இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஜெயவர்தனேவிடம் ‘ரா’ அதிகாரியொருவர், இலங்கையில் ராணுவப் புரட்சி ஒன்றுக்கான திட்டமிடலை பிரதமர் பிரேமதாச வெளிநாடு ஒன்றில் நடத்தினார் என்று கூறிய தகவல் ஜே.ஆரை கடுமையாக யோசிக்கவைத்திருக்க வேண்டும்.
காரணம், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அதற்கு முன்னரே எதிர்த்துக் கொண்டிருந்த பிரேமதாச, நாடாளுமன்றத்தைக் கலைப்பேன் என்று மிரட்டல் விடப்பட்டவுடன் வாய்திறக்காமல் சில நாட்கள் இருந்திருந்தார்.
அதன் பின்னர் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைப் பற்றிப் பொதுக்கூட்டங்களில் காரசாரமாகப் பேசத் தொடங்கியிருந்தார்.
இதனால், இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு ‘ஏதோ ஒரு தைரியம்’ வந்திருக்கலாம் என்பதை ஜனாதிபதி ஜெயவர்த்தனே புரிந்து கொண்டார்.
அதன் ‘ஏதோ ஒரு தைரியம்’ ஜெயவர்த்தனேவுக்கு எதிரான ராணுவப் புரட்சி என்பதை இந்திய உளவுத்துறை கூறியபோது அவர் நம்பித்தான் இருக்கவேண்டும். காரணம், அவருடைய அடுத்த நடவடிக்கைகள் அவர் நம்பியிருக்கலாம் என்பதையே காட்டுகின்றன.
ஒரு வேளை இலங்கைக்குள் ராணுவப் புரட்சி ஒன்று நடைபெற்றால், அது இலங்கை ராணுவத்தினரை வைத்துத்தான் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போது இலங்கைக்குள் இந்திய ராணுவமும் இருந்தால், ராணுவப் புரட்சி செய்யப்போகும் ஆட்கள், ஒரு தடவைக்கு பல தடவைகளாக யோசிப்பார்கள்.
அதுவும், இந்திய ராணுவம் சும்மா பேருக்கு கொஞ்சப் பேராக இருக்காமல், பலமாகவும் இருந்து, இந்திய ராணுவம் ஜெயவர்த்தனேவுடன் சுமுகமாகவும் இருந்தால் ராணுவப் புரட்சி ஒன்று ஏற்பட்டால் அதை இந்திய ராணுவமே தடுத்து நிறுத்திவிடும். இந்த திசையில் யோசித்துக் கொண்டிருந்தார் ஜெயவர்த்தனே.
ஜெயவர்த்தனேவுக்கு இந்திய உளவுத்துறை ‘ரா’வினால் கூறப்பட்ட ராணுவப் புரட்சி கடைசிவரை நடைபெறவில்லை. ஒருவேளை அப்படியொரு திட்டம் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஜெயவர்த்தனேவை மிரட்டி வைக்க ‘ரா’ கூறிய பொய்யாகவும் இருந்திருக்கலாம்.
தொடரும்..
-ரிஷி-
இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை” தொடரில் இடம்பெறும் சிலர், பின்னாட்களில் கொடுத்த பேட்டிகள் சுவாரசியமானவை.
அந்தப் பேட்டிகளை படித்தால், எமது தொடரில் நாம் இவர்களை பற்றி எழுதும்போது, இவர்கள் எப்படியான நபர்கள் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள கூடியதாக இருக்கும்.
அந்த வரிசையில் இதோ முதலாவது…
இந்திய ராணுவத்தின் அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் போய் தரையிறங்கியபோது அதன் முதலாவது தளபதியாக போயிறங்கியவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் (மேலே போட்டோவில் வலப்புறம் நிற்பவர்).
அவரது பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
கேள்வி: அமைதியை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய ராணுவம் அங்கே விடுதலைப்புலிகளுடன் யுத்தம் ஒன்றில் ஈடுபட வேண்டி வந்தது ஏன்?
