1977 ஆம் ஆண்டு குருநகர், பாண்டியன்தாழ்வு, நாவாந்துறை, கந்தர்மடம். அரியாலை, யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளில நடக்கிற தமிழர் விடுதலைக் கூட்டணியின்ரை தேர்தற் கூட்டங்களில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு ஆதரவாக ஒரு ஐம்பது அறுபது பெடியள் முறிஞ்சி வேலை செய்தாங்கள்.
அப்ப யோகேஸ்வரன் இளந்தாரி. இப்ப கூட்டமைப்பில கொடியேத்திக் கொண்டிருக்கிற சயந்தன், கஜதீபன் ஆக்களைப் போல அப்ப யோகேஸ்வரன் இருந்தார்.
ஆனால், இந்தக் காவாலித்தனமெல்லாம் யோகேஸ்வரனிட்ட இல்லை. யோகேஸ்வரன் படிச்ச பெடியன். அமையாக, நல்ல அடக்கமாக இருந்த பிள்ளை.
தகப்பன் வெற்றிவேலு டொக்ரர், யாழ்ப்பாணம் மடத்தடியில பிறைவேற் ஆஸ்பத்திரி வைச்சிருந்து, சனங்களுக்குச் செய்த சேவையால குடும்பத்துக்கும் யாழ்ப்பாணத்திலயும் சுற்று வட்டாரத்திலயும் நல்ல பேரும் இருந்தது.
இதால யோகேஸ்வரன் அரசியல்ல குதிச்ச உடன அவருக்கு ஆதரவாக சுற்றுவட்டாரத்தில இருந்த பெடியள் எல்லாம் ஆதரவாக வேலை செய்யத் தொடங்கீட்டினம்.
தமிழீழம்தான் தமிழற்றை அரசியல் அபிலாஷை எண்ட வட்டுக்கோட்டைத்தீர்மானத்தைத் தூக்கிக்கொண்டு, பட்டி தொட்டியெல்லாம் முழங்கித்திரிஞ்ச கூட்டணித்தலைவர்கள், ஊரில இருந்த பெடியளின்ரை ரத்தத்தை எந்தளவுக்குச் சூடாக்க முடியுமோ அந்த அளவுக்குச் சூடாக்கியிருந்திச்சினம். பெடியளின்ரை இதயத்துடிப்பும் நல்லா ஏறித்தானிருந்துது.
இந்தச் சூட்டோட அவதிப்பட்டுக்கொண்டு நிண்ட பெடியளுக்கு எதையாவது செய்ய வேணும் எண்ட அவதியும் ஆவேசமும்.
மேடையில தலைவர்கள் குரலை உயர்த்தி, வானத்தைப் பிளக்கிற மாதிரிச் சொல்லுவினம், ‘அடுத்த தேர்தல் தமிழீழத்திலதான் நடக்கும். ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளநினைப்பதில் தவறென்ன? சிங்கத் தமிழன் சீர்கெட்ட சிங்களவனுக்கு என்ன அடிமையா? கல்தோன்றா மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. அந்த மூத்தகுடிக்கு யார் நிற்பது எதிரில்?….எடடா வாளை… கொடடா தலையை….’ இப்பிடி ஆயிரம் வீர வசனங்கள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா நிற்கமுடியுமா, சுத்தி நிக்கிற பெடியளால?
இந்தப் பேச்சுகள் உச்சத்துக்குப்போகேக்க, பாஞ்சு தாவி மேடையில ஏறுகிற பெடியள் தங்கட கையைக் கீறி, அதில வழியிற ரத்தத்தில பீரங்கியோட நிண்டு, முழங்கிக் கொண்டிருக்கிற தலைவருக்கு நெற்றியில திலகமிடுவினம்.
நெற்றியில ரத்தத்தால பொட்டு வைக்கிறதெண்டால்…
அந்த வீரக்காட்சிகளை இந்தக் கண்ணால கண்டேனே… என்ரை ராசா, அப்பிடியே உடம்பு புல்லரிச்சுது.
இப்பிடியெல்லாம் நடந்து கொண்டிக்கேக்கதான் அரியாலையில ஒரு இரவு யோகேஸ்வரனுக்கு ஆதரவாக ஒரு கூட்டம்.
அந்தக் கூட்டத்துக்கு அமிர்தலிங்கம் வந்து பேசினார். மங்கையற்கரசியும் வந்து பாட்டில ஆரம்பிச்சு, வெண்கலக்குரலில ஒரு சொற்பொழிவாற்றினா.
உடுவில் தருமர், ஆலாலசுந்தரம்….மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன்… இப்பிடிக் கனபேர் உருவேத்திக் கொண்டிருந்தினம்.
இப்பிடியே இருக்க, யோகேஸ்வரன் மேடையில ஏறினார்….
