அது கடந்த செவ்வாய்க்கிழமை. எப்படியும் காலை 6.00 மணி கடந்திருக்கும். சூரியன் தனது வெளிச்சத்தை உலகின் மீது பாய்ச்ச ஆரம்பித்த அந்த நேரம் எனது கையடக்க தொலைபேசியோ குறுந்தகவல் ஒன்று வந்துள்ளதை காட்டி சிணுங்கியது. யாரேனும் காலை வந்தன குறுஞ்செய்தியை அனுப்பி இருப்பார்கள் என்ற எண்ணத்துடன் அந்த செய்தியை படிக்க முற்பட்ட வேளை ஒரு கணம் அதிர்ந்து போய்விட்டேன்.
‘குருணாகல்- வெல்லவ பகுதியில் நாலரை வயது சிறுமி மாயம். கடத்தப்பட்டதாக சந்தேகம்’ என பொலிஸ் தலைமையகத்திலிருந்து கிடைத்த அந்த செய்தி குறிப்பிட்டிருந்தமையே இதற்கான காரணமாகும்.
மறுகணம் உடனடியாகவே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹணவை தொடர்புகொண்டு அந்த குறுஞ் செய்தியில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பில் வினவ அவரின் விளக்கங்கள் அதிர்ச்சிமேல் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ஆம், தனது பெற்றோர், சகோதர சகோதரிகளுடன் நித்திரையில் இருந்த போது நாலரை வயது சிறுமி ஒருவர், குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காணாமல் போயுள்ளார். இது கடத்தலாக இருக்கும் என நம்புகின்றோம்.
இப்போதைக்கு அங்கு பொலிஸ் குழுக்கள் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளன என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண பதிலளிக்க அலுவலகம் வந்ததும் வராததுமாக குருணாகல் மற்றும் வெல்லவ பகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிகளையும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரையும் தொடர்புகொண்டு விடயங்களையும் நிலைமையையும் ஆராய்ந்த போது ஒரு வகையான கவலை மனதை ஆட்கொண்டுவிட்டது.
கடந்த எட்டாம் திகதி முழு மதித் திங்கள் பூலோகத்தை அலங்கரிக்க, அன்று இரவு 9.30 மணிக்கு சிறுமி தமாரா கேஷனி, தனது அண்ணனுடன் ஒன்றாக நித்திரைக்கு சென்றார்.
தமாராவும் அவரது சகோதரரும் ஒரே கட்டிலில் உறங்க, அந்த கட்டிலிலிருந்து மூன்று அடி அப்பால் இருந்த மற்றொரு கட்டிலில் தாயும் தந்தையும் இரண்டே வயதான சிறிய தங்கையும் நித்திரை கொண்டுள்ளனர்.
தமாரா கேஷனி சிறுமியின் தாய் தந்தையர் காலை ஆகாரங்களை தயார் செய்து கடைகளுக்கு விற்றே தமது வாழ்வை ஓட்டி வந்தனர். அவர்கள் வசித்து வந்த அந்த வீடு கறுப்பு நிற பொலித்தீனாலும் தகரங்களாலும் மறைக்கப்பட்ட ஒரு குடிசை. கறுப்பு பொலித்தீன் சுவர்களுக்கு அருகே ஒரு சிறிய கட்டில். அதற்கு அப்பால் அதன் அளவினை ஒத்த மற்றொரு கட்டில். தகரங்களால் ஆன இரு பக்க சுவர்களுக்கு மத்தியில் பலகையினால் செய்யப்பட்ட ஒரு கதவு.
இவ்வாறான ஒரு ஏழ்மையின் எல்லையில் வாழ்ந்துகொண்டிருந்த குடும்பத்தின் கனவுகளை சிதைக்கும் விதமாகவே நாலரை வயது சிறுமி தமாரா காணாமல் போயுள்ள சம்பவத்தின் பின்னணி அமைந்துள்ளது.
தமாராவும் அவரது அண்ணனும் உறங்கிய கட்டில் அமைந்திருந்த இடத்தில் சுவராக பயன்படுத்தப்பட்ட அந்த கறுப்பு நிற பொலித்தீன் மிக நேர்த்தியாக செவ்வக வடிவில் வெட்டப்பட்டு, கட்டிலுக்கு போடப்பட்டிருந்த நுளம்பு வலையினையும் கிழித்து யாரோ ஒருவர் அல்லது ஒரு குழு மிக சூட்சுமமாக கடத்தலை மேற்கொண்டுள்ளது.
செவ்வாயன்று அதிகாலை 2.00 மணியளவில் குளிர் நிலைமையை உணர்ந்து தூக்கத்திலிருந்து எழுந்த தமாராவின் அண்ணன் தனக்கு பக்கத்தில் படுத்திருந்த தங்கை இல்லாததை உணர்ந்து அவள் பெற்றோர் அருகில் சென்றிருக்க வேண்டும் என எண்னி தந்தையை எழுப்பியுள்ளார். தந்தையை எழுப்பிய அந்த சிறுவன் ‘ தங்கச்சி உங்களுடன் தூங்குகின்றாரா ‘ என வினவியவாறே அதிக குளிர் அடிப்பதாக முறையிட்டுள்ளார்.
தூக்கக் கலக்கத்துடன் கண்களை துடைத்துக்கொண்ட தந்தை தங்கை அங்கு இல்லை என குறிப்பிடுவதற்குள் வீட்டினுள் முழுமதியின் ஒளியை அவதானித்து முழுமையாக தூக்கத்திலிருந்து எழுந்து அவதானிக்கலானார். இதன்போது தான் தனது மூத்த மகனும் மகளும் படுத்திருந்த கட்டிலின் அருகே பொலித்தீன் வெட்டப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதுடன் தங்கை தொடர்பில் மகன் எழுப்பிய கேள்வியை மீட்டி சிறுமி தமாராவை தேட ஆரம்பித்துள்ளார்.
‘தோணி‘ என செல்லமாக அழைக்கப்பட்ட சிறுமி தமாரா வீடு முழுவதும் தேடப்பட்ட போதும் அங்கு எங்கும் இல்லாத நிலையில் வெளியே செல்ல முற்பட்ட தந்தை, தாய்க்கு மற்றுமொரு தடை அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. வீட்டின் கதவு வெளிப்புறத்தால் தாழிடப்பட்டிருந்தது. கதவின் திறப்பு வேறு அங்கு இருக்கவில்லை.
இதனை அடுத்து ஒரு வழியாக வெளியே வந்து சிறுமியை தேடியும் காணமுடியாது போகவே அயலவர்களும் அந்த அதிகாலை பொழுதில் தமாராவின் வீட்டை சுற்றி தேட 119 என்ற பொலிஸ் அவசர உதவிச் சேவைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
வெல்லவ பொலிஸ் பிரிவின் கனேவத்த – பன்னவ சந்தியை அண்மித்த அம்பகொலவெவ பிரதேசத்தில் அமைந்திருந்த சிறுமி தமாராவின் வீட்டுக்கு சென்ற வெல்லவ பொலிஸ் நிலைய குழுவினர் அங்கு இடம்பெற்றிருப்பது ஒரு கடத்தலாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர்களாய் தமது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் தான் வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன, குருணாகல் பொலிஸ் வலயத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமார, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜந்த சமரகோன், உதவி பொலிஸ் அத்தியட்சர் ஓ. டப்ளியூ.சில்வா உள்ளிட்டவர்கள் அந்த இடத்துக்கு விரைந்தனர்.
