2014 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபையினர் ”தேசிய வீரன் பண்டாரம் வன்னியனாருக்கு” சிலை அமைத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
இதனால் தற்போது மக்கள் மத்தியில் பண்டாரம் வன்னியனாரைப் பற்றிய உண்மையான வரலாறுகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. வடபுல வரலாற்றில் ”பண்டாரம் வன்னியனார்” பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதற்கு இதனை ஒரு அடையாளமாகவும் கொள்ளலாம்.
தேசிய வீரன் ”பண்டாரம் வன்னியனாருடைய” வரலாற்றை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவரைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படும் காக்கை வன்னியனார்பற்றி 1912 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் வரலாறுகளில் உள்ளதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கு 33 வருடங்களுக்கு முன்னர் 1879 ஆம் ஆண்டு சி.பிறிற்றோவினால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ள குறிப்புகள் இந்த வாரம் தரப்படுகின்றன.
ஏட்டுப் பிரதிகளில் இருந்த ”யாழ்ப்பாண வைபவமாலையை’‘ சி.பிறிற்றோ என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1879 ஜூலை மாதத்தில் நூல் வடிவில் வெளியிட்டிருந்தார்.
பிற்காலத்தில் ”யாழ்ப்பாண வைபவமாலையின்” உண்மைப் பிரதிகள் (ஏடுகள்) கிடைக்காத காரணத்தினால் சி.பிறிற்றோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த பிரதியின் பிரதிமைப் படிவத்தையும், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பெற்ற வரலாற்றுக் குறிப்புகளையும் வைத்து யாழ்ப்பாண வைபவமாலையின் தமிழ் வடிவங்கள் வெளியிடப்பட்டன என்று குலசபாநாத முதலியார் தெரிவித்துள்ளார்.
இதனால் யாழ்ப்பாண வைபவமாலையின் தற்போதைய தொன்மை வடிவத்திற்கு சி.பிறிற்றோவின் ஆங்கில மொழிபெயர்ப்பும் முக்கிய ஆவணமாகத் திகழ்ந்துள்ளதென்று கூறலாம் (ஆய்வுக்குரியது).
சி. பிறிற்றோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ”யாழ்ப்பாண வைபவமாலை” நூலிலும் ”காக்கை வன்னியன்’‘ வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கிலி வரலாற்றில் எந்தவித நம்பகத்தன்மையில்லையெனக் கொண்டாலும் ”காக்கை வன்னியன்’‘ என்ற கதாபாத்திரத்தின் வரலாறு தொன்மை வாய்ந்தது என்பதற்கு பிறிற்றோவின் மொழிபெயர்ப்பு சான்று பகருகின்றது.
யாழ்ப்பாண சரித்திர மாற்றமும் இடைச் செருகலும் பற்றி 1933ஆம் ஆண்டு செ.இராசநாயகம் முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
”ஒல்லாந்தர் காலத்திலேயே மயில்வாகனப் புலவர் தம் வைபவமாலையை எழுதினாரானாலும், அந்நாள் ஒல்லாந்தர் காலமுடிவையும் பின்வரும் ஆங்கிலேயர் காலக் கணக்கையும் தம் மனோபாவனையால் எழுதியிருக்கமாட்டாரானாலும், மேற் கண்ட வெண்பாவின் (திருகோணமலை கோவிற் பிரகாரக் கல்வெட்டு) ஈற்றடியிலுள்ள குறிப்புகள், ”வெள்ளியம்பலத் தம்பிரான்” செய்த திருவிளையாடல் போல், ஏடெழுதியவர்களிடைச் செருகலாக விருக்கலாமென்பது துணியக் கிடக்கின்றது” என்று எழுதியுள்ளார். (பக்கம் – 82).
”யாழ்ப்பாண வைபவமாலை (ஆங்கிலம்) – சி.பிறிற்றோ – 1879
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ”யாழ்ப்பாண வைபவமாலை” நூலில் சி.பிறிற்றோவின் முன்னுரையிலே எழுதியதை, நேரடி மொழிபெயர்ப்பில்லாமல் வரலாற்றிற்காக பின் வருமாறு குறிப்பிட்டுள்ளேன்.
