பெண் ஒருவரிடம் கடன் பெற்ற கச்சாய்ப் பகுதியைச் சோ்ந்த ஒருவன் அக் கடனுக்காக அப் பெண்ணைக் தந்திரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் சாவகச்சேரிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாவகச்சேரி நுனாவில் பகுதியைச் சோ்ந்த சூசைதாஸ் சாந்தினி வயது 52 எனும் பெண் கச்சாய் அல்லாரையைச் சோ்ந்த எட்வின் சுஜித் என்பவனுக்கு 65 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்ததாகத் தெரியவருகின்றது. கொடுத்த கடனை செலுத்தத் தவறிய சுஜித்தை பல தடவைகள் கடனைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் சாந்தினி.
இவரது தொல்லையால் கோபமடைந்த சுஜித் , நேற்று அப் பெண்ணிடம் இன்று உனக்கு மொத்தக் கடனில் 10 ஆயிரம் ரூபாவைத் தருவதாகத் தெரிவித்து அப் பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆட்கள் இல்லாத இடம் ஒன்றில் வைத்து கொலை செய்யும் நோக்கில் தலை, மற்றும் உடல் பகுதிகளில் கடுமையாகத் தாக்கியுள்ளான்.
அதன் பின் அப பெண் இறந்து விட்டார் என நினைத்த அவன் மயங்கிய நிலையில் இருந்த குறித்த பெண்ணை, வீதி விபத்தில் வாகனத்தில் மோதி தெருவில் கிடந்த பெண் எனத் தெரிவித்து சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளான்.
அங்கு வைத்தியா்கள் சிகிச்சை அளித்து நேற்று மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பியும் பலனில்லாது பெண் இறந்துள்ளார். இந்த பெண்ணிற்கு விபத்தால் காயங்கள் ஏற்படவில்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்ததை அடுத்து பொலிசார் மேற் கொண்ட விசாரணைகளிலேயே சுஜித் இப் பெண்ணை கடனுக்காகக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக சாவகச்சேரிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த நபா் சட்டத்தரணி மற்றும் நகரசபை உறுப்பினா் ஆகியோரூடாக பொலிசாரிடம் சரணடைந்துள்ளாா்.
குறித்த சட்டத்தரணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் ரவிராஜ் அவா்களின் மச்சான் எனவும் நகரசபை உறுப்பினா் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினைச் சோ்ந்த கிசோா் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தாயிரம் ரூபாவிற்காக யாழ்ப்பாணத்தில் கொலைகள் நடைபெறுவதையிட்டு மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனா். அத்துடன் கூட்டமைப்பின் உறுப்பினா் மற்றும் பிரபல சட்டத்தரனியின் மச்சான் ஆகியோா் இதற்கு ஆதரவாக இருப்பதும் மக்களை விசனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
யாழ். இளவாலையில் குழு மோதல்: 7 பேர் வைத்தியசாலையில்
24-07-2014
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குழு மோதலாக மாறியதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நேற்று (23) மாலை நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றினை பார்வையிட்டு கொண்டிருந்த இரு குழுக்களுக்கு இடையில் போட்டி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அதனை அடுத்து இரு குழுவினரையும் அங்கிருந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய பார்வையாளர்கள் இரு குழுக்களையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் இன்று அதிகாலை (24) 12.30 மணியளவில் ஒரு குழுவினர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து மற்றைய குழுவினர் தடிகள் மற்றும் பொல்லுகளால் தாக்கியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த 7 பேரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளவாலை வசந்த புரத்தை சேர்ந்தவர்களான மகேந்திரன் ரஞ்சித்ராஜ் (வயது 32), மகேந்திரன் அசோக்குமார் (வயது 30), மகேந்திரன் ராஜ்குமார் (வயது 28), மார்க்கண்டு கருணாகரன் (வயது 21) ஆனந்தராசா கபிலன் (வயது 23), பூதப்பிள்ளை சுரேஷ் குமார் (வயது 31) இந்தரஜித் தவநேசன் (வயது 32) ஆகிய 7 பேருமே படுகாயமடைந்துள்ளனர்.
இக் குழு மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களுமே உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச் சமபவம் தொடர்பில் இளவாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொன்சலிற்றா நீரில் மூழ்கியே உயிரிழப்பு: எனினும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் விசாரணை
யாழ். குருநகர் யுவதி ஜெரோம் கொன்சலிற்ற நீரில் மூழ்கியதனாலையே உயிரிழந்தார் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
யாழ். குருநகர் பெரிய கோவிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஏப்பிரல் மாதம் 14ம் திகதி ஜெரோம் கொன்சலிற்ற (வயது 22) எனும் யுவதி சடலமாக மீட்கப்பட்டார்.
அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24) காலை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் முன்னிலையில் எடுத்து கொள்ளபப்ட்டது.
இவ் வழக்கு விசாரணைகளில் மூலம் ஜெரோம் கொன்சலிற்ற எனும் யுவதி நீரில் மூழ்கியதனாலையே உயிரிழந்தார் என்பது உறுதியாகியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
அத்துடன் குறித்த யுவதி பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளாரா என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ம் திகதி மன்றில் சமர்பிக்கும் படி கோரியதுடன் வழக்கினை அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.
குறித்த யுவதியின் மரணத்திற்கு யாழ். ஆயர் இல்லத்தை சேர்ந்த இரு பாதிரிமார்களே கரணம் என அவ் யுவதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளார்கள் என்பதுடன் குறித்த யுவதி யாழ். ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி கற்பித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.