இழப்பும் இறப்பும் முடிவு அல்ல…தோல்வியும் துயரமும் இறுதியல்ல… ஏமாற்றமும் எதிர்ப்பும் அழிவு அல்ல…வயதும் வியாதியும் ஓய்வு அல்ல…மாறாக ஒவ்வொன்றும் ஒரு மைல்கல்.
ஒரு புதிய துவக்கம் இந்த உயிரோட்டமுள்ள கருத்துக்களில் ஆழ்ந்த பல அர்த்தங்கள் காணப்படுகின்றன. ஆனால், இப்பூமியில் உயிருடன் உயிரோடு உயிராக காணப்பட்ட உறவுகள் பிரிந்து சென்ற பின்னர் எஞ்சுவது வெறுமையே.
மனைவியாக… தாயாக… மாமியாக…சகோதரியாக… அவதாரமெடுத்திருந்த ஒரு பெண் அனைத்து உறவுகளையும் கண்முன்னே பறிகொடுத்துவிட்டு அபலைப் பெண்ணாக தனது முதுமையில் வறுமையுடன் வாழ்க்கையில் போராடுகிறாள் எஞ்சிய வாழ்வைக் கழிப்பதற்காக…
ஆம். அவர் வேறுயாருமல்ல 57வயதுடைய யோசப் யோகேஸ்வரி…. ஒருநொடியில் வாழ்க்கையே புரட்டிப்போட்ட அந்தச் சம்பவத்தை கண்ணீர்த்துளிகளுடன் என்னுடன் பகிர்ந்தார்.
“இடம்பெயர்ந்து ஓடி வந்து எல்லோரும் வீதியில் வரிசையாக இருந்த போது தற்காலிக குடிசை (கூடாரங்கள்) லொறியில கொண்டு வந்து குடுத்தாங்கள் வெய்யிலை மழையை தாங்க கூடாரமாவது கிடைத்து விட்டதே என்று நினைச்சு வாங்கிய போது கூடாரமே என் குடும்பத்திற்கு எமனாகும் என்று நான் நினைக்கவே இல்லையம்மா…. நினைக்கவே இல்லை.
கூடாரங்களை வாங்கின பிள்ளைகள் இருள முன் ஒரு இடத்தைப் பிடிச்சு கூடாரத்தை அமைச்சுப்போடுவம் என்று நினைச்சு கடற்கரையில் கூடாரம் போடும் போது ஷெல் விழுந்து போச்சு.
வெய்யிலையும் மழையையும் சமாளிக்க நினைச்ச எனக்கு கிடைத்த பரிசுதான் ஒன்பது பேரின் உயிரும் என் கண் முன்னால் போயிட்டுது. எனக்கு தலையில் பலத்த காயம். அதோட உடம்பெல்லாம் சின்னச் சின்ன காயம். உடனே என்னை மருத்துவ உதவியாளர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டார்.
என்ர 2 பிள்ளைகளும் மனுசனும் தம்பி குடும்பம் தங்கச்சி குடும்பம் என எல்லோருமாக சேர்த்து 9 பேரும் இறந்து விட்டனர். கடைசி மகளும் இடம்பெயர்ந்து ஓடி வரும்போது காயப்பட்டு தவறுப்பட்டு விட்டாள்.
அவளை நான் தேடாத இடமே இல்லை. இருக்கிறாளோ இல்லையோ என்று கூட எனக்கு தெரியாது. அவளை நான் சாக முதல் கண்டிட்டேன் என்றால் செத்தாலும் பரவாயில்லை.
காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு ஏத்தின பிறகு அங்கு முழிச்சுப்பார்த்த போது உள்ளறிவு இருந்தது. வெளியில ஆட்கள் எல்லோரும் கதைக்கிறது அழுகிற சத்தம் எல்லாம் கேட்கிறது.
உடம்பெல்லாம் ரணமாக வலிக்க எழும்ப முற்பட்டேன். எழ முடியவில்லை கண்ணை திறக்க முற்பட்டு திறந்து விட்டேன். கண் தெரியவில்லை. அப்பதான் எனக்கு தெரியும். தலையில் பட்ட ஷெல்பீஸ் கண் நரம்பையும் தாக்கி விட்டது. காலைத் தூக்கினேன் கீழே வைக்கவும் முடியேல்ல.
இவற்றுக்கப்பால் பழைய நினைவு அற்றிருந்ததால் மனுசனை தேடினேன். அவரும் பக்கத்தில இல்லை. மூத்த மகனை தம்பி…. தம்பி… என்று கூப்பிட்டேன்.
அவனும் இல்லை. பிறகு மகளை பிள்ளை.. பிள்ளை… என்று கூப்பிட்டேன். அவளும் இல்லை. என்ன நடந்ததென்று எனக்கே தெரியாது.
பக்கத்தில படுத்திருந்த ஆட்கள் எல்லாரும் சொல்லிச்சினம் அவையல் எல்லோரும் கடற்கரையில அடிச்ச செல்லோட போயிற்றினம். நீங்கள் மட்டும் தான் காயக்காறர் வந்த லொறியில் வந்திருக்கிறீங்கள் அம்மா என்றனர்.
அவையல் செத்த போது எனக்கு தலையில இல்லாம வேற எங்கையாவது பட்டிருந்தா நான் கடல்ல குதித்து செத்திருப்பன். போர இடத்திலயாவது நிம்மதியாக சேர்ந்து வாழுவம்.
ஏன் தான் கடவுள் இப்படியொரு தண்டனையையும் தந்து விரக்தியின் விளிம்பில் வாழ விட்டாரோ தெரியாது. தண்டித்த கடவுளுக்கு என்னை வாழ வழி சமைத்து தர முடியவில்லை. நான் யாரை நோவது.
இப்ப எனக்கு 57 வயது எனக்கென்று சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை.
இருந்தாலும் பதிவு, உதவி என்ற பெயரால் வந்த உதவிகளும் பூரணமாகேல்ல. இப்ப திருவையாறில என்ர தங்கச்சியின் குடும்பத்துடன் ஒட்டாண்டியாக இருக்கிறன்.
உடம்பு முழுக்க ஷெல் பீஸ் இருப்பதனாலையும் தலையிலிருந்து கண்ணுக்கு வரும் நரம்பு பகுதியில் பீஸ் இருப்பதனால கண் பார்வை ஒபரேசன் செய்தும் பார்வை குறைவாகவே இருக்கு. இவ்வாறான நிலையில் எந்த ஒரு உதவியும் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். ஆனாலும் எனக்கு விதவைகளுக்கு வழங்கப்படுகிற அரிசி கிடைக்குது.
1 மாதத்திற்கு 5 கிலோ கிராம் கிடைக்கும். அதோட எங்கட ஊரில இராசேந்திரம் சேர் என்ற ஒரு அதிபர் இருக்கிறார். அவர் ஒரு பரோபகாரி என்னைப் போல எத்தனையோ பேருக்கு இல்லை என்று சொல்லாது ஐஞ்சோ பத்தோ தருவார். அதில என்ர சீவியம் போகுது.
இப்ப நான் என்னை சுகப்படுத்தி கொஞ்சக் காலம் இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு காரணம் என்ர மூத்த மகன் ஷெல் விழுந்து இறப்பதை நேரே பார்த்த என்ர மருமகள் (தற்போது வயது 29) மன நோயாளி ஆகி விட்டார். அவவுக்கு 2 ஆண் பிள்ளைகள்.
மூத்தவருக்கு 10 வயது. கொலசிப் எழுதி விட்டார். அவருக்கும் வயித்தில காயம்பட்டு ஒப்பரேசன் செய்த பிறகு சுகப்பட்டு விட்டது. மற்றவர் வார வருஷம் கொலசிப் எடுக்கிறார். மருமகளின் தாய் தான் அவர்களை பார்க்கிறார். அவருக்கும் வயசு போய்விட்டது.
இவை ஒரு புறமிருக்க என்னை என்று பார்க்கவும் எமது குடும்பத்தில் எமக்கு அடுத்த தலைமுறை என்று சொல்லிக் கொள்ளவும் உயிரோடு இருப்பது என்ர பெறாமகள் தான்.
பாவியார் போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் என்பது போல் என்ர பெறாமகளும் உடம்பு முழுக்க காயப்பட்டு சாக கிடந்தவளை ஒருவாறு காப்பாற்றி ஒரு வருடம் கழித்து இன்று பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை படித்து வருகிறாள்.. அவளை நம்பித் தான் நான் இருக்கிறன்.
அவளின் குடும்பமும் முற்றாகப் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே, அவளும் என்னை நம்பி இருக்கிறாள். அவளுக்காகவெண்டாலும் நான் உயிர்வாழ எனக்கு யாராவது உதவி செய்யுங்கோ.
அரிசியை மட்டும் நம்பியே என்ர காலம் போகுது. மருந்துகளை ஆஸ்பத்திரியில இலவசமா எடுத்துக் கொள்கிறேன். ஆனால் நான் குடிக்கிற மருந்துக்கு ஒருவேளை சாப்பாட்டையாவது சாப்பிட முடியாத பாவியாக இன்று அபலைப் பெண்ணாக வாழ்ந்து வருகிறேன்.”
இது ஒரு யோகேஸ்வரியின் கதை… இப்படி பல யோகேஸ்வரிகள் இருக்கிறார்கள். ஒரு சிலர் தான் முன்வந்து தமது நிலையை பகிரங்கப்படுத்துகிறார்கள். அவ்வாறானவர்கள் எண்ணும் நாட்களையாவது மகிழ்ச்சியாக கழிக்காவிட்டாலும் மனப்பூர்வமாக கழிப்பதற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்???
சிந்துஜா பிரசாத்
குமுறல் இதயங்களுக்கு யார் கைகொடுப்பார்?