அப்போதும் அவ்விடத்தில் இருந்தவாறு வெல்லவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தலைமையிலான குழுவினர் அங்கிருந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்ட ரம்படகல, மஹவ, பொல்கஹவெல, குருணாகல், நாரம்மல, வாரியபொல , கொக்கரெல்ல உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய அங்கு சென்று விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
விசாரணைகளுக்காக குருணாகல் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாயான டோவரும் அழைக்கப்பட்ட நிலையில் குருணாகல் பிராந்தியத்தின் தடவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் லஹிரு கசுன் தலைமையிலான குழுவினர் அங்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தடவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் பொலித்தீனையும் நுளம்பு வலையினையும் வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற பிடியைக் கொண்ட கத்தரிக்கோலினை அதே வீட்டின் கூரைப் பகுதியில் செருகப்பட்டிருந்த நிலையில் மீட்டனர். அத்துடன் பிரதான கதவின் திறப்பு வீட்டுக்கு அப்பால் உள்ள ஒரு இடத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் பின்னர் மீட்கப்பட்டது.
இதனை விட பொலித்தீனை வெட்டி சிறுமியை கடத்தியுள்ள சந்தேக நபர் பிரதான கதவூடாகவே சென்றிருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்களையும் பொலிஸார் சேகரித்தனர். அத்துடன் சிறுமி படுத்திருந்த கட்டிலருகே இருந்த சிறுமியின் தாயாரின் இரவு நேர உடைகள் ( நைட்டி) வெட்டப்பட்டிருந்தன.
இதனை அவதானித்த பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவகையான மன நோயினால் பீடிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் அல்லது பொலிஸாரின் விசாரணைகளை திசை திருப்பும் விதமாக இவ்வாறு செய்திருக்க வேண்டும் எனவும் நம்புகின்றனர்.
இந் நிலையில் குருணாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமார, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜந்த சமரகோன் ஆகியோருக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா ஜகத் அபேசிறி குணவர்தன ஆகியோருக்கு அந்த பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இரு சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது கடந்த ஞாயிறன்று (7 ஆம் திகதி) பொல்கஹவெல பொலிஸ் பிரிவின் உடவெல, தேவாலய வீதியிலும் இதனையொத்த இரு கடத்தல் முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. அது தொடர்பான பதிவுகளே குறித்த உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றிருந்தன.
அதன்படி உடவெல, தேவாலய வீதியில் உள்ள கடற்படை வீரர் ஒருவரின் வீட்டினுள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்து படுக்கை அறையின் கட்டிலுக்கு கீழ் ஒளிந்து இருந்துள்ளார். இதனை அவதானித்துள்ள அந்த வீரரின் மனைவி உடனடியாக சத்தமிடவே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களது நாலரை வயது மகளை இலக்கு வைத்தே அந்த நபர் அவ்வாறு மறைந்திருக்க வேண்டும் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் அதேதினம் அதே பிரதேச வீடொன்றில் 6 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு சிறுமி சப்தமிட்டதன் விளைவாக வீட்டிலிருந்து 400 மீற்றர் தொலைவில் கிணற்றருகே விட்டுச் சென்ற சம்பவமும் பதிவாகியுள்ளது. இவ்விரு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் போது பொலிஸாருக்கு ஒரு ஜோடி காலணி கிடைத்தது.
இந் நிலையில் மேற்படி சம்பவத்துக்கும் வெல்லவ சம்பவத்துக்கும் தொடர்புகள் உள்ளதா என விசாரணை செய்யும் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் இறுதியில் கடத்தப்பட்ட கல்கமுவ – மீகலேவ பிரதேசத்தை சேர்ந்த யசீன் லங்கா நாத் மீட்கப்பட்டதை தொடர்ந்து நிம்மதியடைந்திருந்த குருணாகல் பிரதேச மக்கள் இந்த சம்பவங்கள் ஊடாக தற்போது மீண்டும் அச்சத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் வாழும் சிறுவர்களை பாதுகாக்க பெற்றோர் தனி வியூகமமைப்பதாக அறியமுடிகின்றது.
சிறுமி கடத்தப்பட்ட 24 மணி நேரங்களில் குருணாகல் நகரில் உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணிமனையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் கூடி கலந்தாலோசித்தனர்.
