பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் உடனடியான நிபந்தனையற்ற மனிதாபிமான யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.
முஸ்லிம்களின் புனித பண்டிகைத் திருநாளான ரமழானுக்கும் அதற்கு அப்பாலுமான காலப்பகுதியில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அழைப்பு விடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது ஆதரவளிக்கப்பட்டது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளால் யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட்டதையடுத்து பல நாட்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு காஸா பிராந்தியத்தில் அமைதி நிலவியதாகக் கூறப்படுகின்றது.
இஸ்ரேல் மற்றும் காஸா பிராந்தியப் போராளிகளுக்கிடையிலான மோதல்களால் இதுவரை 1030 க்கும் அதிகமான பலஸ்தீனர்களும் 43 இஸ்ரேலிய படைவீர்கள், இரு இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இஸ்ரேலிலுள்ள ஒரு தாய்லாந்து பிரஜை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தென் இஸ்ரேலிய பிராந்தியத்தில் திங்கட்கிழமை புதிதாக ஏவுகணைத் தாக்குதலொன்று இடம்பெற்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவிக்கின்றது.
மூன்று வாரங்களுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு காஸா பிராந்தியத்தில் அமைதி நிலவிய போதும் இதுவரை மோதல்களால் பெருந்தொகையானோர் உயிரிழந்துள்ளதால் அந்த பிராந்தியத்திலான ரமழான் பண்டிகைக்கால கொண்டாட்டங்கள் சோபை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
காஸா தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் ருவண்டாவிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,காஸாவின் எதிர்காலம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் உடன்படிக்கையொன்றை எட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினது நிலையங்கள் உட்பட சிவிலிய மற்றும் மனிதாபிமான நிலையங்கள் மதிப்பளிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் காஸாவிலுள்ள பலஸ்தீன மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளின் தேவைப்பாடு குறித்தும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பலஸ்தீன பிரதிநிதியான றியாத் மன்சூர் கூறுகையில், காஸாவிலிருந்து தனது படையினரை இஸ்ரேல் வாபஸ் பெற்றாலே உடன்படிக்கை சாத்தியம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்இஸ்ரேலிய பிரதமர்பெஞ்ஜமின் நெட்டான்யாஹுவுடன்தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உடனடியான நிபந்தனையற்ற மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுத்தார்.