*1736 ஆம் ஆண்டு அதிகாரத்திலிருந்த டச்சுக் கவர்னர் இயன் மக்காராவின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வைபவமாலையை எழுதியதாக மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.
அதற்குப் போதுமான ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ஆனால் அக்காலத்தில் டச்சுக்காரர் ஆட்சியிலிருந்தாலும், அவர்களுடைய கொள்கைகளைப் பற்றி கடுமையாக துணிவுடன் எடுத்துரைத்திருப்பதும், ஆங்கிலேயருடைய ஆட்சியைப்பற்றி எதிர்வு கூறியிருப்பதும் பிற்காலத்தில் செருகப்பட்டிருக்கலாம் என நம்பக் கூடியதாக இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.
The Translator’s preface.
* “All that is known of the author is what he says of himself in his preface. The Governor Maccara, of whom he speaks, was Jan Maccara who was Governor of the Dutch possessions of Ceylon in 1736. And there is sufficient internal evidence to show that the author lived about that time, but the bold language in which the policy of the Dutch is described and the prophecies which the work contains, relating to the English, must be regarded as interpolations a later date.
பிறிற்றோ மொழிபெயர்த்த ஆங்கில வைபவமாலையிலும் யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர் கோட்டை கட்டிய விபரம் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
சகாப்தம் 1503 சுபகிருது ஆண்டில் அவர்கள் கோட்டை (யாழ்ப்பாணத்தில்) ஒன்றைக் கட்டினார்கள். (ஆங்கில ஆண்டு தமிழ் ஆண்டை விட 77 வருட வித்தியாசத்தைக் கொண்டது. ஆகவே 1580ஆம் ஆண்டு கோட்டை கட்டப்பட்டதாகக் கொள்ளலாம். (ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.) (பக்கம்-38)
This happened in the year Supakiruthu corresponding with the Sakaptham 1503. They build a fort. (Jaffna) (77 years different. That means 1580.) Page : 38.
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் கோட்டை
போர்த்துக்கேயர் கோட்டை கட்டிய விதம் பற்றி பல விரிவான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்வது எனது நோக்கமல்ல. காக்கை வன்னியன் என்ற வரலாற்றுப் பாத்திரத்திற்கு தேவையான ஆதாரங்களைத் தொகுப்பதையே இந்தக் கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1879இல் பிறிற்றோ மொழிபெயர்த்த யாழ்ப்பாண வைபவமாலையில் ”காக்கை வன்னியனின்” காட்டிக் கொடுப்புகள் பற்றி 35ஆம் பக்கத்திலிருந்து 46ஆம் பக்கம்வரை எழுதப்பட்டுள்ளன.
36 வருடங்களின் பின்னர் 1915ஆம் ஆண்டளவில் வரலாற்றாசிரியர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரத்தில் ஒப்பீட்டளவில் அப்படியே மொழி பெயர்த்திருப்பது தெரிய வருகிறது.
இதனால் ஆங்கிலத்திலுள்ள சில பந்திகளை மட்டும் தெரிவு செய்து, அவற்றை தமிழில் மொழிபெயர்க்காமல் காக்கைவன்னியன் பற்றிய ஆதாரக் குறிப்புகளை அப்படியே உங்கள் கவனத்திற்கு தருகிறேன்.
“The Yalpana Vaipava Malai”. Translated by C.Brito-1879. Pages: 35-–46
Kakkai Vanniyan
A tumult having arisen among the inhabitants of Vada-miradchi, the king went in person to quell it. On his return route lay through Irupalai, and when he arrived within its limits his musicians silenced their music. On inquiring the cause he was informed that he was within the territories, which belonged to Para-nirupa-singkan, without whose permission the music could not be continued. Sangkili regarded this both as an insult to his dignity and an indication of the influence of Para-nirupa-singkan and desired much to deprive him of his territories and his influence, but found it unsafe to violate a grant publicly inscribed on copper. (Page 35)
At this juncture of affairs the conduct of Sangili brought about that opportunity, together with a train of events, which ultimately led to the ruin of himself and his kingdom. Having entertained an unlawful passion the beautiful daughter of Appa, who was one of his ministers, Sangili attempted to force the reluctant maid to submit to his wishes. Appa sought protection of Para-nirupa-singkan, which was readily granted. The girl was received into Para-nirupa-singkan’s family and her father was dispatched with a letter to Kakkaivanniyan, a considerable personage, who had recently landed at Urkavat-turai. Appa returned with a reply from Kakkai-vanniyan, which he delivered to Para-nirupa-singkan, and, acting on the advice of the latter, went back to his usual business as if nothing had happened. (Page 38)
Kakkai-vanniyan, without a moment’s delay, went to Tharangkampadi and assured the Parangkis that he would put Yalpanam into their hands. They hesitated at first, but persuaded by his oaths and entreaties, they fell in with his proposal and soon after landed at Pannaith-thurai disguised as traders. (Page 39)
The Parankis who fled from the battlefield reached Urkavet-turai and were determined to sacrifice Kakkai-vanniyan to their fury. They believed that he had played them false and they told him they should not have suffered the loss, which they had, of 16000 of their men, in the war with Sangkili. Fortunately for Kakkai-vanniyan a messenger arrived just then with a letter from Para-nirupa-singkan addressed to Kakkai-vanniyan, expressing regret that the strangers had been defeated and that, no open assistance had been given them by the natives. It also pointed out the necessity of joint action and invited the Vanniyan to join his forces to those of Para-nirupa-singkan and openly assist the strangers against the tyrant. Being assured by the tenor of this letter, of the sincerity of the natives, the Parangkis determined to renew the fight on the morrow. The Vanniyan preceded them by night to Nallur and arranged with Para-nirupa-singkan the part which each should act. (Page 43).
He saw Kakkai-vanniyan already on the spot among his soldiers, and believing him to have come to his aid, he accosted him with these words “ Friend ! you have been slow hitherto but great is your kindness to-day in bringing me this timely aid”. To testify his joy the king fell on the Vanniyan’s neck and embraced him. The traitor pretended to return the compliment but held the king fast on his arms. The Parangkis rushed on the king as he stood struggling for liberty. The king’s soldiers drew their swords, but Para-nirupa-singkan forbade them to use their weapons without the order of their commander. (Page: 44)
”காக்கை வன்னியன், செய்த சேவைகளுக்கான கௌரவத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஊர்காவற்றுறை சென்றடைந்தார்.”
இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட ஊர்காவற்றுறை வரைபடம்
“Kakkai-vanniyan received all the marks of honor due to his services and retired to Urkavat-turai”. (Page : 46)
வைபவமாலையுடையார் வெற்றுரை செ.இராசநாயகம் முதலியார் – 1933 :
”சங்கிலியாகிய செகராசசேகரன், போர்த்துக்கேயர் தங்கள் வியாபாரத்தை விருத்தி செய்யவேனும், மார்க்கத்தை பரப்பவேனும், ஒரு காலத்திலாவது உத்தரவு கொடுத்தானல்லன்.
ஆகையால் பரநிருபசிங்கன் தூண்டுதலால் அவர்களுக்கு வியாபாரம் செய்ய இடம் கொடுத்தான் என்பதும், காட்டு நடுவே அவர்கள் கோட்டை கட்டியிருப்பதைச் சங்கிலி, வேட்டம் போன காலத்திற் கண்டு, கோட்டையை இடிப்பித்து அவர்களையும் வெளிச்செல்லக் கட்டளையிட்டான் என்பதும், அப்போது அவர்கள் இவனுடன் போர் செய்தார்கள் என்பதும், ஆதாரமற்ற வெறுங்கதை.
வைபவமாலையார் கூற்றின்படி ஒருபோது நடந்திருப்பின் அவர் கூறிய மன்மத வருடமாகிய கி.பி.1536இல் அவர்களை அகற்றியது மாத்திரம் நடந்திருக்கலாம்.” (குறிப்பிடப்படும் ஆண்டு 1536 + 77 = 1613 ஆகும்) யா.சரி. முதலியார் செ.இராசநாயகம்-1933 பக்கம் 101.
மறவர் : ”சங்கிலியின் படைத் தலைவர்களில் அநேக வன்னியர்களும் மறவர்களுமிருந்தார்கள். மறவர்கள் குடியேறியிருந்தவிடம் மறாட்சி (மறவர்- – ஆட்சி) யென்றழைக்கப்பட்டது. இப்போது அது வடமராட்சி, தென்மராட்சி என இரு பிரிவுகளாகிவிட்டது. வீரமாணிக்க தேவன் என்னும் மறவர் படைத்தலைவன் ஒருவன் பருத்தித்துறையிலிருந்தான்.
”வீரமாணிக்கன் வந்திறங்கியதுறை அவன் பெயராலேயின்றும் வழங்குகின்றது. கரப்பிட்டி வன்னியன் கரப்பிட்டியிலும், காக்கைவன்னியன் ஊராத்துறையிலு மிருந்தார்கள்.
இப்படைத் தலைவர்களின் மெய்க்காப்பாளர் பெரும்பாலும் கத்திகட்டிகளென்றழைக்கப்பட்ட சாணார்களாகும்.” (யாழ்ப்பாணச் சரித்திரம் இராசநாயகம் முதலியார் -1933 பக்கம் 84.)
*இதன் பின்னர் இராசநாயகம் முதலியாருடைய யாழ்ப்பாணச் சரித்திரத்திலே காக்கைவன்னியன் பற்றிய தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சங்கிலி மன்னனுக்கும் போர்த்துக்கேயருக்குமிடையில் நடைபெற்ற யுத்தம் பற்றிக் குறிப்பிடுகையில் காக்கை வன்னியனுடைய பங்களிப்பைப் பற்றி எதுவும் எழுதப்படவில்லை.
வரலாற்றுத் தெளிவுகள் :
14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து வந்த வன்னிய குலத்தை சேர்ந்தவர்கள் ”வன்னியனார் ” என்ற தலைமைப் பதவியை வகித்து நிர்வாகம் செய்த காரணத்தினால் அடங்காப்பற்று -வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்த பொதுமக்கள் அனைவரும் தென்னிந்திய வன்னிய குலத்தை சேர்ந்தவர்கள் என்று ஆங்கில வரலாற்று நூல்களில் குறிப்பிட்டு இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் கோட்டை கட்ட ஆரம்பித்த காலமான சுமார் 1580ஆம் ஆண்டுகளில் ”காக்கை வன்னியன்” ஊர்காவற்றுறையில் இருந்ததாக வரலாறுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒல்லாந்தருடைய கடைசிக் காலகட்டத்திலும் (1786), பின்னர் ஆங்கிலேயருடைய ஆரம்பகாலமான 1800ஆம் ஆண்டுகளில் கரிக்கட்டுமூலை முல்லைத்தீவில் பண்டாரம் வன்னியனாருடைய நிர்வாகம் ஆரம்பமாகியதாக வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1803ஆம் ஆண்டளவில் ஆங்கிலேயருடைய அதிகாரத்தில் வன்னியனாராக இருந்த ‘‘பண்டாரம் வன்னியனாரை”, சுமார் 223 வருடங்களுக்கு முன்னர் ஊர்காவற்றுறையிலிருந்த (ஊராத்துறை) ”காக்கை வன்னியனார்” ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுத்ததாகக் கூறுவது வரலாற்றை படிக்க முயலும் மாணவர்களுக்கு குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் விடயமாகும்.