பெடியள் விசிலடிச்சுக் கைதட்டி…. வெடிகொழுத்தி… ஆரவாரம் எல்லாம் செய்தினம்…
இளைஞர்களின் இளைஞன்… தளபதியின் தளபதி எண்டு ஆரோ ஸ்பீக்கரில உச்சக்குரல்ல கத்திக்கொண்டிருந்தான்…
அந்த நேரம்பார்த்தால்… ஐஞ்சாறு பெடியள் மேடைக்குத் தாவியேறித் தங்கட கையைக் கீறினார்கள்.
சனங்கள் கைதட்டி ஆர்ப்பாரிச்சுதுகள்…
அப்பிடியே கையால வடியிற ரத்தத்தைப் பெருவிரலால வழிச்சு, யோகேஸ்வரன்ரை நெத்தியில பொட்டு வைச்சினம்….
தனக்குப் பொட்டு வைச்ச பெடியளைக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினார் யோகேஸ்வரன். கண்கள் கலங்கிப் பனித்தன. யோகேஸ்வரனுக்கு மட்டுமா கண்கள் கலங்கின? அங்க நிண்ட எல்லாருக்குந்தான் கண் கலங்கியது.
தேர்தல் முடிஞ்சுது. கூட்டணி அமோக வெற்றியைப்பெற்றுது. எதிர்க்கட்சியாகப் பாராளுமன்றத்துக்குப் போய்ச் சரித்திரம் படைச்சிது. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானார்.
வவுனியாவுக்கு இஞ்சால உதயசூரியன் கொடியைத் தங்கட வாகனங்களில பறக்க விடுகிற எம்பிமார், வவுனியாவுக்கு அங்கால சிங்கக்கொடியைக் கட்டிக்கொண்டு போய்ச்சினம்.
பொட்டு வைச்ச பெடியளை எல்லாரும் மறக்கத் தொடங்கிச்சினம்.
ஆனால், பொட்டு வைச்ச பெடியள் ஆரையும் மறக்கேல்ல. ஒண்டையும் மறக்கேல்ல.
அதில ஒரு பெடியன், தனக்குச் சார்பாக மூண்டு பெடியளை அனுப்பி, 1991 ஆம் ஆண்டு கொழும்பில வைச்சு அமிர்தலிங்கத்துக்கும் யோகேஸ்வரனுக்கும் பொட்டு வைச்சான்.
1977 இல அரியாலையில தன்ரை கையைக்கீறி ரத்தப்பொட்டு வைச்ச பெடியன்தான் இந்தப் பொட்டையும் வைச்சான் எண்டது யோகேஸ்வரனுக்கு அப்பவும் விளங்கேல்ல.
‘ரத்தப்பொட்டின்ரை ருசி எப்பிடியிருக்கும் எண்டதை அமிர்தலிங்கத்துக்கும் அவற்றை ஆக்களுக்கும் படிப்பிக்கிறன்’ எண்டு ரண்டு பேருக்கும் பொட்டு வைச்சது ஆருமில்லை,
பொட்டம்மான் எண்ட பொட்டு தான். அல்லது பொட்டு எண்ட பொட்டம்மானே.
பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – பகுதி-1
இருந்தாப்போல அமிர்தலிங்கத்தின்ரை காத்து அடிக்குது. சம்மந்தன் முதற்கொண்டு சாதாரண சமானியன்வரையில இப்ப அமிர்தலிங்கத்தைப்பற்றித்தான் கதைக்கினம்.
அவர் காலமாகி…. மன்னிக்கோணும் அவர் கொல்லப்பட்டு…. மன்னிக்கோணும் அவர் போட்டுத்தள்ளப்பட்டு…. 25 வருசமாகுது.
இப்ப அவர் அப்பிடிப் போட்டுத்தள்ளப்பட்டதைக் கொண்டாடுகினமா? இல்லாட்டிக்கு அமிர்தலிங்கம் போட்டுத்தள்ளப்பட்டதை இப்பதான் அம்பலப்படுத்தலாம், கண்டிக்கலாம் எண்டு நினைக்கினமா?
ஏன் இந்தக் கேள்வி என்ரை தலையுக்குள்ள முளைக்குது எண்டால், அமிர்தலிங்கம் இறந்து 25 வருசம் ஆகீட்டுது எண்டு அவற்றை நினைவுநாளைக் கொண்டாடுகிற ஆட்கள், அமிர்தலிங்கத்தை மதிக்கினம் எண்டு அர்த்தம்.
அப்பிடி அமிர்தலிங்கத்தை மதிச்சால், அந்த மதிப்புக்குரிய அண்ணன் அமிர்தலிங்கத்தைக் கொண்டது பிழை. அவரைக் கொலை செய்தவை பிழையான ஆட்கள்.
அப்ப பிழையான ஆட்களைக் கண்டிக்கோணும். தண்டிக்கோணும்.
சமூகத்தில இருந்து அவையைப் புறக்கணிக்கோணும்.
ஆனால், இஞ்ச என்ன நடக்குது?
