டெல்லி: இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று உள்ளவர்கள், அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க தொலைக்காட்சி சேனலான சிஎன்என்-னுக்கு அளித்த பேட்டியில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு மோடி பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டி ஞாயிற்றுக்கிழமை சிஎன்என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதன் சில பகுதிகளை இன்று சிஎன்என் வெளியிட்டுள்ளது.
சிஎன்என் செய்தியாளர் பரீத் சகாரியாவின் கேள்விகளுக்கு பதிலளித்து மோடி கூறியுள்ளதாவது: அல்கொய்தா அமைப்பினர் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அல்கொய்தா தாளத்துக்கு, இந்திய முஸ்லிம்கள் ஆடுவார்கள் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் மாயையில் உள்ளனர் என்று அர்த்தம்.
இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள், இந்தியாவுக்காகத்தான் சாவார்கள். அவர்களின் தேசப்பற்று சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது என்று மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள 170 மில்லியன் முஸ்லிம்களில் அல்கொய்தாவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் கிடையாதா என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி “உலகில் மனிதாபிமானம் இருக்க வேண்டுமா இல்லையா என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.
மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோர் எல்லோரும் ஓரணியின் நிற்க வேண்டிய தருணம் இது. உலகில் தற்போது எழுந்துள்ள சிக்கல் எந்த ஒரு நாட்டுக்கும் அல்லது இனத்துக்கும் எதிரானது கிடையாது, மனிதாபிமானத்துக்கு எதிரானது.
எனவே நாங்கள் மனிதாபிமானத்துக்கும், மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கும் நடுவே நடக்கும் போராட்டமாகத்தான் இதை பார்க்கிறோம்” என்று மோடி பதிலளித்துள்ளார்.
இம்மாத இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து கருத்து தெரிவித்து மோடி கூறுகையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் கலாச்சாரம் மற்றும் வராலாற்று அடிப்படையில் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.
இந்தியா- அமெரிக்கா உறவில் சில ஏற்ற இறக்கங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 21ம் நூற்றாண்டில் இந்திய அமெரிக்க உறவில் புதிய வடிவம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.