இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு, பெரும்பாலான விசைப்படகுகளுக்கு மறைமுக சொந்தக்காரர்களான தமிழக அரசியல் பிரபலங்கள் தான் காரணம்’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி, நேற்று, ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பரபரப்பான தகவலை பகிரங்கப்படுத்தினார்.
போராட்டம் : நேற்று முன்தினம், ராமேஸ்வரம் மீனவர்கள், 15 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு, இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட, 319 தமிழக மீனவர்களின், 64 விசைப்படகுகளையும் இலங்கை அரசு திருப்பிக் கொடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த, 40 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், ‘இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் சொல்லி, நான் தான், தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க தடை போட்டேன்’ என, சுப்ரமணிய சாமி தெரிவித்த கருத்து, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைவர்கள் கண்டனம்: அவருடைய கருத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்நாலாபுறமும் தன்னை நோக்கி கணைகள் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சுப்ரமணிய சாமி, அளித்த சிறப்பு பேட்டி:
ஜெயலலிதாவை பொறுத்த வரையில், என் மீது என்றைக்கும் கோபமாகத் தான் இருப்பார். காரணம், அவர் மீது ஊழல் வழக்கு போட்டு, அவருடைய செயல்பாடுகளை வெளியுலகிற்கு நான் தான் கொண்டு வந்தேன்.
பெங்களூரில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கையும் நான் தான், தாக்கல் செய்தேன்.அதேபோல தான் கருணாநிதியும். ‘2ஜி’ வழக்கில், தி.மு.க., தரப்பு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை முதன் முதலில் அறிந்து, வழக்கு போட்டதால், கருணாநிதியும் என்னை திட்டுகிறார். சேது சமுத்திர திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டது, 1990ல் ஆட்சி கலைப்பு என, தி.மு.க., என் மீது நிறைய கோபம் வைத்திருக்கிறது.
அதற்காக, ஒருநாளும் நான் வருந்தியதும் இல்லை; அஞ்சியதும் இல்லை. ‘மீனவர்கள் பிரச்னை குறித்து பேச, சுப்ரமணிய சாமி யார்?‘ என்று சிலர் கேட்பதாக, அறிகிறேன்.
மத்தியில் பா.ஜ., ஆட்சி ஏற்படுவதற்கு முன்பே, மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பலர், என்னை சந்தித்தனர். அப்போது, ‘ராஜபக்ஷே உடன் நல்ல நட்பில் இருக்கும் நீங்கள் தான், எங்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும்’ என, கேட்டுக் கொண்டனர். அதன்பின் தான், மீனவர் பிரச்னையில் கவனம் செலுத்தினேன்.
அதிர்ச்சி தகவல்: இப்பவும் கூறுகிறேன்… நான் தான், இலங்கை அதிபர் ராஜபக் ஷேவிடம் பேசி, இலங்கையில் சிறைபட்டிருந்த, தமிழக மீனவர்களை விடுவித்தேன். அதற்காக நான், ராஜபக்ஷேவிடம் பேசிய போது, அவர் அதிர்ச்சிகரமான பலதகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதன்பின் தான், நான், ‘அப்படியென்றால், மீனவர்களை மட்டும் விடுதலை செய்யுங்கள், அவர்களின் விசைப்படகுகளை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்’ என, கூறினேன். அதன்படியே, அவரும் செய்தார்.
தமிழகத்தில், மீன் பிடி தொழிலில் இப்போது பெரிய பெரிய விசைப்படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த படகுகளில் பெரும்பாலானவை, சசிகலா, டி.ஆர்.பாலு ஆகியோருக்கு சொந்தமானவை. அவர்கள் தான் மீனவர்களை தூண்டிவிட்டு, பெரிய அளவில் மீன்பிடிக்க வைக்கின்றனர்.
எல்லை தாண்டுகின்றனர் : இப்படி விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்ததால், இந்திய கடல் எல்லையில் இருந்த மொத்த மீன் வளமும் போய் விட்டது. இப்போது, இலங்கை கடல்பகுதியில் தான் மீன் வளம் இருக்கிறது என்பதால், விசைப்படகுகள் மூலம், மீனுக்காக, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர்.
இதனால் தான், நம் மீனவர்களையும் விசைப் படகுகளையும் சிறை பிடிக்கின்றனர். தமிழக அரசியல் பிரபலங்கள் குறித்து, ராஜபக் ஷே, என்னிடம் கூறிய தகவல்கள் அனைத்தையும், பிரதமர் மோடியிடம் சொல்லிவிட்டேன்.
என்னை பற்றி, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்துக்கு, பதில் கடிதத்தை மோடிக்கு நான்அனுப்பி உள்ளேன். அதில் பல விவரங்களை தெளிவாக கூறியுள்ளேன்.
இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் குழு, டில்லிக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்தது. அப்போது, ‘தனி ஈழம் அமைய, நீங்கள் உதவ வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கு மோடி என்ன கூறினார் தெரியுமா?