இதைத்தான் நாங்கள் சிந்திக்கோணும். என்னுடைய அன்பான நண்பர்களே… நாங்கள் சாதாரண சனங்கள் எண்டு நினைச்சுக்கொண்டு அழுகின வாழப்பழத்தைத் தோலோட எப்பவும் தீத்துறாங்கள்.
ஆகவே, கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே…!
‘அமிர்தலிங்கம் ஒரு அரசியல் மேதை. தமிழர்களின் தலைவர்.
இனப்பிரச்சினைக்கு அவர்தான் நல்ல திட்டங்களை வைச்சிருந்தவர்.
தமிழீழம் நடைமுறைக்குச் சாத்தியமில்லை எண்டு அப்பவே சொன்னவர். இப்பிடியான அருமையான தலைவர் கொண்டாடப்படவேண்டியவர்’ எண்டெல்லாம் அமிர்தலிங்கத்தின்ரை நினைவுக் கொண்டாட்டங்களில பலரும் சொல்லுகினம்.
ஏன் சம்மந்தன் ஐயாவே அப்பிடித்தான் தேவாரம் பாடுகிறார்.
அப்பிடியெண்டால், அமிர்தலிங்கத்தைக் கொண்ட ஆட்களோடதானே இவை கூட்டுவைச்சவை! அது ஏன்?
கொல்லப்பட்டவனுக்கு அஞ்சலியும் புகழாரமும். கொண்டவனுக்குப் பாராட்டும் புரியாணிச் சாப்பாடும்.
என்ன மாதிரியெல்லாம் காதில பூவைக்கிறாங்களப்பா? நாங்கள் எல்லாம் இழிச்சவாய் சோமசுந்தரங்களாக இருந்தால் இப்பிடித்தான் காதையே ஓட்டை போட்டு அதுக்குள்ள புடலங்காயைச் சொருகிக் கல்லையும் கட்டித் தொங்க விடுவாங்கள்.
இப்ப பாருங்கோ…. இவை மதிக்கிற அமிர்தலிங்கத்தைப் போட்டுத்தள்ளின பொட்டம்மானைச் சந்திக்கிறதுக்காக கிளிநொச்சிக்குப் போன சம்மந்தன் ஐயா தொடக்கம் இப்ப அமிர்தலிங்கத்தாற்றை நினைவுப்பந்தல்ல கொடியேத்துகிற மாவை அண்ணை வரையில அப்ப என்ன மனச்சாட்சியோட பொட்டம்மானோடயும் பிரபாகரனோடயும் கூடிக்குலாவி இருந்து தேத்தண்ணி குடிச்சவை?
இதிலதான் கள்ளத்தனமே இருக்கெண்டதை நாங்கள் விளங்கோணும்.
இப்ப கூடத் தேர்தல் மேடைகளில தமிழீழம்தான் இறுதி இலக்கு எண்ட மாதிரி மாவை தொடக்கம் எங்கள் தங்கம் சிவசிவா விக்கினேஸ்வரன், சிறிதரன் எம்பி வரையில கொக்கரிக்கினம்.
மற்றப்பக்கத்தில தமிழீழம் சாத்தியமில்லை எண்டதை அப்பவே அண்ணர் அமிர்தலிங்கம் சொல்லிப்போட்டார். எங்களுக்கும் இது அப்பவே விளங்கீட்டுது எண்டு சம்மந்தன் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
இதில எது உண்மை? எது பொய்? சத்தியமாக நீங்களே சொல்லுங்கோ… கூட்டமைப்பின்ரை உண்மையான தீர்மானம் என்ன? போன கிழமை கோட்டில (நீதிமன்றத்திலயே) ‘தமிழீழத்தை நாங்கள் கேட்கயில்லை’ எண்டு எழுதிக்குடுத்திருக்கிறியள்…
அதை இந்தக் கள்ளப்பேப்பர்க்காரர் ஒருத்தரும் வெளியில சொல்லேல்ல. அந்த நேரம் அவையெல்லாம் நல்ல நித்திரை.
இப்பிடியெல்லாம் சுத்துமாத்துச் செய்தபடியாலதானே தமிழர்விடுதலைக்கூட்டணிக்காரரைத் தேடித் தேடிப் போட்டுத்தள்ளினவங்கள் பெடியள்!
அந்தப் பெடியள் ஆர் தெரியுமோ!
1977 இல் நடந்த தேர்தல் பரப்புரைகளில் அண்ணன் அமிர்தலிங்கம் தலைமையிலான (இதே சம்மந்தன், மாவை ஆட்களின்ரை கூட்டுத்தான்) தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் சார்பாக ஓடியாடி மும்முரமாக வேலை செய்த பெடியள்தான்.
அதாவது, இப்ப தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குக் கொடி பிடிக்கிறதைப் போல அப்ப கூட்டணிக்குக் கொடி பிடிச்ச பெடியள்…..
வரலாறு மீண்டும் திரும்பியிருக்கு…
ஹா…ஹா… ஹா…
-வடபுலத்தான்