சேருதலும், பிரிதலும் என்றும் சிக்கலானவை. மனிதர்களைப் பொறுத்தவரையில் பிரிந்தவர்கள் சேர்வது சந்தோஷமானது. சேர்ந்தவர்கள் பிரிவது துயரம் தரும் விடயம்.
இதனை நாடுகளுடன் பொறுத்திப் பார்க்க முடியாது. மனிதர்களின் உறவும் பிரிவும் பெரும்பாலும் உணர்வுகள் சம்பந்தப்பட்டவை. நாடுகளைப் பொறுத்த வரையில், அது உணர்வுகளைத் தாண்டிய பல விடயங்களுடன் தொடர்புடையதாகும்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் சேர்ந்த இரு சாம்ராஜ்ஜியங்கள். அவை தொடர்ந்தும் சேர்ந்திருக்க வேண்டுமா பிரிந்து செல்ல வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய தருணத்தில் நிற்கிறோம்.
இதிலொன்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சாம்ராஜ்யம். மற்றையது ஸ்கொட்லாந்து சாம்ராஜ்யம். அவை 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உறவு கொண்டன. 1703ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முறையாக ஒன்று சேர்ந்தன.
இந்தத் திருமணம் பெரிய பிரித்தானிய இராஜ்ஜியம் என்ற குடும்பம் உருவாக வழிவகுத்தது. பின்னாட்களில் அயர்லாந்தும் இணைந்து கொண்டதால், இந்தக் குடும்பம் பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்து ஐக்கிய இராஜ்ஜியம் என்று மாறியது.
பின்னாட்களில் குடும்பத்தில் பல பிரச்சினைகள். குடும்பத்திற்குள் இழைக்கப்பட்ட கொடுமையை சகிக்க முடியாமல், அயர்லாந்தின் ஒரு பகுதி விலகிச் சென்றது. அதனைத் தொடர்ந்து குடும்பத்தின் கட்டமைப்பும் பெயரும் மாறியது.
இன்று ஐக்கிய இராஜ்ஜியம் என்று பொதுவாக அழைக்கப்படும் குடும்பத்தில், பெரிய பிரித்தானியாவும், வட-அயர்லாந்தும் எஞ்சியுள்ளன. பெரிய பிரித் தானியா என்றால், இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டமைப்பு.
அயர்லாந்தை அடுத்து ஸ்கொட்லாந்தின் எண்ணத்திலும் மாற்றம் ஏற்பட்டது. குடும்பத்துடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா, தனியாக பிரிந்து செல்ல வேண்டுமா என்ற கேள்வி.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு, ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஒப்புதலோடு ஸ்கொட்லாந்து மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி தமது தலைவிதியைத் தீர்மானிக்கிறார்கள்.
அன்றைய தினம், ‘ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக மாற வேண்டுமா?’ என்ற கேள்வியுடன் கூடிய கருத்துக் கணிப்பு நடைபெறும். வாக்காளர்கள் ஆம் என்று வாக்களிக்கலாம். அல்லது இல்லையென வாக்களிக்க முடியும்.
மக்களின் விருப்பத்தை நாடி பிடித்தறிய விரும்பும் சில அமைப்புக்கள், ஆமென்ற வாக்குகள் அதிகம் கிடைக்கும் என்று கூறுகின்றன. இல்லையென்ற வாக்குகள் தான் அதிகமென மற்றைய அமைப்புக்கள் ஆரூடம் சொல்கின்றன.
ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை வலியுறுத்தும் அமைப்புக்கள் ‘Yes Scotland’ என்ற வாசகத்தின் கீழான குடையில் அணிதிரண்டு, தாம் பிரிந்து செல்வதால் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பட்டியலிட்டு வருகின்றன.
ஐக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி பேசும் அமைப்புக்களோ, ‘Better Together’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என குரல் கொடுத்து வருகின்றன. பிரிந்து சென்றால் பிரச்சினை எனவும் வாதிட்டு வருகின்றன.
இதில் எந்தத் தரப்பின் வாதம் நியாயமானது என்பதைத் தீர்மானிப்பது கடினமான விடயம். இதனை அறிய வேண்டுமானால், இவை எதற்காக சேர்ந்தன என்பதைக் கண்டறிந்து, பிரிந்தால் என்ன நடக்கும் என்பதை அனுமானிக்க வேண்டியது அவசியம்.
ஸ்கொட்லாந்து மக்கள் தனித்துவமானவர்கள். அந்த மக்களுக்கென தனியான மொழியும், கலாசாரமும் உண்டு. சூழ்நிலையின் நிர்ப்பந்தம் காரணமாக இங்கிலாந்துடன் இணைய நேர்ந்தது என்பது ஸ்கொட்லாந்து தேசியவாதிகளின் வாதம்.
ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலம் தொட்டு, ஆங்கிலேயர்களுக்கும் ஸ்கொட்ஷ் மக்களுக்கும் அரசியல் பகை. ஆங்கிலேயர்கள் பல தடவைகள் ஸ்கொட்லாந்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
இரு தரப்புக்களையும் ஒன்றிணைய வைத்தது பொருளாதாரம் தானென்பது வெளிப்படையான விடயம். ஆனால், இந்த விடயத்தில் ஸ்கொட்லாந்து தேசியவாதிகளும், இங்கிலாந்தின் பழமைவாதிகளும் முன்வைக்கும் வாதப்பிரதிவாதங்கள் வேறானவை.
தமது நாட்டிற்குள் வடக்கில் ‘ஒரு அடங்காப்பிடாரி’ தேசம் இருப்பதை விரும்பாத இங்கிலாந்து ஆட்சியாளர்கள், பணத்தாசை பிடித்த சிலரைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கொட்லாந்தை விலைக்கு வாங்கியதாக தேசியவாதிகள் சாடுகிறார்கள்.
தேசியவாத இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படும் கவிஞர் ரொபர்ட் பேர்ன்ஸ் எழுதிய கவிதை முக்கியமானது. அவர் ஆங்கிலேயர்களின் தங்கத்திற்காக நாம் விலைக்கு வாங்கப்பட்டு பின்னர் விற்கப்பட்டோம், என்பார்.
இங்கிலாந்தின் பழமைவாதிகள், டேரியன் திட்டத்திற்கு கிடைத்த தோல்வியால் ஸ்கொட்லாந்து தம்முடன் இணைய விரும்பியதாக வாதிடுவார்கள். டேரியன் திட்டம் பணத்தாசையின் விளைவு என்பது அவர்களின் வாதம்.
இங்கிலாந்தின் காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட பிராந்தியங்களில் கிழக்கிந்திய கம்பனிக்கு கிடைத்த பொருளாதார வெற்றியைப் பின்பற்றி, தற்போதைய பனாமாவில் கலிடோனியா என்ற காலனியை ஏற்படுத்த ஸ்கொட்லாந்து முனைந்தது.
இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த தோல்வியால் பெரும் நஷ்டம் விளைந்து திண்டாடிய சமயத்தில், பொருளாதார நலன் கருதி ஸ்கொட்லாந்து ஆட்சியாளர்கள் பிரிட்டனுடன் இணையத் தீர்மானித்தார்கள் என்பது இங்கிலாந்து பழமைவாதிகளின் வாதம்.
கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்துடன் இணைந்திருந்தபோதிலும், ஸ்கொட்லாந்து மக்கள் மத்தியில் தேசியவாத சிந்தனை மழுங்கி விடவில்லை. காலத்திற்குக் காலம் அது தலைதூக்கிக் கொண்டு தானிருந்தது.
இதற்குப் பல காரணங்கள் இருந்தன. பாரம்பரிய பகைமைக்கு அப்பால் இங்கிலாந்து ஆட்சியாளர்களின் புறக்கணிப்பையும் மறந்து விட முடியாது. அவர்கள் தம்மை இரண்டாந்தர பிரஜைகளாக நடத்துகிறார்களென ஸ்கொட்டிஷ் மக்கள் கருதினார்கள்.
குறிப்பாக, தற்போதைய பிரிட்டன் பிரதமர் டேவின் கமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் ஸ்கொட்லாந்து தேசியவாதிகளுக்கும் ஏழாம் பொருத்தம். பிரிட்டன் பழமைவாதிகள் ஏதோவொரு விதத்தில் பழிவாங்கிக் கொண்டே இருப்பார்கள்.
1989ஆம் ஆண்டு கால தேர்தல் வரியை ஞாபகப்படுத்தலாம். இதன் கீழ், சகல பிரஜைகளும் வரி செலுத்த வேண்டும். எவரேனும் வரியை செலுத்தாவிட்டால் அவரது வாக்குரிமை பறிக்கப்படும்.
இந்த வரி முதலில் ஸ்கொட்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு வருடத்தின் பின்னர் தான் ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஏனைய பாகங்களுக்கு விஸ்தரிக் கப்பட்டது. இந்த சமயத்தில் ஸ்கொட்லாந்தில் போராட்டங்கள் வெடித்ததை ஞாபகப்படுத்தலாம்.
ஸ்கொட்லாந்தின் தேசியவாத சிந்தனை எந்தவொரு தருணத்திலும் ஆயுதப் போராட்டமாக பரிணமிக்கவில்லை. ஸ்கொட்டிஷ் மக்களுக்கு ஐ.ஆர்.ஏ போன்றதொரு அரசியல் தலைமைத்துவம் இல்லாதிருந்தமை இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
ஸ்கொட்லாந்தின் சுதந்திர பிரசார இயக்கத்தை முன்னின்று வழிநடத்தும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி (எஸ்.என்.பி) 1934ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். அந்தக் கட்சி சமீபத்தில் தான் செல்வாக்கு செலுத்தக்கூடிய அரசியல் சக்தியாக மாறியது.
1999ஆம் ஆண்டில் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கம் அதிகாரப்பகிர்வின் ஊடாக ஸ்கொட்லாந்தில் நாடாளுமன்றத்தை ஸ்தாபிக்க வாய்ப்பளித்தது உண்மையே. ஆனால், எஸ்.என்.பியின் கை மேலோங்குவதைத் தடுக்க பல தகிடுதத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்கொட்டிஷ் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் எஸ்.என்.பி அறுதிப் பெரும்பான்மை பெற முடியாதவாறு, தொகுதிவாரி தேர்தல் முறையுடன் கூடிய தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டதை உதாரணமாகக் கூற முடியும்.
எவ்வாறேனும், 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில், எஸ்.என்.பி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்தது. அதன் மூலம், ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான அரசியல் போராட்டம் உத்வேகம் பெற்றது எனலாம்.
ஸ்கொட்லாந்தின் சுதந்திர வேட்கை எவ்வளவு நியாயமானது என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அதனை இழப்பதால் இங்கிலாந்திற்கு என்ன நஷ்டம் என்ற கேள்வியை அவதானிக்கலாம். இதனை இரு கோணங்களில் ஆராய வேண்டும்.
பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயரைப் பொறுத்தவரையில், ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் என்பது பெரும் அரசியல் தோல்வியாகும். ஐக்கிய இராஜ்ஜியம் ஒரே குடையின் கீழ் திகழ வேண்டும் என்பது அவரது கட்சியின் கோட்பாடாகத் திகழ்கிறது.
அவரது கன்சர்வேட்டிவ் கட்சியின் உண்மையான பெயர் கன்சர்வேட்டிவ் மற்றும் யூனியன் கட்சி என்பதாகும். இங்கு யூனியன் என்பது ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள சகல பிராந்தியங்களும் ஒரே குடைக்குள் இருப்பதைக் குறிக்கிறது.
பிரிட்டனின் நாடாளுமன்றம் என்று பார்க்கையில், ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் எதிர்த்தரப்பில் அமைந்துள்ள தொழிற்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
இந்த நாடாளுமன்றத்தில் ஸ்கொட்லாந்துக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் தொழிற்கட்சிக்கு 41 ஆசனங்கள் உள்ளன. கன்சர்வேட்டிவ் கட்சி ஒரேயொரு ஆசனத்தையே கொண்டுள்ளது.
ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெற்று சென்று விட்டால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஸ்கொட்லாந்துக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் நீக்கப்படும். அது தொழில்கட்சியின் வெற்றி வாய்ப்பை முற்று முழுதாக இல்லாதொழித்து விடும்.
தமக்கிடையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், தொழிற்கட்சி தலைவர்களும், டோனி பிளேயரும் ஸ்கொட்லாந்து சென்று, உருக்கமான தொனியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதற்கு இதுவே காரணம்.
இது தவிர ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் என்பது இங்கிலாந்து மக்களின் கௌரவத்தைப் பாதிக்கும் விடயமாகும். இது பிரிட்டனின் தன்னம்பிக்கையை சீர்குலைத்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரிட்டனின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடும்.
கருத்துக்கணிப்பின் பெறுபேறுகளை எதிர்வுகூருவது கடினமானதென மேற்குலக ஊடகங்கள் அறிவித்து வருகின்றன. ஸ்கொட்லாந்து மக்கள் ஆமென வாக்களித்தாலோ, இல்லையென வாக்களித்தாலோ அடுத்த கட்டம் இலகுவானதாக இருக்கப் போவதில்லை.
ஆமென்று வாக்களித்தால் சுதந்திரத்தை நோக்கி நகரும் நடைமுறையில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இல்லையென்று வாக்களித்தால், ஸ்கொட்லாந்துக்கு கூடு தல் சுயாட்சியைப் பெற வேண்டிய சவால் உள்ளது.
வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், கருத்துக் கணிப்பின் பெறுபேறுகளின் அடிப்படையில் அத்தகைய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை