சென்னை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன.
தமிழகத்தில் ஆட்சி அமைத்து ஜெ., அமைச்சர் நீக்கம் இன்றுடன் 19 வது முறை என்பது முக்கிய இடம் பிடிக்கிறது.
தமிழக முதல்வர் ஜெ., இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கப்படுவதாகவும், இவருக்கு பதிலாக பி.வி.,ரமணா நியமிக்கப்படுவதாகவும், இவர் இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மூர்த்தியை பொறுத்த வரை பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. இவரது மகன்கள் கண்ணதாசன், தமிழ்செல்வன் ஆகிய இருவரும் பல்வேறு அரசு துறை பணிகள் டெண்டருக்கு தனி கமிஷன் கலெக்சன் பண்ணி வந்தனராம்.
மேலும் மணல் வளம் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் சட்ட விரேதாமாக குவாரிகளை கொண்டு கொள்ளை லாபம் அடித்தது வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும் குவாரிகள் தி.மு.க.,காரர்களுக்கு வழங்கிட அமைச்சர் துணை போனார் என்றும் ஒரு தரப்பு கூறப்படுகிறது. கட்சியில் பொறுப்புகள் வாங்கி தரவேண்டுமென்றால் மாவட்ட செயலராக இருக்கும் அமைச்சர் மூர்த்திக்கு ஒரு தொகை கல்லா கட்ட வேண்டுமாம்.
இப்படி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு : சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது.
வந்தவாசி ரோடு, கோவிந்தாபுரம் அருகே, வெள்ளிமேடுபேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோட்டார் பைக்கில் வந்த திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் சுரேஷ்பாபு, 35, ராணிபேட்டை அன்பு, 24 ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பாலைத் திருட, ஒரு வாகனத்தில் கேன்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர்.
திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர். இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது.
சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.
சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்.