1939ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டு வரை 5 வருடங்கள் இரண்டாம் உலக மகாயுத்தம் நிகழ்ந்தது. அதில் ஜேர்மனியும் இத்தாலியும் ஜப்பானும் இணைந்து இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராகப் போரிட்டன. அப்போது ஐரோப்பாவில் ஜேர்மனிக்கும் ஆபிரிக்காவில் இத்தாலிக்கும் ஆசியாவில் ஜப்பானுக்கும் இருந்த ஆதிக்கமே இதற்குக் காரணமாகும்.
இதில் ஜேர்மனி பிரான்ஸைக் கைப்பற்றியதும் பக்கத்திலிருந்த இங்கிலாந்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியது. உடனே அது தனது காலனித்துவ நாடுகளிடமிருந்து மனித வளங்களையும் பொருளையும் கேட்டுப் பெறும் நிலை ஏற்பட்டுவிட்டது.
அச்சமயம் தன்னை ஆக்கிரமிக்க வந்த ஜேர்மனியிடம் ரஷ்யா சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து ஒப்பந்தம் மூலம் போர் தவிர்ப்பு செய்துகொண்டது. இதனால் ஜேர்மனியும் இத்தாலியும் தனித்தனியாக சில சிறிய நாடுகளைக் கைப்பற்றின. ஆசியாவில் ஓரிரு நாடுகளை ஜப்பான் கைப்பற்றிய போதும் எமது நாடான இலங்கையைக் காப்பாற்றுவதில் இங்கிலாந்து துணிந்து நின்றது.
வின்சன்ட் சர்ச்சில்
இந்நிலையில் ஜேர்மனியின் அடல்ப் ஹிட்லரையும் இத்தாலியின் முசோலினியையும் ஜப்பானிய சக்கரவர்த்தி டோஜாவையும் நினைத்து உலகமே அஞ்சியது. எனினும் பிரான்ஸும் இங்கிலாந்தும் ரஷ்யாவும் அவசரப்படவில்லை.
தக்க சமயம் வரும் வரை அவை காத்திருந்தன. யுத்தத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த இங்கிலாந்தின் வின்சன்ட் சர்ச்சில் யுத்த வெற்றிக்கான தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரான்ஸ், போலந்து, யூகோஸ்லேவியா, நோர்வே, செக்கஸ்லோவேகியா, மலேஷியா, பர்மா ஆகிய நாடுகள் அவர் தமது விடுதலையை ஜேர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து பெற்றுத் தருவார் என எதிர்பார்த்திருந்தன.
இந்நிலையில் ஜப்பான் முன்யோசனையின்றி அவசரப்பட்டு அமெரிக்காவின் பேர்ள் ஹாபரைத் தாக்கியிருக்க வேண்டியதில்லை. இதனால் அதுவரை கள நிலையை அவதானித்துக் கொண்டிருந்த அமெரிக்கா வின்சன் சர்ச்சிலுக்கு ஆதரவாகக் களத்தில் குதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்களில் அணுகுண்டு வீசி அந்நாட்டை சரணடைய வைத்தது.
அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக ரூஸ்வெல்ட் இருந்தார். இதனால் ஆசியாவில் தனக்கிருந்த இக்கட்டு நீங்கியதும் இங்கிலாந்து தன்னோடு அமெரிக்காவையும் கூட்டு சேர்த்துக்கொண்டு ஜேர்மனியிடமிருந்து பிரான்ஸை மீட்டது. இதை தக்க சமயமாகக் கருதிய ரஷ்ய ஜனாதிபதி ஜோஸப் ஸ்டாலின் உடனே ஜேர்மனியுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்தார்.
இதனால் ஆத்திரமுற்று ஜேர்மன் தனது படையில் பெரும் தொகையினரை ரஷ்யாவைத் தாக்க அனுப்பியிருக்க வேண்டியதில்லை. ரஷ்யாவின் சீதோஷணம் தட்ப வெப்பம், குளிர் களநிலவரம் முன்னேற்பாடு ஆகியவற்றை ஜேர்மனி ஒப்பந்த காலத்தில் அறிய முனையாதது யுத்த முறையில் பாரிய தவறாகும். வீரம் விலை போகாது. விவேகம் துணைக்கு வராவிட்டால் என்பது போல் ஹிட்லரின் நிலை ஆகிவிட்டது.
