நெல்லியடி நகரில் நேற்று நண்பகல் இளம் பெண்ணொருவரை வெள்ளை வானில் கடத்த முற்பட்டவர்கள் பெண்ணின் அவலக்குரல் கேட்டு அவ்விடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்குப் பயந்து கடத்தல் முயற்சியைக் கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழில் இயங்கிவருகின்ற சந்தைப்படுத்தல் நிறுவனம் ஒன்றில் குறித்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக இணைந்துள்ளார்.
அந்த நிறுவனத்தில் கடமையாற்றுகின்ற உயர் அதிகாரிகள் குறித்த பெண்ணுள்ளிட்டவர்களுக்கு உரிய முறையில் வேதனத்தை கொடுக்க மறுத்துள்ளதுடன் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் இப்பெண் பணியிலிருந்து விலகியுள்ளார்.
அவ்வாறு விலக முடியாது என தொடர்ச்சியாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அச்சுறுத்தி வந்துள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களிடம் குறித்த பெண் முறையிட்டிருந்தார். அவர்களும் அவ்விடயத்தில் தலையிட்டு குறித்த நிறுவன அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நண்பகல் குறித்த பெண் நெல்லியடிச் சந்தைக்குச் சென்ற போது வெள்ளைவான் ஒன்றில் பின்தொட ர்ந்து சென்ற அந் நிறுவனத்தின் பணியாளர் கள் அப்பெண்ணை கடத்திச் செல்ல முற்ப ட்டுள்ளனர். அதனால் அப்பெண் அவலக்குரல் எழுப்பியுள்ளார்.
உடனடியாகவே அவ்விடத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடியதையடுத்து வாகனத்தில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறையிட்டுள்ளார்.
இதேவேளை இச்சம்பவத்தில் உடனடியாகத் தலையிட்டு குறித்த நிறுவன அதிகாரிகளைக் கைதுசெய்யுமாறு வடமாகாண சபையின் உறுப்பினர்களும் நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் கர்ப்பிணி உட்பட ஐவர் விபத்தில் படுகாயம்
யாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதியதால் ஏற்பட்ட விபத்தில், கர்ப்பிணி பெண் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (12) அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினார்கள்.
படுகாயமடைந்தவர்கள் சுயநினைவிழந்த நிலையில் இருப்பதாகவும் அதன் காரணமாக, அவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை தெரியவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
பலாலி வீதியில் துவிச்சக்கரவண்டியில் ஏறமுற்பட்டவர் மீது, வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதுடன் அந்த துவிச்சக்கரவண்டி வீதியில் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிள், மற்றும் துவிச்சக்கரவண்டிகளில் பயணித்த கர்ப்பிணி பெண் உட்பட ஐவர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழ். கோண்டாவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதல்: கர்ப்பிணி உட்பட ஐவர் விபத்தில் படுகாயம்