இதன் போது மாவட்டதில் உள்ள ஒன்பது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் கீழ் விஷேட குழுக்களை அமைத்த அவர்கள் நான்கு உதவி பொலிஸ் அத்தியட்சர்களின் கீழ் அவற்றை விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இதனை விட பொலிஸ் உளவுப் பிரிவினையும் விசாரணைக்கு அமர்த்திய பொலிஸ் திணைக்களம் பிரதான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பாரப்படுத்தியது.
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உடன் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட குழு குருணாகலைக்கு புறப்படும் போது கடத்தல் இடம்பெற்று 20 மணி நேரத்துக்கு மேல் கடந்திருந்தது.
இதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் ஆலோசனைக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சர் சமந்த வீரசேகர, கூட்டு கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எட்ரியன் நிஸாந்த சில்வா, உப பொலிஸ் பரிசோதகர்களான எச்.சீ.உபாலி, எச்.பீ.பீ. அமரவங்ஸ உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு வெல்லவ பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.
இதனைவிட குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் இருந்தவாறு விஷேட குழுவொன்று நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி வருகின்றது. இதனை விட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணவீரவும் குருணாகல் நகருக்கும் வெல்லவ பகுதிக்கும் சென்று நிலைமையினை அவதானித்ததுடன் விசாரணைக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
தற்போது விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவின் இதே குழுவினரே மீகலேவ பிரதேசத்தில் கடத்தப்பட்ட நாலரை வயது சிறுவனை மீட்டிருந்தமை இங்கு விஷேட அம்சமாகும்.
இந் நிலையில் தான் சிறுமி தமாரா கேஷனியின் தாய் தந்தையரிடம் வெல்லவ பொலிஸார் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்துக்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவினரும் வாக்குமூலம் ஒன்றைப் பதிவுசெய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் போது இரு முக்கியமான விடயங்கள் பொலிஸாருக்கு தெரியவந்தன.
அதாவது சிறுமியின் தாயாருக்கு தோஷம் கழிப்பதாக கூறி கடந்த மாதத்தின் ஒரு நாள் நாவலப்பிட்டியை சேர்ந்த ஒரு மாந்திரிகர் அந்த வீட்டுக்கு வந்துள்ளமையும் அதனைத் தொடர்ந்து சில தடவைகள் தோஷம் கழிக்கும் வேலையாக அவர் வந்து சென்றுள்ளமையும் புலனாய்வுப் பிரிவினரின் அவதானத்துக்கு உள்ளாகியது.
குறித்த மாந்திரிகர் வெல்லகல தேவாலயம் ஒன்றில் வைத்தே சிறுமியின் தந்தைக்கு அறிமுகமாகியுள்ளதும் வீட்டுத் தோட்டத்தில் பூமி தோஷம் ஒன்று உள்ளதாக கூறியே அவர் சிறுமியின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தந்தையின் வாக்குமூலத்தின்படி அந்த மாந்திரிகரால் தோஷம் கழிக்கும் சாந்தி பரிகாரத்துக்கு 9000 ரூபா அறவிடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இந்த நிலையில் சிறுமி கடத்தப்பட்டு 36 மணி நேரமாகியும் தகவல் கிடைக்காததால் அந்த மாந்திரிகரை வெல்லவ பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பித்த புலனாய்வுப் பிரிவினர் அவரை பொலிஸ் பொறுப்பிலெடுத்து விசாரணைகளை ஆரம்பித்தனர். எனினும் அதன் பிரதிபலன் பூச்சியமாகவே இருந்தது.
எனினும் அந்த மாந்திரிகர் பொலிஸ் நிலையத்தில் மாந்திரீக நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுவிட்டு சிறுமி பத்திரமாக உள்ளதாகவும் வெள்ளை பெண் ஒருவர் அவரை தடுத்து வைத்துள்ளதாகவும் கூரியுள்ளார். எனினும் அதனை நம்பும் அளவில் பொலிஸார் இல்லை என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகின்றார்.
