ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.58% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில் 31 உள்ளூராட்சிப் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன.
இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 1,914,187 பேரும், ஸ்காட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,539,920 பேரும் வாக்களித்திருந்தனர். இரு தரப்பாருக்கும் இடையில் 3,74,267 வாக்குகள் வித்தியாசம் இருக்கின்றன.
இன்னமும் ஹைலாண்ட் உள்ளூராட்சிப்பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அங்குள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 190,778 என்பதால் அந்த பிரதேசத்தின் முடிவு ஸ்காட்லாந்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் முடிவை இனிமேல் பெரிய அளவில் மாற்றியமைக்கவோ, பாதிக்கவோ வாய்ப்பில்லை.
காரணம் ஸ்காட்லாந்த் பிரிந்து செல்ல வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் வாக்களித்திருக்கும் இருதரப்பாருக்கும் இடையிலான இடைவெளி ஹைலாண்ட் உள்ளூராட்சிப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததைவிட, பிரிவினையை எதிர்ப்பவர்களின் வாக்கு சதவீதம் சுமார் 3 சதவீதம் அதிகரித்திருப்பதை இன்று வெளியான இறுதிமுடிவுகள் காட்டுகின்றன.
நேற்று வியாழக்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் 84.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஸ்காட்லாந்தின் வாக்குப்பதிவு வரலாற்றில் மிக அதிக சதவீத வாக்குப்பதிவாக கருதப்படும் இந்த கருத்தெடுப்பில் 3,261 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.
கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னர் வெளியான யுகவ் நிறுவன எக்ஸிட் வாக்கெடுப்பு ஒன்று பிரிந்து போகவேண்டாம் என்ற தரப்புக்கு 54 சதவீத ஆதரவும், சுதந்திரம் கோரும் தரப்புக்கு 46 சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறியது.
ஸ்காட்லாந்து பிரிவினை: தனது தோல்வியை ஏற்றுக்கொண்டார் அலெக்ஸ் சால்மண்ட்
பிரிட்டனிடமிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்பதற்கான தனது முயற்சிக்கு நடந்து முடிந்த பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வி கிடைத்திருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், ஸ்காட்லாந்தின் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த சுமார் 16 லட்சம் வாக்காளர்கள், எதிர்காலத்தில் ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கான வலுவான அடித்தளமாக அமைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்காட்லாந்த் வாக்காளர்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தால் ஸ்காட்லாந்துக்கு மேலதிகமாக கூடுதல் அதிகாரங்களை அளிப்போம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்திருக்கும் பிரிட்டனின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.