”பண்டார வன்னியன்’‘ வரலாற்று நாடகத்தை 1964 களில் எழுதிய எமது ஆசான் முல்லைமணி போதிய தகவல்கள் கிடைக்காத காரணத்தினாலும், மேடை நாடகத்திற்கு உணர்வூட்டுவதற்காகவும் ”காக்கை வன்னியன்’‘ என்ற கதாபாத்திரத்தை கற்பனையில் உருவாக்கியதாகக் கூறுகிறார்.
ஆனால் 1996 களில் என்னால் எழுதப்பட்ட ”நந்தி உடையார்” மற்றும் ”பண்டாரவன்னியன் குருவிச்சி நாச்சியார்” நாடகங்களுக்கான ஆய்வுக்குறிப்புகளிலும் வன்னிபற்றிய வரலாற்றுக் குறிப்புகளை எழுதியிருந்தேன்.
முல்லைமணி 1997 தொடக்கம் 2001 வரை வன்னி வரலாறுபற்றி எழுதிய ஆய்வுக்கட்டுரைகளில், ஏற்கனவே எழுதிய வரலாற்று நாடகத்திலுள்ள விடயங்களின் உண்மைத் தன்மையை திருத்திக் கூறியுள்ளார். அந்த விடயங்கள் மக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்காத காரணத்தினால் இன்று வரை வரலாற்றில் தெளிவின்மையே தொடர்கிறது.
வவுனியாவில் பண்டாரம் வன்னியனார் சிலை
பேராசிரியர் புலோகசிங்கம் ”காகு” என்றால் ”கொன்னையன்” இதனாலேயே ”காக்கை வன்னியன்” என்ற பெயர் வந்தது என்பது பற்றி, தமது விசனத்தை கட்டுரைகளில் தெரிவித்திருந்தார்.
இதுவரை காலமும், பண்டாரம் வன்னியனாரின் வரலாற்றை சுயமாக ஆய்வு செய்யாமல், (பல்கலைக் கழக வரலாற்றுத்துறைகள் உட்பட) பண்டாரவன்னியன் சம்பந்தமான பல கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதிய அறிஞர்கள் கலைஞர்கள் உட்பட பலரும், பண்டார வன்னியனைக் காட்டிக்கொடுத்தவர் ”காக்கை வன்னியன்” என்றே பதிந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
தென்னிந்திய டாக்டர் கலைஞர் அறிஞர் கருணாநிதி ”பண்டாரக வன்னிய” என்ற தலைப்பில் வரலாற்று நாவலை எழுதியபோது ”காக்கை வன்னியன்” என்பவர் வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்தவர் எனக் கூறுகின்றார். பண்டாரக வன்னியன் வரலாற்று நாவலை காவியமாகத் தந்த கவிஞர் ஜின்னாவும் ”காக்கை வன்னியனை” உண்மைக் கதாபாத்திரமாகவே படைத்துள்ளார்.
காவியத்திற்கு முன்னுரை எழுதியுள்ள காரை. சுந்தரம்பிள்ளை மேலும் ஒரு படி முன்னேறி, 1803ஆம் ஆண்டில் இடம்பெற்ற போராட்டத்தில் பதவி இழந்திருந்த பண்டாரம் பின்னர் நடத்திய தாக்குதல்கள் பற்றி ஆங்கிலேயருக்கு தகவல் தெரிவித்திருந்த கதிர்காம நாயக முதலியாரை ”காக்கை வன்னியன் ” என்ற பட்டப் பெயரால் அழைக்கலாம் என்று நியாயப்படுத்தியிருப்பது விசனத்தை ஏற்படுத்துகிறது.
