நாங்குநேரி: நாங்குநேரி பெருமாள் கோயிலுக்குள் நடிகர் கமல்ஹாசன் சட்டை அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலம், மேக்கரை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘பாபநாசம்‘ என்ற திரைப்படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.
கடந்த 30ம் தேதி நாங்குநேரி பெருமாள் கோயிலில் சூட்டிங் நடத்துவதற்காக காலையிலேயே படப்பிடிப்பு குழுவினர் அங்கு குவிந்தனர்.
இதையறிந்து அங்கு பொதுமக்கள் அதிகம் கூடியதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் மாலை 3.30 மணிக்கு நடிகர் கமல்ஹாசன் தனது மெய்க்காப்பாளர்களுடன் கோயில் வளாகத்திற்குள் வந்தார். கோயிலுக்கு வெளியே கோபுர வாசலுக்கு வடக்குப் பக்கத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
தொடர்ந்து கோயிலின் உள்பக்கத்தில் உள்ள மண்டபம் ஒன்றிலும் படப்பிடிப்பு நடந்தது. மேலும் கோயிலின் மூலஸ்தானத்திற்கும் நடிகர் கமலஹாசன் சென்றார். பின்னர் அவர் மடத்தில் இருந்த ஜீயர் சுவாமியை சந்தித்து பேசினார்.
படப்பிடிப்பு நடந்த போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் கூடாது என அக்குழுவினர் செய்தியாளர்களை எச்சரித்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் கமலஹாசனிடம் கேட்டபோது, படப்பிடிப்பு முடிந்ததும் செய்தியாளர்களை சந்திப்பாக அவர் கூறினார்.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலைப் பொறுத்த மட்டில் கோயிலுக்குள் மற்றும் ஜீயரிடம் ஆசி பெற செல்வோரும் சட்டையைக் கழற்றிய பின்னரே கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்ற விதி உள்ளது. அதற்கான அறிவிப்பும் கோயில் வாசலில் எழுதப்பட்டுள்ளது.
பெண்கள், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், மற்றும் போலீசார் ஆகியோருக்கு மட்டும் சட்டையுடன் செல்ல விதி விலக்கு உண்டு. இந்நிலையில் கோயிலுக்குள் நடந்த படப்பிடிப்பில் நடிகர் கமலஹாசன் மற்றும் மெய்க்காப்பளர்கள் சட்டையைக் கழற்றாமலேயே கலந்து கொண்டனர்.
இது குறித்து நாங்குநேரியைச் சேர்ந்த கஸ்தூரிபாண்டியன் கூறுகையில், “நாங்குநேரி பெருமாள் கோயிலில் யாராக இருந்தாலும் சட்டையைக் கழற்றி விட்டுச் செல்லும் வழக்கம்.
மத்திய, மாநில அரசுகளின் மந்திரிகள், உயர் அதிகாரிகள், எம்எல்ஏக்கள் எம்பிக்கள் உள்ளிட்ட பலரும் சட்டையைக் கழற்றி விட்டுத் தான் கோயிலுக்குச் செல்வது மரபு. தெரியாமல் செல்பவர்களைக் கூட மடத்தின் பணியாளர்கள் சட்டையைக் கழற்றிய பின்னர்தான் கோயிலுக்குள் அனுமதிப்பார்கள்.
ஆனால் படப்பிடிப்பிற்கு வந்த நடிகர் கமலஹாசன் பாரம்பரிய வழக்கத்தை மீறியுள்ளார். இது ஒரு அவமான செயலாகும். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் இந்த அவமதிப்புச் செயலுக்கு படப்பிடிக் குழுவினரும் அவர்களுக்கு அனுமதி அளித்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும்“ என்றார்.