டெல்லி: தாம்பத்திய உறவுக்கு கணவனோ அல்லது மனைவியோ மறுத்தால் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவருடைய கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவருடைய கணவர், லண்டனில் வசித்து வருகிறார். அவர் மனைவியிடம் விவாகரத்து கோரி, சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அதில், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில், தன் மனைவி தன்னை மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
அதற்கு அப்பெண் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனக்கு குழந்தை பெற விருப்பம் இல்லாததால், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்ததாக கூறி இருந்தார். ஆனால் அதை ஹைகோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. எத்தனையோ கருத்தடை முறைகள் உள்ளன.
நீங்கள் விரும்பினால், அதை பயன்படுத்தி, கர்ப்பத்தை தடுத்து விடலாமே என்று கூறிய நீதிபதிகள், இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தனர். அதை எதிர்த்து, அப்பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அம்மனு, நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டது. சென்னை ஹைகோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதிகள், பெண்ணின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர்.
“கணவனோ அல்லது மனைவியோ, போதிய காரணம் இல்லாமல், ஒருவர் மற்றவருடன் நீண்ட காலமாக தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்து வருவது மனரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும்.
இதன் அடிப்படையில், விவாகரத்து வழங்க முடியும். தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்ததற்கு அந்த பெண் கூறிய காரணத்தை ஏற்க முடியாது.
இருப்பினும், இந்த வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், இருதரப்பின் பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அந்த பெண்ணுக்கு அவருடைய கணவர் ஒரே முறை ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் வழங்குமாறு உத்தரவிடுகிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.