இதனை விட சிறுமியின் தந்தையின் வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்ட மற்றொரு விடயமும் அவதானத்துக்கு உரியது. அதாவது திங்கட்கிழமை 8 ஆம் திகதி முற்பகல் வேளையில் நபர் ஒருவர் வந்து ஷாந்த என்ற நபரைத் தெரியுமா என விசாரித்துள்ளார்.
அப்படி ஒருவரைத் தெரியாது என அதற்கு பதிலளித்துள்ள சிறுமியின் தந்தை அவரின் ஊரைக் கேட்டபோது கிரிபாய என்று சொல்லிவிட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயமும் புலனாய்வுப் பிரிவினரின் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காணாமல் போயுள்ள சிறுமி தமாரா கேஷனி தொடர்பில் சரியான தகவல் வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்க தீர்மானம் பொலிஸ் மா அதிபரால் எடுக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 011 – 2422176, 011 – 3024245,0777223095 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்தது.
இதனிடையே சிறுமி கடத்தப்பட்ட தினம் பல்வேறு சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் பிரதேசமெங்கும் இடம்பெற்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன.
அதன்படி பிரதேசத்தை அண்டிய பகுதியில் குறித்த நேரத்தில் ட்ரக் வண்டி ஒன்று சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் பயணித்துள்ளதாகவும் சிறுமி ஒருவரின் அழுகை சத்தமும் இதன்போது கேட்கக் கூடியதாக இருந்ததாகவும் பொலிஸாருக்கு வாக்கு மூலங்களை வழங்கிய சிலர் குறிப்பிட்டதாக அறிய முடிகின்றது.
இதனிடையே குறித்த சிறுமியை வளர்ப்புக்காக அல்லது புராதன பொருட்களை அகழும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பலி கொடுப்பதற்காக கடத்தியிருக்கலாமோ என்ற கோணத்திலும் சொந்த கோபதாபங்களுக்காக கடத்தப்பட்டாரா என்ற மற்றொரு கோணத்திலும் விசாரணைகள் தொடர்கின்றன. எவ்வாறாயினும் சிறுமி கப்பம் பெறுவதற்காக கடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவானது என விசாரணைகளை முன்னெடுத்துள்ள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் சிறுமியை நாட்டை விட்டு எவரும் கடத்தி விடக் கூடாது என்பதிலும் விசாரணைப் பிரிவினர் அவதானமாக இருப்பதுடன் அவளது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாவண்ணம் நடவடிக்கை களை முன்னெடுத்துள்ளனர். மத்தள, கட்டுநாயக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு குடிவரவு குடியகல்வுத் துறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தல் தொடர்பில் சிறுமியுடன் ஒன்றாக கட்டிலில் உறங்கிய அவரது ஒன்பது வயது சகோதரன் இப்படி எம்மிடம் விபரித்தார்.’ நான் தங்கையுடன் மிகவும் இரக்கமாகவே இருப்பேன். எனினும் அன்றைய தினம் இருவரும் கோபித்துக் கொண்டோம். தங்கை கால் கழுவாததால் இப்படி நடந்தது. தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒரு கை என் மேலால் செல்வது போல் இருந்தது. எனினும் வழமையாக தங்கை கையை என்மேல் போடுவதால் நான் அவரது கையாக இருக்கும் என நினைத்தேன். எனினும் உறுதியாக ஞாபகம் இல்லை.
சிறிது நேரத்தில் குளிர் தாங்க முடியாது எழுந்த போது தங்கை பக்கத்தில் இருக்கவில்லை. தந்தையை எழுப்பி தங்கை அங்கே வந்து உறங்குகிறாரா என கேட்ட போதே விடயம் தெரியவந்தது’ என கவலையுடனான குரலில் சொல்லிவிட்டு தேம்புகின்றார்.
