அம்ஸ்டர்டாம் நகரின் ஷிபொல் விமான நிலையம். அங்கிருந்து மலேஷியா செல்வதற்குத் தயாரான பயணிகளில் கொர் பான் என்ற இளைஞரும் ஒருவர். பயணி கள் காத்திருக்கும் கட்டடத்தில் இருந்து விமானத்தில் ஏறுவதற்காக (ஸ்கை பிரிட்ஜ்) பாலத்தைக் கடக்கிறார் அருகில் காதலி.
பாலத்தில் இருந்து அவதானித்த சமயம் அவருக்கு மலேஷியன் எயார்லைன்ஸ் இலச்சினை பொறிக்கப்பட்ட விமானம் நிறு த்தி வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
மார்ச் மாதம் காணாமல்போன எம்எச்- 370 விமானம் ஞாபகத்திற்கு வருகிறது. தாம் ஏறவிருக்கும் எம்எச்-17 விமானத்தின் புகைப்படத்தைப் பிடிக்கிறார். தமது பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றுகிறார்.
போயிங் 777–200 ரகத்தைச் சேர்ந்த விமானம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. “இந்த விமானம் காணாமல் போனால், இது இப்படித் தான் இருக்கும்,” என்ற வாசகத்தையும் சேர்க்கிறார்.
இந்தப் படத்திற்குக் கீழே நண்பர்கள் கருத்துக்களை இடுகிறார்கள். விடுமுறையை உல்லாசமாக அனுபவித்து விட்டுத் திரும்பு என்று வாழ்த்துகிறார்கள். நிறைய போட்டோக்களைப் பிடித்து பேஸ்புக்கில் போடு என்று அன்புக்கட்டளை இடுகிறார்கள்.
விமானம் 14 நிமிட தாமதத்திற்குப் பின்னர், முற்பகல் 11.30 அளவில் தரையில் இருந்து மேலெழும்புகிறது. கொர்பான் அடங்கலாக 280 பயணிகளுடனும், 15 சிப்பந்திகளுடனும் விமானம் பறக்கிறது.
அது ஜேர்மனி, போலந்து ஆகிய நாடுகளின் வான்பரப்பைக் கடந்து சென்று உக்ரேனின் வான்பரப்பை அடைகிறது. மொத்தமாக 114 நிமிடங்கள் பயணம். சரியாக பிற்பகல் 1.21 அளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் எம்எச்-17 விமானத்தைத் தேடுகிறார்கள். அதனுடனான ராடர் தொடர்புகள் இல்லை.
அடுத்து, உக்ரேனின் கிழக்குப் பகுதியிலுள்ள நிலப்பரப்பு. உக்ரேனிய அரசபடைகளுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம்.
Igor Strelkov, a pro-Russian separatist commander.
கிளர்ச்சிக்குழுவைத் தலைமை தாங்கி வழிநடத்தும் ஆயுதபாணி. அவரது பெயர் இகொர் கேர்க்கின். ரஷ்ய மொழியில் இயங்கும் Vkontakte என்ற சமூக வலைதளத்தில் சரியாக 2.50 அளவில் தமது கருத்தைப் பதிவேற்றுகிறார்.
சற்று முன்னர் An-26 ரக விமானத்தை சுட்டி வீழ்த்திவிட்டதாகக் கூறுகிறார். எமது வான்பரப்பைப் பயன்படுத்த வேண்டாமென எச்சரித்ததாவும், அதனை அவர்கள் கேட்கவில்லை எனவும் அவர் பதிவிடுகிறார். அவரது கருத்துக்களுடன் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ காட்சியும் சேர்க்கப்படுகிறது. நீண்ட வெளியாகக் காட்சியளிக்கும் தரிசு நிலத்தின் மறுமூலையில் கரும்புகை எழும் காட்சி.
கேர்க்கின் தரவேற்றிய காணொளியைத் தொடர்ந்து, இன்னும் சில வீடியோக்கள் சர்வதேச தகவல் வலைப்பின்னலில் சேர்க்கப்படுகின்றன. எம்எச்-17 விமானம் ராடார் திரைகளில் இருந்து மறைந்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் அதற்கு நேர்ந்த கதி தெளிவாகிறது. கொர் பான் என்ற நெதர்லாந்து இளைஞரின் ஜோக் உண்மையாகிறது.
அவரது பேஸ்புக் பக்கத்தில் கம்பீரமாக நின்ற விமானம் சுக்குநூறாக தரையில் கிடக்கிறது. உக்ரேனிய நிலப்பரப்பில், ரஷ்யா எல்லையில் இருந்து 25 மைல் தொலைவில் அதன் சிதைவுகள் சிதறிக் கிடக்கின்றன, கருகிய நிலையில் இருந்த சடலங்களும் தான். சடலமாக மீட்கப்பட்டவர்களில் பத்து தேசங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் மத்தியில் எயிட்ஸ் ஆராய்ச்சியில் சர்வதேச புகழ்பெற்ற நிபுணர், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற அதிகாரி, நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்காக இந்தோனேஷியா திரும்பும் இளங்குடும்பத்தினர், விடுமுறைக்காக மலேஷியா செல்லும் காதலர்கள் என்ற ரீதியில் பல தரப்பினரும் இருந்தார்கள். முதியவர்கள், பிள்ளைகள் என்ற பேதமின்றி பல வயதினரும் பலி கொள்ளப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசாபாசங்களும், கனவுகளும், இலட்சியங்களும், எதிர்காலத் திட்டங்களும் இருந்திருக்கக்கூடும். நடுவானில் வெடித்துச் சிதறி, சூரிய காந்தி மலர்கள் பூத்திருந்த வெட்டவெளியில் நிலத்தில் விழுந்த விமானத்துடன் சேர்ந்து எல்லாம் சாம்பலாகியிருந்தன.
மலேஷியன் எயார்லைன்ஸின் தரவுகள்
நெதர்லாந்து-–189, மலேஷியா–-44, அவுஸ்திரேலியா-–27, இந்தோனேஷியா-–12, பிரி ட்டன்-–9,ேஜர்மனி–-4, பெல்ஜியம்–-4, பிலிப் பைன்ஸ்–-3, கனடா–-1, நியூசிலாந்து-–1, இன ங்காணப்படாதவர்கள்-–4
மலேஷியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்எச்- 370 விமானத்திற்கு நேர்ந்த கதி மனிதகுலத்தின் அறிவியல் முன்னேற்றத்திற்கு சவால் விடும் துரதிர்ஷ்டம் என்றால், எம்எச்- 17 விமானத்திற்கு நேர்ந்த கதி சமகால உலகின் அரசியல் நெருக்கடிகளின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியென்றே குறிப்பிட வேண்டியிருக்கிறது.
இன்று மனிதகுலம் அறிவியல் ரீதியாக எவ்வளவோ முன்னேறியிருந்தபோதிலும் எம்எச்-370 விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த எம்எச்- 17 விமானத்தை ஏவுகணை கொண்டு தாக்கி வீழ்த்தும் அளவிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் தீவிரம் பெற்றுள்ளதென்றால், அதற்குத் தீர்வு காணவும் தவறியிருக்கிறோம். வீழ்ந்து நொருங்கிய விமானத்தின் சாம்பல்களில் அரசியல் செய்யும் அராஜகம் மனிதகுலத்தின் துரதிர்ஷ்டம் எனலாம்.
எம்எச்-17 விமானம் எவரோ ஒருவரால் சுட்டு வீழ்த்தப்பட்டமை ஏறத்தாழ ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதை தாம் கண்டதாகக் கூறுபவர்கள் அதற்கு முதலாவது சாட்சியாக அமைந்துள்ளார்கள்.
விமானத்தின் சிதைவுகள் ஓரிடத்தில் அல்லாமல் பாரியதொரு நிலப்பரப்பிற்குள் இறைந்து கிடப்பது இரண்டாவது சாட்சி. விமானம் முழுமையாக நிலத்தில் வீழ்ந்து வெடித்திருக்குமானால், அதன் பாகங்கள் ஓரிடத்தில் தான் இருந்திருக்கும்.
ரஷ்ய சார்புடைய கிளர்ச்சிக் குழுவின் தலைவர் ஒருவருக்கும் ரஷ்ய உளவாளிக்கும் இடையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பாஷணை மூன்றாவது சாட்சி. இந்த சம்பாஷணை குறித்த ஒலிப்பதிவுகள் என்று தாம் கூறும் ஒலிநாடாக்களை உக்ரேனிய ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
இந்த ஒலிப்பதிவை தெளிவாகக் கேட்டால், தாம் விமானத்தை வீழ்த்தி விட்டோமென கிளர்ச்சியாளர் கூறுவதைக் கேட்கலாம். பயணிகள் விமானமே சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் கூறுகையில், மறுபுறத்தில் இருப்பவர் அதிருப்தி தெரிவிப்பதும் ஒலிநாடாவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பாஷணையை ஆதாரமாக வைத்து விமானத்தை யார் சுட்டார்கள் என்பதை மேற்குலக ஊடகங்கள் தீர்மானமாகக் கூறி வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இது உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் துணையுடன் இயங்கும் கிளர்ச்சிக் குழுவின் வேலையென அவை கூறுகின்றன.
