அ.தி.மு.க-வில் இருக்கும் ஒருவர் தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருடன் பேசினாலே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கிவிடுவார் ஜெயலலிதா. பெரம்பலூரிலோ இந்த இரண்டு கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களும் கள்ளக்காதலில் திளைத்திருக்க… அது இருவரின் உயிரையுமே காவு வாங்கியிருக்கிறது.
பெரம்பலூர் நகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த அன்புமுத்து. அதே நகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தீபா. இவர்கள் இருவருமே திருமணம் ஆனவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே எக்குத்தப்பாகப் பற்றிய காமத் தீ, உயிருக்கே உலைவைத்துவிட்டது.
தீபாவை பற்றி நன்கு அறிந்தவர்களிடம் விசாரித்தோம். ”எல்லோரிடமும் சகஜமாகப் பேசக்கூடியவர் தீபா. கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும்போது, எஸ்.டி.டி பூத்ல பார்ட் டைம் வேலை பார்த்துட்டு இருந்தாங்க.
அப்போ எலெக்ட்ரிக் கான்ட்ராக்ட் வேலை பார்த்த மயில்சாமி என்பவருடன் ஏற்பட்ட பழக்கம், காதலானது. இருவருக்கும் திருமணமாகி பெரம்பலூர்ல குடியேறினாங்க. இவங்களுக்கு இரண்டு குழந்தைகள்.
ஆரம்பத்துல தே.மு.தி.க மகளிர் அணியில் இருந்தவர், சில வருடங்களுக்கு முன்புதான் அ.தி.மு.க-வில் இளம்பெண்கள் பாசறையில் சேர்ந்தார். கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பும் கிடைச்சுது. கவுன்சிலர் ஆன பிறகு, அவங்களுக்குத் தனியாகப் பயிற்சி வகுப்பு நடந்தது.
அது முடிஞ்சதும், ஜெயித்த கவுன்சிலர்கள் எல்லோரையும் கொடைக்கானல் டூர் அழைச்சுகிட்டுப் போனாங்க. அப்போதான் தீபாவுக்கும் கவுன்சிலர் அன்புமுத்துவுக்கும் இருந்த பழக்கம், நெருக்கமாகி இருக்கிறது. இந்த விஷயம் அரசல்புரசலாக தீபா வீட்டுக்காரருக்குத் தெரியவந்துச்சு.
தீபாவைக் கூப்பிட்டு சத்தம் போட்டாரு. ஆனா, தீபா அதையெல்லாம் காதுல வாங்கிக்கவே இல்லை. இவங்க சண்டை அதிகமாகவும் ஒருகட்டத்துல தீபா வீட்டை விட்டு வெளியே போயிட்டாங்க. ரெண்டு பேரும் தனியா பிரிஞ்சுத்தான் இருந்தாங்க.
தி.மு.க கவுன்சிலரான அன்புமுத்துவோட மனைவிக்கு உடம்பு சரியில்லாததால, அவங்க அம்மா வீட்டுல இருந்தாங்க. இது அன்புமுத்துவுக்கும் தீபாவுக்கும் வசதியா போயிடுச்சு.
தீபா தனியா தங்கியிருந்த வீட்டுக்கு, அன்புமுத்து வரப்போக இருந்தாரு. இது தெரிஞ்சுதான் தீபாவோட வீட்டுக்காரர் மயில்சாமி நேரம் பார்த்துட்டு இருந்தாரு. தீபா வீட்டுக்கு அன்புமுத்து வந்திருக்கும் தகவல் தெரிஞ்சதும்தான், வீட்டுக்குள் நுழைஞ்சிருக்காரு மயில்சாமி” என்று சொல்கிறார்கள்.
”மயில்சாமி கதவைத் தட்டியதும், தீபாதான் வந்து கதவைத் திறந்திருக்காங்க. அவங்களைத் தள்ளிவிட்டுட்டு வீட்டுக்குள் புகுந்த மயில்சாமியும் அவரோட வந்தவங்களும், அன்புமுத்துவை இழுத்துப்போட்டு வெட்டியிருக்காங்க.
இதைப் பார்த்து பயந்துபோன தீபா, வீட்டுக்குள் இன்னொரு ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்தியிருக்காங்க. என்ன நினைச்சாங்களோ தெரியலை… அதே அறைக்குள் கட்டியிருந்த சேலையைக் கழட்டி தூக்கு மாட்டிகிட்டாங்க” என்று போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.
அன்புமுத்துவை வெட்டி சாய்த்ததும் தீபாவின் அம்மா பிரேமலதாவுக்கு போன் செய்திருக்கிறார் மயில்சாமி. ‘உன்னோட மகளையும் அவளை வெச்சிருந்தவனையும் தீர்த்துக்கட்டிட்டேன். குடும்பத்துக்கு அடங்காதவங்களுக்கு இதுதான் கதி…’ என்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய எஸ்.பி சோனல் சந்திரா, ”கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்திருக்கிறோம். கூடிய சீக்கிரம் பிடித்துவிடுவோம்.
மயில்சாமி மீது ஏற்கெனவே சில வழக்குகள் உள்ளன. இந்தக் கொலையில் மயில்சாமி தவிர வேறு சிலரும் சம்பந்தப்பட்டுள்ளர். அவர்களையும் தேடி வருகிறோம்” என்று சொன்னார்.
எல்லாம் காலக்கொடுமை!
Thanks to vikatan.com