பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
அதன் பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.
இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அதிமுகவினர் கண்ணீர் விட்டு அழுதனர்.
சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து வரவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறும் வரை இந்த சிறையில் தான் ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பர். அது எத்தனை காலம் ஆனாலும்…
ஜெ-க்கு 4 ஆண்டுகள் சிறை: ஜாமீன் பெறுவது எப்படி?
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்தால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்ய வேண்டும், ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு அக்டோபர் 5 வரை தசரா விடுமுறை என்று அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் நீதிபதி வீட்டில் அவசர வழக்கு விசாரிக்கும் நடைமுறையில் இல்லை. தற்போதைய தகவல்படி அக்டோபர் 5&க்கு பிறகு தான் ஜாமீன் மனு விசாரிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்கள் பறிமுதலாகும்
சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த முதல்வர் யார்?
4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அடுத்த முதல்வர் யார் என்பதை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்வர்.