இதற்கு முன்னரும் உக்ரேனிய இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக போர் விமானங்களையும், சரக்கு விமானத்தையும் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதால், இதுவும் கிளர்ச்சியாளர்களின் வேலையாகத் தான் இருக்க வேண்டும் என்பது உக்ரேனிய அரசாங்கத்தின் வாதம்.
ராடார் துணையுடன் இயங்கக்கூடிய பியூக் என்ற விமானத் தகர்ப்பு ஏவுகணைத் தொகுதியால் மாத்திரமே இத்தகைய விமானத்தைத் தகர்க்க முடியுமென உக்ரேனிய படைத்தரப்பு வாதிடுகிறது.
இத்தகைய இயந்திரங்கள் ரஷ்யாவிடம் மாத்திரமே உள்ளதாகவும், இதனை ரஷ்யா உக்ரேனிய கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கியிருக்கக் கூடுமெனவும் படைத்தரப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ராடார் திரைகளில் இருந்து மறைந்த சமயம், எம்எச்-17 விமானம் 33,000 அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. பியூக் ஏவுகணை செலுத்தியின் மூலம் 72,000 அடிகள் உயரத்திலுள்ள இலக்கைத் தாக்க முடியும்.
தனது இலக்கு சிவிலியன் விமானமா, போர் விமானமா என்பதைக் கண்டறியும் ஆற்றல் பியூக் ஏவுகணைத் தொகுதிக்கு கிடையாதென நிபுணர்கள் கூறுகிறார்கள். இத்தகைய தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில், ரஷ்ய-சார்பு கிளர்ச்சியாளர்கள் உக்ரேனிய போர் விமானம் என்றெண்ணி தவறுதலாக எம்எச்-17 விமானத்தைத் தாக்கியிருக்கக்கூடும் என்ற ஊகங்களும் வெளியாகியிருக்கின்றன.
விமானம் தொடர்பில் தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா நிராகரிக்கிறது. இதற்குக் காரணம் உக்ரேனிய இராணுவமே என்பது ரஷ்ய தரப்பின் குற்றச்சாட்டாக இருக்கிறது. உக்ரேனிய வான்பரப்பில் நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கு உக்ரேனிய அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் இராஜதந்திர மொழியில் பேசி சமாளித்தார்.
இதற்கு மத்தியில், விமானத்தை உக்ரேனிய இராணுவம் சுட்டிருக்கலாம் என்று ரஷ்யாவின் புலனாய்வாளர்கள் தெரிவித்தார்கள். இதனை நிரூபிப்பதற்கு பல விளக்கங்களையும் முன்வைத்தார்கள். இதில் முக்கியமானது யாதெனில், உக்ரேனிய விமானப் படைகள் ரஷ்ய ஜனாதிபதியின் விமானத்தை தகர்ப்பதற்கு மேற்கொண்ட முயற்சியில் எம்எச்-17 விமானம் பலிக்கடாவாக மாறியது என்பதாகும்.
மலேஷிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சமயத்தில், ரஷ்ய ஜனாதிபதியின் விமானம் உக்ரேனிய வான்பரப்பிற்கு மேலாக பறந்திருக்கிறது. அவர் பிரேஷிலில் நடைபெற்ற ப்ரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய சமயத்தில், இரு விமானங்களும் ஒரே உயரத்தில் குறுக்கே பயணித்ததாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து மத்திய நிறுவகம் அறிவித்துள்ளது. இரு விமானங்களும் ஒரே அளவானவை என்பது உபரித்தகவல்.
விமானத்தை யார் சுட்டிருக்கலாம் என்பதைக் கண்டறிவதற்கு பல வழிகள் இருக்கின்றன. இகோர் கோர்க்கின் முதலான கிளர்ச்சியாளர்கள் சமூக வலைதளத்தில் இட்ட கருத்துக்கள் உண்மையா என்பதைக் கண்டறிவதும், இவருக்கும் ரஷ்ய உளவாளி ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பாஷணை குறித்த ஒலிநாடா உண்மையானது தானா என்பதை பகுப்பாய்வு செய்வதும் ஒரு வழி.