ஒரு புறம் அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ் படைகள் கூட்டாக ஜேர்மனியை தாக்குகையில் மறுபுறம் ரஷ்யாவுக்குள் புகுந்த ஜேர்மன் படைகளால் திரும்பிவர முடியவில்லை. ஆரம்பத்தில் ரஷ்யா செய்தது போர் வியூகமாகும். திடீர் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வது விவேகமல்ல என்பற்காகவுமே அது சிறு இழப்புகளோடு பின்வாங்கியது.
பின்னர் குளிர்காலம் அண்மித்ததும் பாரிய ஏற்பாடுகளை செய்து கொண்டு குளிர் வலயம் வரை பின்வாங்கியது. இதனால் வெற்றி களிப்பிலும் மதமதப்பிலும் இருந்த ஜேர்மன் படைகள் முன் பின் யோசிக்காமலும் திட்டமிடாமலும் வெகுதூரம் போய் குளிர் வலயத்தில் சிக்கிக் கொண்டன.
முடிவில் ஆயுதத் தாக்குதலையும் விட குளிர் வாட்டத்தாலேயே ஜேர்மன் படைகள் மாண்டு போயின. முடிவில் தனது தற்காப்பையும் கூட ஜேர்மனால் பேண முடியவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவற்றின் கூட்டுப் படையை நேச அணிகள் ஜேர்மனை துவம்சம் செய்தன. பின்னர் இத்தாலியையும் கைப்பற்றின.
ஹிட்லரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர். முசோலினியும் அவரது மனைவியும் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர் .
முடிவில் ரஷ்யா திடீரென்று ஜேர்மனுக்குள் நுழைந்து, ஒரு பகுதியை துண்டாடி எடுத்துக் கொண்டு தனக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்து கொண்டது. அமெரிக்காவும் தனது செலவீனங்களை ஈடு செய்து கொள்ள மறுபகுதியைப் பிடித்தது.
உண்மையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் அப்போரில் ஈடுபடாதிருந்தால் இங்கிலாந்து, பிரான்ஸை மீட்பது ஒருபுறமிருக்க தன்னையே ஜேர்மனியிடம் பறிகொடுத்திருக்கும். அதன் பிறகு தான் உலக நாடுகள் அமெரிக்க அணியாகவும் ரஷ்ய அணியாகவும் பிரிந்தன.
இங்கிலாந்தும் பிரான்ஸும் அமெரிக்க அணியில் சேருகையில் போலந்து, செகோஸ்லேவேகியா, யூகோஸ்லேவியா ஆகியவை ரஷ்ய அணியில் இணைந்தன.
பின்னர் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடியாக மோதிக்கொண்டதில்லை. காரணம் யுத்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் அழிவு என்பது அவற்றுக்குத் தெரியும். அதனால் தான் 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் யுத்தம் நிகழ்ந்த போது அமெரிக்காவுக்கு வழிவிட்டு ரஷ்யா ஒதுங்கியிருந்தது. அதனால் தான் ஆறு நாட்களில் இஸ்ரேலால் எகிப்து சிரியா ஜோர்தான் ஆகிய மூன்று நாடுகளையும் இலகுவாக தோற்கடிக்க முடிந்தது.
அது போன்றே 1971 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் யுத்தம் நிகழ்ந்த போது அமெரிக்கா ரஷ்யாவுக்கு வழிவிட்டு ஒதுங்கிவிட்டது. அதனால் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷாக தனி நாடாகியது. அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துக் கொண்டதற்குக் காரணம் என்ன?
மத்திய கிழக்கில் இஸ்ரேல் அமெரிக்காவின் முதன்மை நாடாக இருந்ததும் இந்தியாவோடு ரஷ்யா பலமான ஒப்பந்தம் செய்திருந்ததுமே இதற்குக் காரணங்களாகும். அதனால்தான் 1987ஆம் ஆண்டு இந்தியா ஜே.ஆரை எதிர்க்கும் போது அமெரிக்கா ஜே.ஆருக்கு இந்தியாவோடு இணங்கிப் போகுமாறு கூறியது.
எனினும் ஆப்கானிஸ்தானில் ரஷ்ய சார்பு கம்யூனிஸ்ட் ஆட்சி உருவானதை அமெரிக்கா விரும்பவில்லை. அங்கு சென்று நேராகத் தாக்குவதை விடவும் இஸ்லாமிய போராளிக்குழுக்களை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா கருதியது. கம்யூனிஸத்தை இஸ்லாம் எதிர்ப்பதால் அமெரிக்காவின் வியூகம் பலித்தது. ஏராளமான முஸ்லிம் போராளிகள் அணி திரண்டனர். தாராளமாக ஆயுத உதவிகளையும் பொருளுதவியையும் பயிற்சியையும் முஸ்லிம் போராளிகள் பெற்றனர்.