‘ஒன்றுபட்ட இலங்கையின் அமைதிக்குத் தான் இந்தியா உதவும். இலங்கைப் பிரிவினைக்கு, இந்திய அரசு உதவாது. இலங்கையில், எல்லா மக்களும் அமைதியாக வாழ, ராஜபக் ஷேவிடம் வலியுறுத்துவோம். மற்றப்படி, ராஜபக் ஷே மட்டும் தான் பிரச்னைகளை தீர்க்க முடியும்.
அதனால், அவரிடம் பேசி நல்ல முடிவெடுங்கள்’ என, தெள்ளத் தெளிவாக கூறி விட்டார். அதன்பின் தான், அவர்கள், இங்கிருக்கும் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதா என, யாரையும் சந்திக்காமல், இலங்கை திரும்பி விட்டனர்.
தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களால், இலங்கை அரசு, இங்கிருப்பவர்களை நன்றி இல்லாதவர்களாக நினைத்துத் தான் மீண்டும் மீனவர்களை கைது செய்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமருக்கு கடிதம்: ‘தமிழக சட்டசபை தேர்தலுக்காக, மீனவர் பிரச்னையை, முதல்வர் ஜெயலலிதா அரசியலாக்குகிறார். இதற்காக, எல்லாமே தன்னால் தான் நடந்ததாகக் கூறி, பெருமை சேர்க்கிறார்’ என, பிரதமர் மோடிக்கு, சுப்ரமணிய சாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மாதம், இலங்கை யில், அந்நாட்டின் அதிபர் ராஜபக் ஷேவை சந்தித்த பின், தமிழக மீனவ பிரச்னை குறித்து, சில கருத்துக்களை சுப்ரமணிய சாமி வெளியிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதிஇருந்தார்.
ஜெயலலிதாவின் கடிதத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மோடிக்கு, சுப்ரமணிய சாமி எழுதியுள்ள கடிதம் வருமாறு:
இலங்கையில், ராஜபக் ஷேவை சந்தித்தபோது, தமிழக மீனவர் பிரச்னை குறித்து, அவரிடம் பேசினேன். அப்போது, சிறையில் உள்ள தமிழக மீனவர்களை, ஜாமினில் விடுதலை செய்வதாகவும்,
அவர்களிடம் பறிமுதல் செய்த இயந்திர படகுகளை விடுவிப்பதாகவும் உறுதி அளித்தார். இதற்கிடையே, தமிழக மீனவர்கள் சங்கம் சார்பில், என்னிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், இலங்கை கடற் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது, அந்நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட, இயந்திரப் படகுகளை விடுவிக்க வலியுறுத்துமாறு தெரிவித்திருந்தனர்.
ஆனால், இக்கோரிக்கையை நான் ஏற்கவில்லை. இந்த இயந்திரப் படகுகள் பெரும்பாலும்,தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு சொந்தமானவை.
இவர்கள், வசதி படைத்தவர்கள் என்பதால், அந்த படகுகளை விடுவிக்க, நான் வலியுறுத்தவில்லை. என் கோரிக்கை எல்லாம், பாதுகாப்பற்ற ஏழை மீனவர்களை விடுக்க வேண்டும் என்பது தான்.
என் கோரிக்கையின் படி, தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை, ஜெயலலிதா, தனது வெற்றி என, அபகரிக்க முயற்சிக்கிறார். அவர், மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமர்களுக்கு கடிதம் எழுதி, அதை பத்திரிகைகளில் செய்தியாக்குவதை தவிர, வேறெதுவும் செய்ததில்லை.ஆனால், தமிழகத்துக்கு கிடைத்த வெற்றிகளை எல்லாம், தன்னால் கிடைத்த வெற்றி என, பறைசாற்றுகிறார்.
சிலை அமைத்து…:முல்லைப் பெரியாறு அணை விவகாரம், பார்லிமென்ட் வளாகத்தில், தேவர் சிலை அமைத்தது, ‘2 ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் சேது சமுத்திர விவகாரம் ஆகியவை அனைத்தும், தன்னால் தான் நடந்தவை என, கடந்த தேர்தல்களில், அவர் பிரசாரம் செய்துள்ளார். தற்போது, மீனவர் பிரச்னையையும், 2016 தமிழக சட்டசபை தேர்தலுக்காக பயன்படுத்த முயற்சிக்கிறார்.
எனது கடின உழைப்பினால், தமிழகத்துக்கு கிடைத்த வெற்றிகளை, அவரால் கிடைத்த வெற்றி என, தவறாக பிரசாரம் செய்கிறார்.மேற்கு வங்கம் போல, தமிழகத்தில், 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும். காமராஜருக்குப் பிறகு, தமிழகத்தில் தேசிய கட்சி ஆட்சி இல்லாத நிலையில், பா.ஜ., ஆட்சியை, தமிழகத்தில் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
– நமது சிறப்பு நிருபர் –