சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் நினைவு நாளான இன்று சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் படைப்பாளிகள் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
1987ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கைகளை இந்தியாவிடம் முன்வைத்து ஈழத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் தியாக தீபம் திலீபன். திலீபனின் 27 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் இன்று உண்ணாவிரதம் இருக்க தமிழ் அமைப்பினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
அதற்கு அனுமதி அளிக்காமல், உண்ணாவிரதத்திற்கும் போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில் இன்று காலை 25 கல்லூரி மாணவர்கள் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள செங்கொடி அரங்கத்திற்கு திரண்டு வந்தனர்.
அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வந்த ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், இயக்குநர்கள் புகழேந்தி தங்கராஜ், கவுதமன், ஓவியர் வீரசந்தானம், தமிழ்தேசக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பட்டுக்கோட்டை ராமசாமி, தமிழர் முன்னேற்றபடை வீரலட்சுமி உள்ளிட்டோரும் உண்ணாவிரதம் இருக்க வந்தனர்.
அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆனால் போலீஸ் காவலில் இருந்தபடியே கைது செய்யப்பட்டோர் தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தினர். ! திருமாவளவன் வீரவணக்கம் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவல்காத்தில் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.