சென்னை: தமிழ் நாடே உங்களை அம்மா என்றழைப்பதில் ஆச்சர்யமில்லை, என்று ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் பாராட்டியுள்ளார்.
ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அர்னால்ட், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக அர்னால்ட் கூறியிருந்தார். இப்போது முதல்வருக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “சென்னை வந்திருந்த போது என்னைச் சந்தித்ததற்கும், நல்ல பாதுகாப்பு கொடுத்ததற்கும் மிக்க நன்றி.
தங்களுடன் அமர்ந்து, தமிழகத்தில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிகள் மற்றும் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசியது அற்புதமான அனுபவம். மகளிருக்காகவும் குழந்தைகளுக்காகவும் தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் மனதைத் தொட்டன.
தமிழ்நாடே உங்களை அம்மா என்றழைப்பதில் எனக்கு ஆச்சர்யமில்லை. தாங்கள் ஏற்படுத்தியுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஒரு அருமையான திட்டம்.
இதுவரை நான் எங்கும் கேள்விப்பட்டதில்லை. மேலும் தூய்மையான, மறுசுழற்சி முறையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தாங்கள் முன்னெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும் 39 சதவீத மின்சாரத்தை காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஆர் 20: பிராந்தியங்களின் சுற்றுச்சூழல் நடவடிக்கை (R20: Region of Climate Action) என்ற அமைப்பைத் தொடங்கினேன்.
எதிர்கால மின்சாரத்தை சுற்றுச் சூழல் மாசுபடா வகையில் உருவாக்க, பல்வேறு நாட்டு மாநில அரசுகளைக் கொண்ட அமைப்பு இது. இதில் 560 மாநிலங்கள் மற்றும் பெரு நகரங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகம் எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த அமைப்பில் சேருமாறு தமிழகத்தை அன்புடன் அழைக்கிறேன். இது தொடர்பாக எனது பணியாளர்கள் தங்கள் சுற்றுச்சூழல் அமைச்சருடன் தொடர்பில் இருப்பார்கள்.
நமது மாநிலங்களின் காற்று வெளியைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, தாங்கள் தமிழகத்திலும், நான் கலிபோர்னியாவிலும் செய்த சாதனைகளைப் பார்த்து மற்றவர்கள் நம் பக்கம் வரவும் இது பெரிதும் உதவும்.
இதன் மூலம் மீண்டும் தங்களைச் சந்தித்தர்ப்பங்கள் அடிக்கடி அமையும். அதை நான் விரும்புகிறேன். தாங்கள் செய்த அனைத்துக்கும் மிக்க நன்றி. -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.