இரத்தினபுரியில் பிரதான பஸ் தரிப்பிடத்தில் பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் சார்ஜன்டை பணி நீக்கம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
‘எனது மகனை கொலை செய்வதாக பொலிஸார் கூறினர்’; களுசூட்டியின் தாய் குற்றச்சாட்டு
28-09-2014
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஹிரான் தர்ஸன எனப்படும் ‘களுசூட்டி’, பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோத்தில் இன்று காலை உயிரிழந்தார்.
மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு இராஜகீ மாவத்தை வீதியில் இன்று காலை 6.05 மணியளவில் சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு 9 மணியளவில் கம்பஹா தேவேலபொல பகுதியில் வைத்து மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்காக டொரிங்டன் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடமபெற்றுள்ளது.
இது தொடர்பில் களுசூட்டியின் தாய் கருத்து வெளியிடுகையில், ‘பொலிஸார் கொலை செய்வதாகவே கூறிக்கொண்டிருந்தனர். பொலிஸார் எனது மகனை கொலை செய்துவிட்டனர். எனக் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலன்னாலை சிங்கபுர பகுதியில் இடம்பெற்ற மூன்று மனித படுகொலைகளுடன் சந்தேகநபருக்கு தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை வெல்லம்பிட்டி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் குறித்த சந்தேகநபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் ஹிரான் தர்ஸன என்றழைக்கப்படும் களுசூட்டி போதைப்பொருள் கடத்தலிலும் தொடர்புபட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.