தாய் தந்தையரின் உணர்வுகளும் விபரிக்க முடியாத கவலைகளை எம்மிடம் ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. எப்போதாவது தமது ‘ தோணி ‘(சிறுமியின் செல்லப் பெயர்) தம்மிடம் வருவாள் என நம்பிக்கையோடு இவர்கள் காத்திருந்தனர்.
இவர்களது காத்திருப்பை போலவே சிறுமி தமாரா கேஷனி வீடு வந்து சேரும் வரை இலங்கையில் உள்ள 2 கோடி பேருக்கும் அதிகமானோர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில்தான் பொலிஸாரின் பல்கோண விசாரணைக்கு மத்தியில் நேற்று மாலை சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது. குருணாகல் இப்பாகமுவ கும்புக்கேற் பகுதியில் உள்ள கடையொன்றின் முன்னால் சிறுமியை சந்தேகநபர் அல்லது நபர்கள் கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து சிறுமியை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தொலைபேசி இலக்கத்துக்கு தெரிவித்தனர். குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுமியை மீட்டு குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து ஆரோக்கிய நிலையை உறுதிப்படுத்திய பின்னர் பெற்றோரிடம் கையளித்தனர். கடத்தலுக்கான காரணம் உடனடியாக தெரியவராதநிலையில் நேற்று மாலை 6 மணியாகும்போது சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டிருக்க வில்லை.
பெற்றோரின் காத்திருப்பும் 2 கோடி பேரின் பிரார்த் தனைகளும் வீண்போகவில்லை. சிறுமி தமாரா கேஷனி மீண்டும் குடும்பத்துடன் சங்கமித்துக் கொண்டார்.
எம்.எப்.எம்.பஸீர்
சிறுமி கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது: புதையல் தோண்டுவதற்கு நர பலி கொடுப்பதற்காக கடத்தப்பட்டாரா? (படங்கள்)
14-09-20104
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட நாலரை வயது சிறுமியான தமாரா கேஷனியின் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித் தார்.
நேற்று பிற்பகல் 1மணியளவில் இரிபிட்டிய, பீகம என்ற இடத்தில் பிரதான சந்தேக நபர் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது குற்றப்புலனாய்வினர் சந்தேக நபரை தீவிர விசாரணைக்குட்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித் தார். கடத்தப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டதுடன் ஒரு பெண் உட்பட இருவர் கைது
செய்யப்பட்டனர். இந்த நிலையிலேயே நேற்று பிற்பகல் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, இதுவரை இக் கடத்தல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் தாயும் இரு மகன்மார்களும் என்பது குறிப்பிடத்தக்கது.
குருநாகல் அபகொலவெல பிரதேசத்தில் கடத்தப்பட்ட நாலரை வயது சிறுமியான தமாரா கேஷனி பண்டார விஜயகோன் கடத்தல் விவகாரமானது பிரதான சந்தேக நபரது சகோதரர் மூலமே கசிந்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் சிறுமி தமாரா கேஷனி கடத்தப்பட்டார். இந்த சம்பவம் குருநாகல் பகுதி எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்தச் சிறுமி குருநாகல், இப்பாகமுவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடபுடையதாக சந்தேகிக்கப்படும் ஆணொருவரையும் பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு பிரதான சந்தேக நபரை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உறவினர்களே இந்த சிறுமியை கடத்தியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. குறித்த சிறுமி எதற்காக கடத்தப்பட்டாரென்பது இதுவரையிலும் கண்டறியப்படாத போதிலும் புதையல் தோன்றுவதற்கு நர பலி கொடுப்பதற்காகவே அச்சிறுமி கடத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
சிறுமியை கடத்தியவர்கள் முதலில் அச்சிறுமியின் தலைமயிரை வெட்டியுள்ளனர். அதன் பின்னர் சாப்பிடுவதற்கு பாற்சோறும் கொடுத்து சந்தேக நபரின் வீட்டில் ஒரு பகுதியில் தங்க வைத்துள்ளனர்.