சிங்: ஒருநாள் சாயந்தரம் நான் எனது ஆபரேஷன் அறையில் இருந்தபோது ராணுவத்தின் துணைத்தளபதி ரொட்ரிகஸ் அங்கே வந்து சேர்ந்தார். அவர் கூறிய தகவல் எனக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருந்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடுமையான நிலையை (ராணுவ நடவடிக்கை) எடுப்பதற்கு புதுடில்லி முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.
அதை நான் எதிர்த்தேன்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒன்றை நீங்கள் எடுக்க விரும்பினால் 10 அல்லது 20 வருடங்களுக்கு யுத்தம் நடைபெறும் என்று நான் கூறினேன். நாகலாந்து, மிசோரம் ஆகிய இடங்களில் யுத்தம் நடப்பதுபோல இதுவும் ஒரு முடிவில்லாத யுத்தமாக இருக்கும் என்று கூறினேன்.
கேள்வி: ஏன் அப்படிக் கூறினீர்கள்.
சிங்: எனக்கு இலங்கையில் நடந்தவை தெரிந்திருந்த காரணத்தால் அவ்வாறு கூறினேன். அங்கே தமிழர்கள் நிறையவே கஷ்டப்பட்டிருந்தார்கள். தியாகம் செய்திருந்தார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது ஒரேயொரு இலக்குடன் இயங்கும் அமைப்பு. அவர்களது ஒரேயொரு லட்சியம் ஈழம் விடுதலை. ஈழத்தை அடையும்வரை அவர்கள் ஓயப்போவதில்லை என்பதுத் தெரியும்.
கேள்வி: அப்போ, நீங்கள் விடுதலைப்புலிகள்மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதை எதிர்த்தீர்கள். அப்படித்தானே.
சிங்: ஆம். நிச்சயமாக எதிர்த்தேன். விடுதலைப்புலிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார் ரொட்ரிகஸ். அதற்கு நான் கூறினேன். அது உங்களால் முடியாத காரியம். அவர்களது வாழ்வின் பெரும்பகுதியை காடுகளில் கழித்தவர்கள் அவர்கள்.
விடுதலைப்புலிகளின் துணைத் தலைவருடன் (மாத்தையா) ஹெலிகாப்டரில் நான் காடுகளுக்கு மேலாகப் பறந்திருக்கிறேன். வவுனியாவுக்கு அருகிலுள்ள காடுகளுக்கு மேலாக நான் அவருடன் பறந்தபோது அந்தக் காட்டுப்பகுதிகளுக்குள் அவர்கள் எப்படி இலங்கை ராணுவத்துக்கு தண்ணி காட்டினார்கள் என்று கூறியிருக்கிறார்.
அவர்களுக்கு அந்தக் காடுகளில் ஒவ்வொரு அங்குலமும் தெரிந்திருக்கின்றது. அவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியே தள்ளினால் இந்தக் காடுகளுக்குள் சென்று விடுவார்கள். அதன்பிறகு அவர்களை வெற்றி கொள்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்று கூறினேன்.
கேள்வி : விடுதலைப்புலிகள் பற்றி அவர்களது இடங்கள், இயங்கும் முறைகள் பற்றிய உளவுத் தகவல்கள் உங்களிடம் இருந்தனவா?
சிங் : இல்லை. எமது (இந்திய) உளவுத்துறையின் ஆட்கள் இலங்கை வந்து இறங்கினார்கள். ஆனால் ஒரு அளவுக்குமேல் அவர்களால் உளவுத் தகவல்களைத் திரட்ட முடியவில்லை.
வெறும் கையுடன் டெல்லி திரும்பிச் சென்றார்கள். நான் ராணுவத்துடன் இலங்கை சென்றபோது எனக்குத் தெரிவிக்க எந்தவித உளவுத் தகவல்களும் எமது உளவுப் பிரிவிடம் இருக்கவில்லை.
அதை விடுங்கள், நானே ஹைதராபாத்தில் ஒரு டூரிஸ்ட் மேப் வாங்கிக் கொண்டுதானே இலங்கை சென்றேன். அந்தளவுக்கு இலங்கை பற்றி எமக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
பின்னாட்களில் இப்படி கூறியுள்ள மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங், இலங்கையில் என்ன செய்தார் என்பதை இத்தொடரை தொடரை படியுங்கள்-