ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் யாதவொலு கிராமத்தை சேர்ந்த பெண் ஷேக்புடி. இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
கணவர் உயிருடன் இருக்கும்போது இருவரும் கூலி வேலைக்கு சென்ற வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். கணவர் இறந்த பிறகு ஷேக்புடி வறுமையில் வாடினார்.
அவரால் வாடகை கொடுக்க முடியாததால் வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறினார். பின்னர் அங்குள்ள அங்கன்வாடி ஓரம் குழந்தைகளுடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஷேக்புடி அங்கன்வாடி ஓரத்தில் தங்கக்கூடாது என்று அதிகாரிகள் அவரை துரத்தினர். இதனால் அவர் அங்குள்ள ஒரு சாலை ஓரம் கூடாரம் அமைத்து குழந்தைகளுடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் ஷேக்புடி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. குழந்தைகளும் பட்டினியால் தவித்து வருகிறார்கள்.
இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ஷேக்புடி முடிவு செய்தார். அதற்கு பணம் இல்லாததால் 3 குழந்தைகளில் ஏதாவது ஒரு குழந்தையை விற்கும் முடிவுக்கு வந்துள்ளார்.
அந்த வழியாக வருவோர் போவோரை பிடித்து ஏதாவது ஒரு குழந்தையை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார். அந்த பணத்தின் மூலம் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற்று நோய் குணமானதும் வேலைக்கு சென்று மற்ற 2 குழந்தைகளையும் காப்பாற்றுவேன் என்று கதறுகிறார்.
இந்த காட்சி அந்த வழியாக செல்வோரை பரிதவிக்க வைக்கிறது.