விமானத்தின் கறுப்புப் பெட்டிகளையும், சிதைவுகளையும் ஆராய்வது மற்றைய வழி. இதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. விமானம் வீழ்ந்து நொருங்கிய பிரதேசம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு சென்று திரும்பியவர்கள் கிளர்ச்சியாளர்கள் அடாடிவத்தனம் காட்டுகிறார்கள் என்று குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கறுப்புப் பெட்டிகள் பற்றி சர்ச்சைகள் நீடிக்கின்றன. ரஷ்ய சார்புடைய கிளர்ச்சிக் குழுவின் தலைவரொருவர் எந்தவொரு கறுப்புப் பெட்டியும் கிடைக்கவில்லையென அறிவித்த நிலையில், மற்றொருவர் தம்மிடம் எட்டு கறுப்புப் பெட்டிகள் உள்ளதாகக் கூறுகிறார். இவர்களில் யாரை நம்புவது என்ற கேள்வி தலைதூக்கியிருக்கிறது.
வீழ்ந்து நொருங்கிய மலேஷிய விமானம் பற்றிய கேள்விகளுக்கு பஞ்சமில்லை. இதன் பைலட் ஏன் கடைசி நேரத்தில் விமானத்தின் பாதையை மாற்றி ஆயுதமோதல் நீடிக்கும் நிலப்பரப்பிற்கு மேலாக விமானத்தை செலுத்த வேண்டும் என்ற கேள்வி முக்கியமானது.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட தினத்தன்று உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இருந்து இரவோடி இரவாக ரஷ்யாவிற்குள் கொண்டு செல்லப்பட்ட ஏவுகணை செலுத்தி வாகனத்தில் இருக்க வேண்டிய ஏவுகணைகளில் இரு ஏவுகணைகள் குறைந்தது ஏன் என்ற கேள்வியும் முக்கியமானது.
குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னதாகவே ரஷ்யாவிற்குத் தண்டனை அளிக்கத் துடிக்கும் மேற்குலக சார்புடைய ஊடகங்களில் முன்னைய கேள்வியை விடவும் பின்னைய கேள்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
விமானத்திற்கு நேர்ந்த கதி பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணையே விமானத்தை வீழ்த்தியிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அரசியலில் ஒபாமாவின் தவிர்க்க முடியாத கூட்டாளிகளான டேவிட் கமரூன், ரோனி அபொட் போன்றவர்களும் ரஷ்யாவை சாடுவதில் குறியாக இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் தீவிரம் காரணமாக, இன்று முக்கியமான விடய மொன்றை மறந்து விடுகிறோம். எம்எச்-17 விமானத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எந்தெந்த பிரிவுகள் மீது பரஸ் பரம் குற்றஞ்சாட்டப்படுகிறதோ, அந்தப் பிரிவுகள் மத்தியில் அரசியல் பகைமை யைத் தீவிரப்படுத்தி உக்ரேனை இரண்டாக் கியதும் மேற்குலக நாடுகள் தான் என்பது தான் உண்மை.
உக்ரேனின் மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் ஐரோப்பிய மோகத்தைத் தூண்டிவிட்ட மேற்குலக நாடுகள், ரஷ்ய சார்புடைய விக்டர் யனுக்கோவிச்சை பதவி யில் இருந்து தூக்கியெறியும் ஆர்ப்பாட்டத் திற்கு மறைமுகமாக ஆதரவளித்ததை எவ ரும் மறந்து விட்டிருக்க மாட்டார்கள்.
இன்று உக்ரேனில் மேற்குலக சார்புடைய சக்திகள் ஆட்சிபீடத்தில் ஏறிய நிலையில், உக்ரேனின் கிழக்குப் பகுதியில் தமது இருப் புக்காக போராடும் ரஷ்ய வம்சாவளி உக்ரேனியர்களை பயங் கரவாதிகளாக சித் தரிப்பதும் மேற்குலகம் தான்.
இன்று உக்ரேனுக்கும், ரஷ்ய சார்புக் கிளர்ச் சியாளர்களுக்கும் இடையிலான சர்ச்சை யில் ஏறத்தாழ 300 உயிர்கள் பலியாகியு ள்ள சந்தர்ப்பத்தில், உண்மையாக நடந் தது என்ன என்பதைக் கண்டறியும் முயற் சிகளை புறக்கணித்து விட்டு அவர்களது மரணத்தில் அரசியல் செய்யும் சாணக்கி யம் தான் கவலைக்குரிய விடயமாக இருக் கிறது.
(சதீஷ் கிருஷ்ணபிள்ளை)