இதனால் ரஷ்ய இராணுவம் மிகக்கடும் தாக்குதல்களுக்குள்ளாகி சொந்த நாட்டுக்கே திரும்பியது. பின்னர் பொருளாதார நலிவு ஏற்பட்டு அதன் மாநிலங்கள் பலவும் தனித்தனியாகப் பிரிந்தன. ரஷ்யா முடிவில் அமெரிக்காவுடனான தனது சம நிலைப்பாட்டை இழந்து கால்மாக்ஸின் கொள்கையையும் விட்டு விட்டு லெனினின் சிலைகளையும் உடைத்துக்கொண்டு அமெரிக்காவின் திறந்த பொருளாதாரத்தில் பங்காளியுமாகியது. அதன் பின் உலகின் தனிக்காட்டு ராஜாவாக அமெரிக்காவே திகழ்கிறது.
ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் குவைத்தைக் கைப்பற்றியதும் அமெரிக்கா அதைச்சார்பாகப் பயன்படுத்தி இல்லாத இரசாயன ஆயுதத்தை இருப்பதாக ஐ.நா. மூலம் கூற வைத்து சில நாடுகளை கூட்டு சேர்த்துக் கொண்டு போய் சதாம் ஹுசைனையும் அவரது ஆட்சியையும் அழித்து தனக்குச் சார்பான அரசை அமைத்தது.
அப்போது ரஷ்யாவுடனும் சீனாவுடனும் சதாம் ஹுசைனுக்கு நெருங்கிய நட்பு இருந்த போதும் அவை எந்த உதவியும் புரியவில்லை. ஐ.நா.வின் அனுமதியையும் பெற்று சில நாடுகளுடன் வந்து அமெரிக்கா தாக்கியது யுத்த ரீதியிலான பாரிய ராஜதந்திரமாகும் இது.
அமெரிக்கா எதைச் செய்தாலும் ஐ.நாவை சம்பந்தப்படுத்திக் கொண்டும் மனிதாபிமான நடவடிக்கை எனக்கூறிக் கொண்டும் தன்னை நல்ல நாடாகக் காட்டிக்கொண்டுமே செய்யும். இது இராஜதந்திரத்திலெல்லாம் பெரிய இராஜதந்திரமாகும் எனலாம்.
தடாலடியாக சதாம் ஹுஸைன் குவைத் தைக் கைப்பற்றிக் கொண்டு இதை மீட்க எவரேனும் வந்தால் இதைச் சாம்பல் மேடாக்கி விடுவேன் என்றாரே இச்சொல் சர்வதேச நாடுகளையும் ஐ.நா.வையும் போருக்கு அழைக்கும் சவாலாகவே அமைந்தது.
உணர்ச்சி வசப்படும் இத்தகைய வார்த்தைகளைத்தான் அமெரிக்கா விரும்புகின்றது. ஐ.நா.வுக்கான செலவில் குறிப்பிட்ட ஒரு தொகையை அமெரிக்கா வழங்குவதால் அமெரிக்காவின் கண்டிப்பை ஐ.நா. மீறியதில்லை. தனக்குச் சவாலான நாட்டில் உள்நாட்டு நெருக்கடி ஏற்பட்டாலும் அமெரிக்கா மூக்கை நுழைக்கும். இவ்வாறுதான் லிபியாவில் அது தலையிட்டது.
அங்கு ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. முடிவில் தெருக்குழாயில் பதுங்கியிருந்த சதாம் ஹுசைன் இழுத்து வரப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டது போன்றே அம்மர் கடாபியும் சாக்கடையில் போடப்பட்ட பின் பாதசாரிகளால் இழுத்து வரத் தெருப்பையன்களால் செருப்புக்களாலும் தடிகளாலும் அடித்துக் கொல்லப்பட்டார்.
எனினும் அவர் கால் நூற்றாண்டு காலம் நெருங்கிப் பழகிய ரஷ்யாவோ சீனாவோ கியூபாவோ எதுவும் செய்யவில்லை. இப்போது நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் அமெரிக்கத்தலையீடு நமக்குள் நாமே ஏற்படுத்திக் கொண்டவை தாம்.
இலங்கை விடயத்தில் தானும் தவறிழைத்திருப்பதாக ஐ.நா. தனது உள்ளக அறிக்கையில் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் பிரிட்டனும் அவ்வேளை இலங்கைக்கு சகல வகைகளிலும் உதவியுள்ளது. இந்தியா இதில் பெரும்பங்கு வகித்துள்ளது.
அப்படியானால் அமெரிக்காவின் பிரேரணையும் ஐ.நா.வின் விசாரணையும் இந்தியாவின் பிணையும் எதற்கு? சீனாவுடன் இலங்கை சேர்ந்ததாலேயே இத்தனை விளைவுகளும் ஏற்படுகின்றன. இலங்கை சீனாவுடனான உறவைக் கைவிட்டு அமெரிக்காவுடன் இணையுமானால் பிடி தளர்ந்து விளைவுகள் சுமுகமாகி விடும். எனினும் சீனா அதற்கு இடமளிக்காது.
ரஷ்யாவுக்கு சிரியா முக்கியம் போலவே இப்போது சீனாவுக்கு இலங்கை முக்கியமாகியிருக்கிறது. மத்திய கிழக்கில் ரஷ்யாவுக்கு எண்ணெய் வழங்கும் பிரதான நாடு சிரியா என்றால், சீனாவின் முத்துமாலை எனும் எண்ணெய்க்குழாய் வழித்திட்டத்துக்கு இலங்கை முக்கியமான நாடாகும். அதனால் சீனா இலங்கைக்கு முதலீடுகளை அபிவிருத்திப் பங்காளியாக உள்நுழைந்திருக்கிறது. இந்நிலையில் இலங்கை மீது இந்தியா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டால் இலங்கைக்குள் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி விடும் என அஞ்சுகிறது.
ஆக, சர்வதேச ரீதியில் இலங்கை அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுப்பதை சீனா அனுமதிக்காது. அதனால்தான் இலங்கை அமெரிக்காவுக்கும் அதன் சார்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும் பணியாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. இப்போது சீனாவின் கையில்தான் இலங்கையின் தலையெழுத்து இருக்கிறது.
உலகில் மிகப்பெரிய சனத்தொகையைக் கொண்ட சீனா, கம்யூனிஸத்தைக் கைவிட்டு விட்டு திறந்த பொருளாதாரக் கொள்கையால் துரித அபிவிருத்தி அடைந்த நாடாகும். அது கம்யூனிஸ நாடாக இருந்தபோது அமெரிக்காவுடன் கடும்பகை இருந்தது. இப்போது அதன் திறந்த பொருளாதாரக் கோட்பாட்டால் அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் அதன் வர்த்தகம் மேலோங்கியிருக்கிறது. அதனால் தான் ஈராக்குக்கும் லிபியாவுக்கும் அமெரிக்கா தாக்குகையில் சீனா எதுவும் பேசவில்லை. யுத்தத்திற்குப் போனால் பொருளாதார, தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிப்புறும் என்பதே அதன் நிலைப்பாடாகும்.
இதுவரை ஐ.நா. சபையில் சீனா அம்ச அடக்கமாக பின் பாட்டு மட்டுமே பாடுகிறது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு நடவடிக்கைகளை இலங்கை தனித்து நின்றே சமாளிக்கிறது. சீனா தனது முத்து மாலைத்திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்குமா? அமெரிக்க இந்திய வர்த்தக விருத்திக்கு முக்கியத்துவம் அளிக்குமா? முத்துமாலைத் திட்டத்துக்காயின் இந்த கடற்பரப்பு யுத்த வலயமாகி விடும். அமெரிக்க – இந்திய வர்த்தக விருத்திக்காயின் இலங்கை தனித்து விடப்பட்டு விடும். இது அமெரிக்காவின் கையில் இலங்கையைத்தாரை வார்த்துக் கொடுக்கும் நிலையாகும். இவை வெளிவிவகாரம் பற்றிய ஆய்வாகும்.
உள்நாட்டு விவகாரப்படி அரசின் அடித்தளம் பேரினவாதமேயாகும். பேரினவாதிகள் அனுமதித்தாலன்றி அரசால் ஒரு சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாது. இன்றைய சூழலில் இதுவும் அமெரிக்காவுக்குச் சாதகமான நிலைப்பாடாகும். இன ரீதியிலான சர்வதேச சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தாததும் ஐ.நா.வை அலட்சியம் செய்வதும் சர்வதேச நாடுகளோடு முரண்படுவதும் அமெரிக்காவிடம் பிடிகொடுத்து ஆட்டமி ழக்கும் செயற்பாடுகளே.
(ஏ.ஜே.எம்.நிழாம்)