கடந்த இரு வாரங்களாக காணாமல் போயிருந்த பசறை கோணகலை,தமிழ் மகாவித்தியாலயத்தின் ஆசிரியை அ.சரஸ்வதியின் சடலம் மீதும்பிட்டிய பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரான பூசாரியின் வீட்டுக்கு முன்னால் இருந்து நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
பதுளை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி மகேஷிகா பிரியதர்ஷினியின் உத்தரவுக்கு அமைய அவரும்,பதுளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளின்
முன்னிலையில் இந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த புதைக் குழியானது சந்தேகநபரான பூசாரியின் வாக்கு மூலத்தை மையப்படுத்தி நீதிவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய தோண்டப்பட்ட போது அதனை பார்வையிட மீதும் பிட்டிய பிரதேசத்தில் சுமார் 3000 இக்கும் அதிகமான மக்கள் ஸ்தலத்தில் ஒன்றுகூடினர்.
ஆசிரியையின் சடலமானது புதைக் குழிக்குள் இருந்து பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கூடிய மக்கள் , சந்தேக நபரான பூசகரால் பூஜைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மீதும்பிட்டி வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பொதுமக்கள் குறித்த வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தியதுடன் அதனை முற்றாக சேதமடையச் செய்தனர். எனினும் குறித்த கல்வீச்சுக்களையும் தாக்குதல்களையும் பொலிஸார் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதேவேளை சாந்தி பரிக்காரம் ஒன்றினை மேற்கொள்ள குறித்த ஆசிரியை பூசகரால் பூஜை நடத்தப்பட்டுவரும் மீதும்பிட்டி வீட்டுக்கு சென்றபோதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ரீ.எம்.ரத்னாயக்கவின் ஆலோசனைகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண கேசரிக்கு தெரிவித்தார்.
இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை ஆகியவற்றை வைத்து விசாரணைகள் புதிய திருப்பத்தை அடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக சென்ற ஆசிரியை காணாமல் போயுள்ளதாக ஆசிரியையான அ.சரஸ்வதியின் கணவரினால் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இதன் படி அது தொடர்பான விசாரணைகள் ஊவாவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, பதுளைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன கலப்பதி, உதவி பொலிஸ் அத்தியட்சர் ஏ.டி.பிரேமதிலக ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.எம்.ரத்னாயக்கவின் ஆலோச்சனைகளுக்கு அமைய உப பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ எம். தயானத்த உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் காணாமல் போன ஆசிரியை அ.சரஸ்வதி காணாமல் போவதற்கு முன்னர் இறுதியாக மீதும்பிட்டிய பிரதேசத்தில் நாக பூஜைகளை நடத்தும் பூசகர் ஒருவருடன் தொலைபேசியில் கதைத்துள்ளமை நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட அவ்வாசிரியையின் தொலைபேசி இலக்க ஆய்வுகளிலிருந்து தெரியவந்தது.
இந்த நிலையில் குறித்த பூசகரை பொலிஸ் நிலையம் வருமாறும் வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்யவேண்டும், எனவும் பசறை பொலிஸார் அந்த பூசகருக்கு அறிவித்தனர். இதனை அடுத்து பொலிஸ் நிலையம் வருவதாக குறிப்பிட்ட பூசகர் அங்கு வரும் வழியில் பஸ் வண்டி ஒன்றின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனை அடுத்து அவரை உடனடியாக பதுளை வைத்தியசாலியில் அனுமதித்த பொலிஸார் அவரை கைது செய்தனர். பூசகரிடம் வைத்தியசாலையில் வைத்து பொலிஸார் விஷேட வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்தனர்.
அந்த வாக்கு மூலத்தில் ஆசிரியையை தானே கொன்றதாகவும் அவரை மீதும்பிட்டிய வீட்டின் முன்னால் குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் பூசகர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து விடயம் தொடர்பில் பதுளை நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸாரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு சென்ற நீதிவான் தர்ஷிகா பிரியதர்ஷினி பூசகரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரcவு பிறப்பித்ததை அடுத்து சிறை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இதன் பின்னரே அந்த புதை குழியை சனிக்கிழமை தோண்டுமாறு நீதிவான் கடந்த வெள்ளியன்று உத்தரவு பிறப்பித்தார். எனினும் சட்ட வைத்திய அதிகாரியின் சேவையை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அது நேற்றுவரை ஒத்திவைக்கப்பட்டு நேற்று அந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.
பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளின் பலனாக ஆசிரியை காணாமல் போனதாக கூறப்படும் கடந்த முதலாம் திகதி ஆசிரியை அ.சரஸ்வதி பாடசாலை முடிந்ததும் பசறை நகருக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது.
இது தொடர்பில் மாணவர் ஒருவரும் ஆசிரியை ஒருவரும் பொலிஸாருக்கு சாட்சியமளித்துள்ளனர். பின்னரே அவர் மீதும்பிட்டிய பகுதியில் உள்ள பூசகரின் பூஜைமையமான வீட்டுக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பில் பூசகரின் தாய் பொலிஸாருக்கு சாட்சியம் வழங்கியுள்ளார். இதனை அடுத்தே கொலை இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆசிரியை அணிந்திருந்த தாலி, மாலை, வலையல் உள்ளிட்ட நகைகள் மற்றும் பணத்துக்காக இந்த கொலையினை பூசகர் மேற்கொண்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபரான பூசகர் பசறை 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள தந்து வீட்டிலேயே மனைவி, பிள்ளையுடன் வாழ்ந்து வந்துள்ளமையும் மீதும்பிட்டியவில் பூஜைமையமாகவே அந்த வீட்டினை பயன்படுத்தியுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பூசகர் வசித்த பசறை 10 ஆம் கட்டை பகுதி வீட்டுக்கு அருகிலேயே ஆசிரியை சரஸ்வதியும் வசித்து வந்துள்ள நிலையில் பூசகரின் பிள்ளையையும் அவரே பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந் நிலையில் பூசகரை முன்னரேயே நன்கு அறிந்திருந்த ஆசிரியை தனது ஆறு வயது பிள்ளையின் நோய் ஒன்று தொடர்பில் சாந்தி பரிகாரம் ஒன்றுக்காகவே குறித்த தினம் மீதும்பிட்டிக்கு சென்றுள்ளமையும் அதன் போதே கொலை இடம்பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதங்கள், ஆசிரியையினுடையது என சந்தேகிக்கப்படும் கைப்பை, கையடக்க தொலைபேசி உள்ளிட்டவையும் மீதும்பிட்டிய பூஜை வீட்டிலிருந்து பொலிஸாரால் ஏற்கனவே மீட்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.