சந்திரசிறியின் மீள் நியமனத்துக்குப் பதிலடியாக விக்னேஸ்வரன் பதவி விலகுவார் என செய்தி ஒன்று ஊடகங்களில் பரவியதால் அதையிட்டு அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதை மறுத்து அறிக்கை விடவேண்டியதாக போய்விட்டது.(யாரோ கதையை கட்டிவிட்டாங்களப்பா)
இலங்கை அரசாங்கம் வடமாகாண முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என எதிர்பார்க்கிறது. ஆனால், வட மாகாண மக்களும் அந்த மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் என்னை பதவி விலகுமாறு கூறும் வரையில் நான் பதவி விலகப்போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி விலகப்போவதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக நேற்றைய தினம் கருத்துக்கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் நான் பதவி விலகவேண்டும் என நினைப்பதாக கருதுகின்றேன். அதனடிப்படையிலேயே முதலமைச்சர் பதவி விலகப்போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நான் வடக்கு மாகாண மக்களுக்கு சேவையாற்றவே வந்திருக்கின்றேன்.
உதாரணமாக சொல்லப்போனால், ஒரு சட்டத்தரணியை ஒரு தரப்பு தமக்கு நியமித்திருக்கின்றார்கள் என்றால் அந்தக் கட்சிக்காரர் எமக்கு நீர் வேண்டாம் என அந்த சட்டத்தரணியிடம் கூறும்வரையில் அவர் தனது கட்சிக்காரரை விட்டுச்செல்ல முடியாது.
அதேபோன்று என்னுடைய கட்சிக்காரர்கள் வடமாகாண மக்கள், அவர்களுடைய பிரதிநிதிகளாக இருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். எனவே அவர்கள் என்னை பதவி விலகுமாறு கூறும் வரையில் நான் செல்லமுடியாது. செல்லவும் போவதில்லை.
மேலும் அரசாங்கம் என்னை வெளியேற்ற வேண்டும் என நினைப்பதைப்போன்று இங்கேயும் யாரும் வருவார்களானால் அவர்களாலும் என்னை வெளியேற்ற முடியாது என்பதே உண்மை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மேலும் என்னுடைய அரசியல் வாழ்வில் உண்டாக்கப்பட்டிருக்கும் தோல்விகள், பின்னடைவுகளைக் கண்டு ஒருபோதும் பின்னடையப் போவதில்லை. நான் என்னுடைய கடமையினை சரிவரச் செய்து கொண்டிருக்கின்றேன். என்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நான் பதவி விலகவேண்டும் என செய்திகள் வெளியாகின்றன என்றால் நான் என்னுடைய கடமையினை சரிவரச் செய்கின்றேன் என்பதே அதன் அர்த்தமாக இருக்கும். நான் பதவி விலகிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் கூறாத பல விடயங்களை கூறியதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், ஒன்றை மட்டும் தெளிவாகக் கூற விரும்புகின்றேன். நான் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் பதவி தனிப்பட்ட முறையில் எனக்கு தேவையற்றது.
ஆனால், நான் மாகாண மக்களுக்கு சேவையாற்றுவதற்காக இந்தப் பதவியினை அல்லது பொறுப்பினை எடுத்திருக்கின்றேன். எனவே அதனை சரியாகவும் சிறப்பாகவும் செய்கின்றேன் என்பதையே என் மீதான பொய்யான பிரசாரங்களும் பொய்யான செய்திகளும் கோடிட்டுக் காட்டுகின்றன என்பதனை மட்டுமே என்னால் கூறிக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் விவகாரம்
இதேவேளை, அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்கையில், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் முதலமைச்சர்களுக்கான கூட்டம் நடத்தப்போவதாகக் கூறியிருக்கின்றார்கள்.
மேலும் அடுத்த வாரம் அவ்வாறான கூட்டம் ஒன்றினை நடத்தப்போவதாகவும் கூறியிருக்கின்றார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாது.
இங்கே எனக்கான வேலைப்பளு அதிகமாக இருக்கின்றது என்பதை நான் எழுத்து மூலமாக அறிவித்திருக்கின்றேன். எனவே அந்த விடயத்தில் பெரியளவில் சிக்கல்கள் எவையும் இல்லை என்றார்.
ஐயா விக்னேஸ்வரன் ஐயாவே!
//இலங்கை அரசாங்கம் வடமாகாண முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என எதிர்பார்க்கிறதாக சொல்லியுள்ளீர்கள்//.
அரசாங்கதின் மீது.. ஏதோ ஒருவகையில் … எதெற்கெடுத்தாலும் பழிபோட்டால் தான் தமிழர்கள் நீங்கள் சொல்லுவதை நம்புவார்கள்.
அதை தவிர்த்து.., நீங்கள் பதவி விலகி அரசாங்கத்துக்கு அதிர்ச்சியளிக்க வேண்டுமென்பது பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களின் (புலியாதரவாளர்களின்) விருப்பமாகவுமுள்ளது. (அவர்கள் தான் நீங்கள் பதவி விலகப்போவதாக செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.) அதை நீங்கள் செய்வீர்களானால்… முதலமைச்சர் பதவியில் இருப்பதைவிட பெரிய கதாநாயகன் ஆகிவிடுவீர்கள்.
கடைசி நேரத்தில் மாமனிதர் பட்டம் கிடைப்பதற்கும் சந்தர்ப்பம் உண்டு. யோசித்து செய்யுங்கள்.
//மேலும் அரசாங்கம் என்னை வெளியேற்ற வேண்டும் என நினைப்பதைப்போன்று இங்கேயும் யாரும் வருவார்களானால் அவர்களாலும் என்னை வெளியேற்ற முடியாது என்பதே உண்மை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.//
நீங்கள் கூறும் இந்த கருத்தில் பல ரகசியங்கள் பொதிந்திருப்பதாக தெரிகின்றதே! உங்களிடத்துக்கு யார் வரமுனைகின்றார்கள்? அனந்தியா?
ஆனால்.. ஒன்றுமட்டும் தௌிவாக புரிகின்றது. அது யாதெனில்.., உங்களின் இடத்தை பிடிப்பதற்கு பலபேர் உங்கள் கட்சிக்குள்ளேயே போட்டி போடுகிறார்கள் அல்லது உங்கள் கூட்டுக் கட்சியில இருப்பவாகள் உங்களை பதவியை பறிக்க முற்படுகிறார்கள் என்பது நீங்கள் கூறிய கருத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.
தப்பித் தவறி இனிமேல் வெளிநாட்டுக்கு பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். பிறகு திரும்பி வரும்போது பதவி காலியாக இருக்காது.
நீங்கள் பதவியிலிருந்து மக்கள் சேவை செய்யாவிட்டாலும் பறுவாயில்லை. பதவியிலிருக்கும் வரை தொடர்ச்சியாக அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டிருங்கள். அப் போதுதான் பதவியில் நீங்கள் நீடிக்கலாம். அடுத்த முறையும் மக்கள் உங்களை மறக்காமல் வாக்களிப்பார்கள்.
ஆளுனரை பதவி விலக்கபோய்… உங்கள் பதவிக்கே வேட்டு வைக்க போய்விட்டார்கள் பார்த்தீங்களா? யாரையும் இந்த உலகத்தில் நம்பவேண்டாம்.
திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவற்றை பூசிக்கொண்டு… . வேட்டியையும் சால்வையொன்றையும் போட்டுக்கொண்டு வந்து.. வடமாகான சபையில் அமர்ந்து எதாவது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, ஒரு அறிக்கையையும் வாசித்துவிட்டு பேசாமல் இருங்கள்.
உங்கள் பதவிக்கு எந்த அயாயமும் ஏற்படாது.
இதுதான் நாங்கள் உங்களுக்கு சொல்லக்கூடிய யோசனை. வாழ்க வழமுடன்…
இலக்கியன்
சுவிஸ்-