பாடசாலை மாணவர்களுக்கான பாடநூலில் பண்டார வன்னியனைக் காட்டிக் கொடுத்தவர் காக்கை வன்னியன் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது தேசிய வீரன் பண்டாரம் வன்னியனாருடைய வரலாறு பாடநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளமைக்கு, வரலாற்றின் உண்மைத்தன்மை ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
1964 தொடக்கம் இன்று வரை, வடபுலத்தில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் விழாக்களிலும், தேர்தல் பிரசாரங்களின் போதும், பல தமிழ் அரசியல்வாதிகள் ”அடங்காப்பற்று – வன்னிப் பிரதேசத்தில் காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்கள் இருக்கும்வரை தமிழர்களுக்கான உண்மை அரசியலை செய்ய முடியாமல் இருக்கிறது” என்று சாடி வருவதை காதாரக் கேட்டிருக்கின்றேன். அதற்காக அவர்கள், நீலிக்கண்ணீர் வடிப்பதையும் நேரில் பார்த்து மனம் நொந்துமிருக்கிறேன்.
தற்போது யாழ்ப்பாணம், வன்னி என்ற இரண்டு பிரிவுகள் இருக்கின்ற காரணத்தினால் ”காக்கை வன்னியன்” என்ற பெயரை அடங்காப்பற்று -– வன்னியோடு தொடர்புபடுத்தி எழுதுவதும் பேசுவதும் பொருத்தமானதல்ல.
அது அங்கீகரிக்கப்பட்ட ஒரு தமிழ்த் தேசிய வீரனையும், அவர் வாழ்ந்த பிரதேசத்தின் கௌரவத்தையும் திட்டமிட்டு இழிவுபடுத்தும் ஒரு செயலாகும் என்ற கருத்து மேலோங்கி நிற்பதை தமிழ் வரலாற்றாசிரியர்களும் தமிழ்ச்சமூகமும் ஏற்றுக் கொள்ளும் என்பது எனது நம்பிக்கை. அடங்காப்பற்று – வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களின் வரலாறுகள் முறையான ஆய்வுகளின்றி திரிபுபட்டு சிதைவடைந்து வருவதும் கண்கூடு.
ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வழங்கப்பட்ட நியமனங்கள் பற்றிய பல தகவல்கள் அந்தந்த மொழிகளில் எழுத்தில் உள்ளன.
அவை இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. பூரணமான ஆங்கில அறிவோடு வளர்ந்து வரும் எதிர்காலச் சந்ததியினர், இணையத்தளங்கள் மற்றும் மின்னியல் ஊடகங்கள் மூலம் வரலாறுகளைத் தெரிந்து கொள்ள பல வாய்ப்புகள் உண்டு.
ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் திரிபுபட்ட வரலாறுகளை, வரலாற்றுத் தொகுப்புகளாகவோ, நாடகங்களாகவோ, நாவல்களாகவோ, காவியங்களாகவோ, கட்டுரைகளாகவோ, கவிதைகளாகவோ தமிழில் எழுதுபவர்கள், தாங்கள் எழுதுவதை எதிர்காலச் சமூகம் நிராகரிக்கப் போகிறது என்பதையும், அவற்றை கற்பனைக் கதைகளாக மட்டுமே ஏற்றுக் கொள்ளும் என்பதையும், மனதிலிருத்திக் கொள்வது அவசியம்.
இலங்காபுரத்தில் ஆட்சி செய்த சக்கரவர்த்தி இராவணேஸ்வரனுடைய வரலாறு, தற்போது கற்பனைகள் நிறைந்த புராணக் கதையாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது இதற்கு நல்ல உதாரணமாகும்.
21ஆம் நூற்றாண்டிலாவது, வடபுலத் தமிழர்களுடைய பூர்வீக வரலாற்றில் உள்ள உண்மைத் தன்மையை ஆதாரபூர்வமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு ஆவன செய்வது ஒவ்வொரு ஆய்வாளருடைய கடமையாகும். அடுத்த வாரத்தில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் வெளிப்பாடாக தேசிய வீரன் பண்டாரம் வன்னியனாருடைய வரலாறு ஆரம்பமாகும்.
வரலாறு தொடரும்..
அருணா செல்லத்துரை
பண்டாரம் வன்னியகளும் – காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை)