திருமங்கலம்: மதுரை அருகே திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மீது மர்ம நபர் ஆசிட் வீசினார். இதில் மாணவிகள் 2 பேரும் படுகாயமடைந்தனர். ஆசிட் வீசி தப்பியோடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சின்னபூலாம்பட்டியைச் சேர்ந்த உதயசூரியன் மகள் மீனா (17). இதே ஊரை சேர்ந்த சங்கரபாண்டி மகள் அங்காளஈஸ்வரி (18). திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பிஏ ஆங்கிலத்தில் மீனா முதலாம் ஆண்டும், அங்காள ஈஸ்வரி 2ம் ஆண்டும் படித்து வருகின்றனர்.
தோழிகளான இருவரும் நேற்று பிற்பகல் கல்லூரி முடிந்ததும் திருமங் கலம் பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். கல்லூரி அருகே பெருமாள் கோயிலை ஒட்டிச் செல்லும் சந்துப் பகுதியில் இருவரும் நடந்து வந்த போது, எதிரே வந்த மர்ம நபர் தனது கையில் ஒரு மது பாட்டிலை மறைத்து வைத்திருந்தார்.
திடீரென அந்த நபர், தான் வைத்திருந்த அந்த பாட்டிலை திறந்து, அதில் இருந்த ஆசிட்டை மீனாவின் முகத்தின் மீது வீசினார்.
பாட்டிலில் இருந்த ஆசிட் முகத்தில் கொட்டியதில், மீனா அலறி துடித்தார். அதிர்ச்சியடைந்த, அங்காள ஈஸ்வரி கையை நீட்டி அந்த பாட்டிலை தடுத்தார். இதனால் அவர் மீதும் ஆசிட் தெறித்து விழுந்தது. இதில் மாணவிகள் 2 பேரும் படுகாயமடைந்தனர்.
தோழிகளின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினரும், சக கல்லூரி மாணவர்களும் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்மநபர் தப்பி ஓடினார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவரும், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின்போது மீனா, அங்காளஈஸ்வரி ஆகியோருக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த அதே கல்லூரியின் மாணவி செல்வி கூறுகையில், எனக்கு 10 அடி முன்புதான் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென இருவர் மீதும் ஆசிட் வீசினார்.
நாங்கள் ஓடி வருவதற்குள் அவர் தப்பிச் சென்றார். அந்த நபர் யாரென எங்களுக்குத் தெரியவில்லை, என்றார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக மாணவிகளின் சொந்த ஊரான சின்ன பூலாம்பட்டியில் விசாரணை நடத்தினோம்.
இதில் காதல் விவகாரத்தில் இந்த ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும் வேறு காரணங்கள் இருக்கிறதா எனவும் விசாரணை நடக்கிறது, என்றார்.
ஆசிட் விற்பனை தாராளம்: ஆசிட் வீச்சு சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராணி தலைமையில் பெண்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளைப் பார்க்க மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர் களை உள்ளே செல்ல விடாமல் போலீஸ் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மீறி உள்ளே நுழைந்த பெண்களை போலீசார் வெளியில் தள்ளியதால் கீழே விழுந்ததில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் முத்துராணி உள்ளிட்ட 2 பேர் மட்டும் மாணவிகளைப் போய் பார்த்து விட்டு வந்தனர். முத்துராணி நிருபர்களிடம் கூறுகையில், ஆசிட் வீசப்பட்டு 5 மணிநேரமாகியும் முழுமையான சிகிச்சை மாணவிகளுக்கு கிடைக்கவில்லை. ஆசிட் விற்க தடை இருக்கிறது. ஆனால் மதுரை மாவட்டத்தில் ஆசிட் சர்வசாதாரணமாக கிடைக்கிறது என்றார்.
நீதிபதியிடம் மாணவிகள் வாக்குமூலம்
திருமங்கலத்தில் ஆசிட் வீச்சில் காயமடைந்து, மதுரை அண்ணா பஸ்நிலைய விரிவாக்க அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவிகள் மீனா, அங்காள பரமேஸ்வரி ஆகியோரை மதுரை ஜேஎம் 2 நீதிபதி பால்பாண்டியன் நேற்று சந்தித்தார். இருவரிடமும் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றார்.
இதுதவிர, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சீதாலட்சுமி, மாணவர்களுக்கான மனோதத்துவ பேராசிரியை ஹெலன் ஆகியோர் மாணவிகளை பார்த்து ஆறுதல் கூறினர்.
மாணவியின் தாயார் கண்ணீர்
திருமங்கலம் ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி மீனாவின் தாயார் முருகேஸ்வரி கூறுகையில், மீனாவின் அப்பா உதயசூரியன் விவசாயி. டெய்லர் தொழிலும் செய்து வந்தவர், உடல் நலம் பாதித்து கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் இறந்தார்.
கணவரை இழந்து தவிக்கும் நிலையில், என் மகள் மீதும் ஆசிட் வீசி கொல்ல முயன்றிருப்பது வேதனையாக இருக்கிறது. ஆசிட் வீசிய தகவல் கிடைத்து வந்து பார்த்தேன்.
முகம், கைகளில் காயங்களுடன் மயக்கத்தில் இருக்கிறார். என்ன காரணத்திற்காக ஆசிட் ஊற்றினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. குற்றவாளியைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
நண்பர் சிக்கினார்
ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 40 வயது நபருடன், மேலும் ஒருவர் வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதன்பேரில் 25 வயது மதிக்கத்தக்க ஒருவரை பிடித்து வந்து தனிப்படை போலீசார் சிறப்பு விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து ஆசிட் வீசிய நபர் யார் என்பது தெரிய வந்திருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆசிட் ஊற்றியவனை தெரியும்
மீனா, அங்காள பரமேஸ்வரி ஆகியோரது சக தோழிகளான மாணவிகள் சிவரஞ்சனி, பிரியா கூறுகையில், கல்லூரி முடிந்து நடந்து வந்தபோதுதான் 2 பேரும் ஆசிட் வீச்சுக்கு ஆளாகினர்.
முகத்தில் ஆசிட் பட்டதும் 2 பேரும் துடிதுடித்து விட்டனர். ஆம்புலன்ஸ் வர லேட்டானதால், உடனடியாக அங்கு வந்த ஒரு டூவீலரில் ஏற்றித்தான் 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினோம்.
அப்போது வலியில் துடித்த மீனா, தன் மீது ஆசிட் ஊற்றியவனைத் தெரியும் என்று கூறினார். ஆனால் காரணத்தைச் சொல்லவில்லை. பிறகு மயங்கி விட்டார். அவர் கண்விழித்துச் சொன்னால் காரணம் தெரியும், என்றனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் மாணவிகளை பார்த்த கலெக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், Ôகாயமடைந்தவர்களுக்கு டீன் தலைமையில் சிகிச்சை தரப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தரும்Õ என்றார்.
மதுரை மேயர் ராஜன் செல்லப்பா, முத்துராமலிங்கம் எம்எல்ஏ, உள்ளிட்ட பலரும் மாணவிகளை பார்த்து, கூடுதல் சிகிச்சை வழங்க டாக்டர்களிடம் கோரிக்கை வைத்தனர்.