பிரதான சந்தேக நபரது சகோதரரான விக்கிரமசிங்க என்பவர் நேற்று முன்தினம் மாலை கும்புகெடே பிரதேசத்திலுள்ள பலசரக்கு கடையொன்றுக்குச் சென்றுள்ளார். அக்கடையில் உரிமையாளரான நிஹால் ஜயசூரிய என்பவரிடம் தனது சகோதரர் ஒரு சிறுமியை கொண்டுவந்துள்ளதாகவும் அதனால் தாம் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த கடையின் உரிமையாளரான சமிந்த ஜயசூரிய உடனடியாக அச்சம்பவம் பற்றிய தகவலை கிராம சேவகருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் அவருடன் இலக்கம் 271 கும்புகெடே பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டுக்கு அவர்கள் சென்றுள்ளனர். சந்தேக நபரது சகோதரரான விக்கிரமசிங்கவும் அவர்களுடன் சென்றுள்ளார்.
விக்கிரமசிங்க கூறியது போன்று அச்சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள அவரது தாயாரின் வீட்டின் பிரதான அறையில் கட்டிலின் கீழ் காட்போட் துண்டுகளை போட்டு சிறுமி தங்கவைத்திருந்த இடத்தை காணக் கூடியதாக இருந்துள்ளது.
குறித்த சிறுமி தான் கடத்தப்பட்டவர் என் அடையாளம் கண்டதும் அதுபற்றி உடனடியாக வெல்லவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் அநுர குணரத்னவுக்கு தெரியபடுத்தியுள்ளனர். அதனடிப்படையில் அவ்விடத்துக்கு விரைந்த பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழு அச்சிறுமியை மீட்டுள்ளது.
சிறுமியை கடத்தியவர்கள் முதலில் தலைமயிரை வெட்டியதாகவும் பின்னர் தனக்கு பாற்சோறு கொடுத்ததாகவும் சிறுமி தமாரா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சிறுமியை இளையபெரும ஆராச்சிலாகே காமினி என்பவரே கடத்தியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர் கடத்தல் சம்பவம் பற்றி கடை உரிமையாளருக்கு தெரிவித்த விக்கிரமசிங்கவின் சகோதரரும் ரணசிங்க ஹாமிலாகே குணவதி என்பவருடைய மகளுமாவார்.
கடத்தப்பட்ட சிறுமியை தங்க வைத்திருந்த வீட்டிலிருந்து 55 வயதுடைய குணவதி என்பவரையும் விக்கிரமசிங்க என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த சமயம் பிரதான சந்தேக நபரான காமினி என்பவர் அப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். இவ்வாறான நிலையிலேயே அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதான சந்தேக நபரது தாயான குணவதி பொலிஸாருக்கு வாக்குமூலமளிக்கையில், இன்று (12) அதிகாலை தனது மகனான காமினி ஒரு சிறுமியை அழைத்து வந்ததாகவும் அந்த சிறுமியை கண்டவுடன் தனக்கு கவலையாகயிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு எதற்காக அச்சிறுமியை அழைத்து வந்தாய் என கேட்ட போது மகன் அதற்கு பதிலேதும் கூறவி்ல்லை எனவும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
அதனையடுத்தே அச்சிறுமிக்கு பாற்சோறு சமைத்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபரான காமினி என்பவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிடும் பொலிஸார், குறித்த சந்தேக நபருக்கு யாராவது வழங்கிய ஒப்பந்த அடிப்படையில் இச்சிறுமியை கடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
இச்சிறுமி புதையல் தோண்டுவதற்கு நர பலி கொடுப்பதற்காக கடத்தப்பட்டாரா? என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு இந்த சம்பவத்தின் பின்னணியினை கண்டறிவதற்காக பொலிஸ் புலனாய்வு பிரிவு அடங்கலாக ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
சிறுமி தமாரா கேஷனி புதையல் தோண்டுவதற்கு நர பலி கொடுப்பதற்காக கடத்தப்பட்டாரா?