ஆயிரக்கணக்கான காதல் “டூயட்” பாட்டுக்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்க்கையிலும் காதல் இடம் பெற்றது. தன் தூரத்து உறவுப்பெண்ணான சாவித்திரியை அவர் காதலித்தார். சாவித்திரியும் அவரை விரும்பினார். இருவருடைய காதலும் நாளுக்கு நாள் வளர்ந்தது.
இந்தக் காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.
திருமணத்துக்குத் தடையாக இருந்தது, அந்தஸ்து அல்ல. இருவருடைய கோத்திரமும் ஒன்றாக இருந்தது. ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது ஐதீகம்.
தூய்மையான காதலுக்கு இந்த பழைய சம்பிரதாயங்கள் தடை போடுவதை பாலசுப்பிரமணியம் விரும்பவில்லை. சாவித்திரியை மணப்பதில் உறுதியோடு இருந்தார்.
இதைத் தெரிந்து கொண்ட சாவித்திரியின் பெற்றோர், அவரை பெங்களூருக்கு அழைத்துச்சென்று, சாவித்திரியின் அண்ணன் வீட்டில் “சிறை” வைத்து விட்டனர்.
காதலியைப் பிரிந்த பாலு, “தேவதாஸ்” ஆனார்! தாடி வளர்த்தார்; சோகமான பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். நண்பர்கள் எவ்வளவோ ஆறுதல் கூறியும், அவர் சோகத்தில் இருந்து மீளமுடியவில்லை.
திடீரென்று ஒரு நாள், காதலியை மீட்டு திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.
ஒரு நண்பரிடம் கார் வாங்கிக் கொண்டு, பெங்களூருக்கு சென்றார். பெங்களூரிர் ஒரு ஓட்டலில் தங்கிக்கொண்டு, ஒரு ஆள் மூலம் சாவித்திரிக்குக் கடிதம் கொடுத்து அனுப்பினார்.
கடிதம் கிடைத்ததும், ஓட்டலுக்குப் போன் செய்து பாலுவுடன் பேசினார், சாவித்திரி. “காலையில் வீட்டு வாசலில் தயாராக இரு. நான் காரில் வந்து அழைத்துச் செல்கிறேன்” என்று பாலு கூற, சாவித்திரி “சரி” என்றார்.
அதன்படியே, காரில் சென்று சாவித்திரியை அழைத்துக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார்.
சென்னையை நெருங்கியபோது, மனதில் ஒரு பயம் வந்தது. “சென்னையில் தங்கினால், சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். எனவே, பத்திரமான வேறு இடத்துக்குப் போய்விட வேண்டும்” என்று பாலு நினைத்தார்.
அதன்படி, சென்டிரலில் இருந்து, ரெயில் மூலம் விசாகப்பட்டினத்துக்கு பாலுவும், சாவித்திரியும் சென்றனர். துணைக்கு பாலுவின் நண்பர்கள் உடன் சென்றார்கள்.
விசாகப்பட்டினம் அருகே, சிம்மாசனம் என்ற ஊர் இருக்கிறது. அங்குள்ள நரசிம்மசுவாமி கோவிலில் பாலுவும், சாவித்திரியும் திருமணம் செய்து கொண்டனர்.
2 நாட்களுக்குப்பிறகு சென்னை திரும்பிய பாலுவும், சாவித்திரியும், பெற்றோர் வீட்டுக்குச் சென்றால் பிரச்சினைதான் என்பதை உணர்ந்து, ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒரு பாடலை, பாலு பதிவு செய்ய வேண்டி இருந்தது. யாருக்கும் தெரியாதபடி, டாக்சியில் ரிக்கார்டிங் தியேட்டருக்கு சென்று பாடலைப் பாடிவிட்டு வந்தார்.
இது, பாலுவின் குருவான கோதண்டபாணிக்குத் தெரிந்தது. பாலுவும், சாவித்திரியும் என்ன ஆனார்கள் என்று இருவரின் பெற்றோர்களும் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது அவருக்குத் தெரியும். மணமக்களையும், பெற்றோரையும் ஒன்று சேர்த்து வைக்க முடிவு செய்தார்.
பெற்றோர்களிடம் நல்லவிதமாக பேசி, அவர்களை பாலு தங்கியிருந்த ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.
படபடவென்று கதவு தட்டப்படும் ஓசை கேட்டு, பாலு கதவைத் திறந்தார். சாவித்திரியின் பெற்றோரும், பாலுவின் தந்தையும், கோதண்டபாணியும் நின்று கொண்டிருந்தனர்.
சாவித்திரியைக் கண்டதும், அவருடைய தாயார் கதறி அழுதுகொண்டே ஓடிச்சென்று மகளை கட்டித் தழுவிக்கொண்டார்.
பாலுவுக்கும், சாவித்திரிக்கும் திருமணம் ஆகிவிட்டதால், இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்பதை உணர்ந்து கொண்டு, இருவரையும் அழைத்துச் சென்றனர். எனினும் முழு மனதுடன் அவர்களை அங்கீகரிக்கவில்லை.
பாலுவும், சாவித்திரியும் தனிக்குடித்தனம் சென்றனர். உறவினர்கள் உதவி இல்லையென்றாலும், இல்லறத்தை நல்லறமாக நடத்தினர்.
சாவித்திரிக்கு பெண் குழந்தை பிறந்தது. இசைப் பற்று மிக்கவரான பாலு, அக்குழந்தைக்கு “பல்லவி” என்று பெயர் சூட்டினார்.
இசையமைப்பாளராக மாறிய ஆண்ட்ரியா
நடிகை, பாடகி என தமிழ் சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் பாடகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையானார்.
அதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றார்.
தற்போது இவர் ராம் இயக்கத்தில் நடித்துவரும் தரமணி படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவ்வாறு பல அவதாரங்கள் எடுத்துள்ள ஆண்ட்ரியா, தற்போது நடுவராகவும் புதிய அவதாரம் எடுக்கிறார். மலையாள டிவி ஒன்றில் நடக்கும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்கவிருக்கிறார் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த அரண்மனை படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இவர் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’, ‘உத்தமவில்லன்’ ஆகிய படங்களும் தனக்கு பெரும் புகழை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஆண்ட்ரியா.
களைகட்டும் எமி – த்ரிஷா உறவு…
‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தில் இவர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் எமி வெளிநாட்டு பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படத்திலும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்திருந்தார்.
தற்போது எமி ஜாக்சன், சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘ஐ’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சமீபத்தில் எமி ஜாக்சன் அளித்த பேட்டியில், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் அவருடைய நடிப்பு தான் எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது என்று கூறியிருந்தார்.
அதற்கு திரிஷா டுவிட்டரில், பேட்டியில் என்னைப் பற்றி பேசியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் பெரியளவில் உருவாகியிருக்கும் ஐ படத்திற்கு வாழ்த்துக்களையும் இப்படத்தில் பார்ப்பதற்கு முற்றிலும் அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.