இந்தியச் சட்டத் திருத்தம் 120இன்படி பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினரால் இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் போதுமான அளவு பேச முடியாதபோது, அவரது தாய்மொழியைப் பயன்படுத்தலாம் என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.
இதன்கீழ் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பேசுவதைவிட, அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும்போதுதான் ஒரு நிறைவு வரும். இந்திய மக்களவையில் முதன்முறையாகத் தமிழில் பதில் சொல்லி ஒரு புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை சந்தோஷ மழையில் நனைத்திருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே பேசப்படும் பாராளுமன்றத்தில் அவ்வப்போது தங்கள் மாநில மொழியிலும் பேசுவார்கள் சில எம்.பி.க்கள். அவர்களின் பேச்சு, மொழி பெயர்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு காது ஒலிப்பான் வழியே அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின் அவர் தன் பதிலை இந்தி அல்லது ஆங்கில மொழியில் சொல்லுவார். இதுதான் இதுவரை இருந்துவந்த வழக்கம்.
சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் அனுமதி பெற்று இந்த நடைமுறையை முதன்முதலாக மாற்றியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய நிதி மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த வாரம், நலிந்துவரும் சிவகாசி பட்டாசுத் தொழில் பற்றி மக்களவையில் கேள்வியெழுப்பினார் விருதுநகர் அ.தி.மு.க. எம்.பி.யான டி.ராதாகிருஷ்ணன்.
சட்டவிரோதமாகக் கடத்தி வந்து இங்கு விற்கப்படும் சீனத் தயாரிப்புகளால் பாரம்பரியமான பட்டாசுத் தொழில் பாதிக்கப்படுகிறது. இதுபற்றி தமிழக முதல்வர் எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசின் பதில் என்ன? என்று கேட்டார்.
வழக்கமாகத் தமிழ் அல்லது மற்ற மாநில மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கிலம் அல்லது இந்தியில் பதில் சொல்வதுதான் மத்திய அமைச்சர்களின் வழக்கம். ஆனால் அதற்கு மாறாகத் தமிழிலேயே பதிலளித்தார் நிர்மலா.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கடிதம் கிடைத்தது. விரைவில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தமிழில் சொன்னபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேசையைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதற்குப் பல மாநில எம்.பி.க்களும் மேசையைத் தட்டியதை விட, ராகுல் காந்தியும் மேசையைத் தட்டியது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.
இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் அவ்வப்போது தமிழில் கேள்வி கேட்பார்கள். ஆனால் சில நாட்களாகவே தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து தமிழில்தான் கேள்விகளை எழுப்பினர்.
அதற்கான பதிலும் தமிழில் கிடைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதாகவே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது. இணையத்தளங்களிலும் இதுபற்றி விவாதிக்கப்படுகிறது. இதற்குமுன் யாரும் தமிழில் பேசவில்லையா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் சிலர் தமிழில் திருக்குறளைச் சொல்லி இருக்கிறார்களே தவிர எம்.பி.க்களின் கேள்விக்கு பதில் சொல்வது வழக்கமில்லை. மத்திய அமைச்சர் தமிழில் பேசலாமா? என்ற கேள்வி இதற்கு முன்பும் எழுந்திருக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்தார் மு.க. அழகிரி.
அப்போது பாராளுமன்றப் பணிகளின்போது இந்தி, ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும் பதில் சொல்வதில்லை என்று அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இதனால் மக்களவையில் அவர் தமிழில் பேச அப்போது சபாநாயகராக இருந்த மீராகுமாரிடம் அனுமதி கேட்டதாகவும் தகவல் வெளிவந்தது.
அதுபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அது பரிசீலனையில் இருக்கிறது என்று மட்டும் சொன்னார் முன்னாள் சபாநாயகர் மீராகுமார். ஆனால் கடந்த ஆட்சியில் அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை.
ஆட்சி மாறிய பின்பு இப்போது அந்தக் காட்சி நடந்தேறியிருக்கிறது. தமிழில் கேட்ட கேள்விக்குத் தமிழிலேயே பதில் சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
ஆனால் இந்த விவாதம் அச்சில் ஏறும்போது இந்தி அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும். என்ன இருந்தாலும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி கொடுத்தது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
இதற்கு முன்னாலும் பல தலைவர்கள் பாராளுமன்றத்தில் தமிழ் பேசியிருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கமும் 1978க்குப் பிறகுதான் ஆரம்பித்தது. பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் வழக்கம் இல்லாதபோது அதனை மாற்றியவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி அனந்தன்.
இவர் மக்களவையில் தொடர்ந்து தமிழில் கேள்வி எழுப்பியதால் அப்போது மத்திய அமைச்சராக இருந்த பாபு ஜகஜீவன்ராம் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
அதன் முடிவில் குமரி அனந்தன் தமிழில் கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்பட்டது. அவரது கேள்வி மொழிபெயர்க்கப்பட்டு அதற்கு சுர்ஜித்சிங் பர்னாலா பதிலளித்திருப்பதெல்லாம் பழங்கதை. இப்போது அதுபோன்று மற்றவர்கள் பின்பற்றும் உதாரணத்தை நிகழ்த்தியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
இவரது பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும் இவரது குடும்பம் ஆந்திராவில் வசித்துவருகிறது. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தின் ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நிர்மலா என்பது குறிப் பிடத்தக்கது.
அவரது தமிழ்மொழி பதில் மட்டும் தமிழ்நாட்டுக்குப் போதாது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் அவரது பணி இன்றியமையாதது.
நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடும் மொழியாக வேண்டும் என்பது உள்ளிட்ட எத்தனையோ கோரிக்கைகள் வெறும் செய்தி களாகவே இருக்கின்றன. இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் புரட்சிகரமான தமிழ்ப் பேச்சு பாராளுமன்றத்தில் ஒரு ஆரம்பத்தைத் தந்திருக்கிறது என்றே தோன்றுகிறது!