் வசனத்தையும், ஹதீஸையும் பாருங்கள்.
அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக .. .. .. குரான் 9:103
.. .. .. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் செல்வத்தில் எஞ்சியதை தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்று விளக்கமளித்தார்கள். அபூ தாவூத் 1417
செல்வத்தை தூய்மையாக்குவது என்றால் என்ன? ஏன் செல்வம் அசுத்தமாகியது? ஒன்று இது வழிப்பறியின் மூலம் வந்த செல்வமல்லவா எனும் குற்ற உணர்ச்சி முகம்மதுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
இரண்டு இது தான் வறுமையை ஏற்படுத்துகிறது என்று ஏதோ ஒரு விதத்தில் முகம்மது அறிந்ததனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் என்னால் தான் செல்வம் வழங்கப்படுகிறது என்று கூறிய அதே அல்லா தன்னால் வழங்கப்பட்ட செல்வத்தை அசுத்தமானது என்றும் தர்மம் கொடுத்து தூய்மை செய்து கொள் என்றும் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லையே
வியாபாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு சில பல கட்டுப்பாடுகளை முகம்மது விதித்திருக்கிறார். அளவுகளில் மோசம் செய்யாதீர்கள், பொய்யான தகுதிகளை பொருளின் மீது ஏற்றி வியாபாரம் செய்யாதீர்கள், ஒருவரிடம் வியாபாரம் பேசிக் கொண்டே அதே பொருளை மற்றொருவரிடம் வியாபரம் பேசாதீர்கள், அதிக விலை வேண்டும் என்பதற்காக பதுக்கி வைக்காதீர்கள், பொருளே இல்லாமல் வியாபாரம் பேசாதீர்கள் என்பன போல பல அறிவுரைகளை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடம் முகம்மது கூறியிருக்கிறார்.
ஆனால் மறந்தும் கூட விலையை எப்படி நிர்ணயம் செய்வது என்பதைக் கூறவில்லை. மட்டுமல்லாது எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என மறைமுகமாக அனுமதி வழங்கியிருக்கிறார்.
.. .. .. உங்களில் ஒருவருக் கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படும் வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள் .. .. .. குரான் 4:29
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மை பேசி குறைகளை தெளிவு படுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும். குறைகளை மறைத்து பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும். புஹாரி 2079
இதில் முதலிலுள்ள குரான் வசனத்தில் விற்பவரும், நுகர்பவரும் ஏற்றுக் கோள்ள வேண்டும் என்பது தான் நிபந்தனை. விற்பவர் கூறும் விலையை நுகர்பவர் ஏற்றுக் கொண்டால் அது தான் ஒருவருக் கொருவர் பொருந்திக் கொள்வது.
நுகர்பவர் ஏற்றுக் கொள்வாரென்றால் எந்த விலையை வேண்டுமானாலும், எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதுவே ஹதீஸில் பரக்கத் கிடைக்கும் பரக்கத் கிடைக்காது என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. அதாவது பர்க்கத் என்பது இறந்த பிறகு கிடைக்கும் ஒருவித பலன். இந்த உலகில் கொள்ளை லாபமடித்தால் செத்த பிறகான உலகில் உனக்கு பலன் கிடைக்காது.
இந்த உலகில் அது குற்றமோ கூடாததோ அல்ல. ஒரு பக்கம் ஏழ்மையை ஒழிக்க வந்த மாமருந்து என்று ஜக்காத்தை போற்றுகிறார்கள். மறுபுறம் குரானும் ஹதீஸும் லாபத்தை ஆதரிக்கின்றன. லாபக் கோட்பாடுதான் வறுமை நீடிப்பதிலும் அதிகரிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது எனும் உண்மை விளங்குமா இந்த மதவாதிகளுக்கு?
வட்டி என்பது இஸ்லாத்தில் அறவே கூடாத ஒன்று. வங்கியில் பணிபுரிவது இஸ்லாத்திற்கு விரோதமானது என ‘ஃபத்வா’ கூறும் அளவுக்கு வட்டியின் மீது இஸ்லாமியர்களுக்கு ஒவ்வாமை உண்டு.
அதனால் தான் அண்மைக் காலங்களில் இஸ்லாமிய வங்கி எனும் ஒன்றை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். தற்காலத்தில் வங்கியை நிர்வகிப்பதற்கு வட்டியின் மூலம் கிடைக்கும் லாபமே பயன்படுகிறது.
என்றால் இஸ்லாமிய வங்கி எவ்விதம் செயல்படுகிறது? ஏனைய வங்கிச் செயல்பாடுகள் போலவே மக்களிடமிருந்து சேமிப்பு பெறப்படுகிறது ஆனால் அதற்கு வட்டி கிடைக்காது.
அதேநேரம் வங்கி கொடுக்கும் கடன்களுக்கு அதை பயன்படுத்தி செய்யும் தொழில்களிலிருந்து கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காடு வங்கிக்கு கடனுடன் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். தொழில் நட்டமடைந்து விட்டாலோ கடனை மட்டும் திருப்பச் செலுத்தினால் போதுமானது. இது தான் இஸ்லாமிய வங்கியின் அடிப்படை. வட்டி ஒரு விதத்தில் சுரண்டலென்றால் இது வேறொரு விதத்தில் சுரண்டல். இதிலென்ன மீட்சி இருக்கிறது ஏழைகளுக்கு?
இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கும் பொருளாதாரமுறை நடைமுறை படுத்தப்பட்டால் உலகில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் விதந்தோதும் மதவாதிகள் ஜக்காத்திலும் சில நன்னெறி போதனைகளிலும் என்ன பொருளாதாரக் கூறுகள் இருக்கின்றன என்பதை என்றேனும் சிந்தித்திருப்பார்களா? ஏழ்மை குறித்தும் தெரியாது, பொருளாதாரம் குறித்தும் தெரியாது என்றால் இஸ்லாம் ஏழ்மையை நீக்கும் என்பது வறட்டு ஜம்பமே.
செங்கொடி
அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்
அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச் சட்டம்
அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 3