எமது நாடு பல்லினங்கள், பல மதத்தவர்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கியெறிந்து விட்டு, சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என ஏற்றுக்கொண்டு “இலங்கை” என்ற பெயரையும் இல்லாதொழித்து “சிங்ஹலே” என பெயரிடப்பட வேண்டும் என வலியுறுத்தும் பொதுபலசேனா.
பெளத்தத்தை விடுத்து வேறு எந்த மதத்தையும் நாட்டுக்குள் வியாபிப்பது, அதற்கான திட்டங்களை வகுப்பது அல்லது வெளிநாட்டு தேசிய உதவிகளை பெற்று மதங்களை வளர்ப்பதை தடை செய்ய வேண்டுமென்றும் தெரிவித்தது.
கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் சங்க சம்மேளன மாநாட்டின்போது புதிய “அரசியலமைப்பில்” உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் யோசனைகளை முன்வைத்த போதே அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
அரசியல்வாதிகள் தமது இருப்புக்காக எமது நாடு பல்லினங்கள் பல மதத்தவர்கள் வாழும் நாடு என்றும் சர்வமத அமைப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த மாயை தகர்க்கப்பட வேண்டும்.
சிங்கள பெளத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்வதோடு, ஒரே நாடு, ஒரே இனம், ஒரே சட்டம் என்ற கொள்கை அரச கொள்கையாகவும் பெளத்தம் அரச மதமாகவும் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
வெள்ளைக்காரன் வைத்த “இலங்கை” என்ற பெயரை தூக்கியெறிந்து விட்டு “சிங்ஹலே” என நாட்டின் பெயர் மாற்றப்பட வேண்டும்.
தற்போதைய தேசிய நாட்டில் பிரிவினை வாதத்தை பிரதிபலிக்கின்றது. எனவே தேசியக் கொடி மாற வேண்டும்.1815ஆம் ஆண்டுக்கு முன்பு நாம் உபயோகித்த சிங்கக் கொடியை மீள தேசிய கொடியாக்க வேண்டும்.
நாட்டின் தேசிய தினமாக ”வெசாக் தினத்தை” பிரகடனப்படுத்த வேண்டும்.பெளத்தத்தை விடுத்து ஏனைய மதங்களின் வளர்ச்சிக்காக தேசிய சர்வதேச நிதி வழங்கல் தடை செய்யப்பட வேண்டும்.
ராஜ்ஜியத்தின் மதத் தலைவராக ”சங்கராஜ மகாநாயகரை” நியமித்து அவர் தலைமையில் 50 பேர் அடங்கிய பெளத்த குருமார் குழுவை நியமிக்க வேண்டும்.
இக்குழு ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் குழுவாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.
கிரம விமலஜோதி தேரர் :பொ.ப.சே. தலைவர்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா உட்பட முஸ்லிம் நாடுகளிலிருந்து அகதிகளாக இங்கு வந்து தங்கியிருப்போர் தொடர்பாக ஆராய வேண்டும்.
வீடு வீடாக சோதனைகளை நடத்தி சட்டவிரோதமாக தங்கியுள்ள முஸ்லிம்களை கண்டுபிடிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாட்டுக்குள் ஊடுருவியுள்ள முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாதிகள் நாட்டை அழித்து விடுவார்கள் என்றார்.
அருண்காந்த்
இந்துக்களும் – பெளத்தர்களும் இணைந்து மதமாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.இல்லா விட்டால் எமது மதங்கள் அழிந்து விடும். எனவேதான் நாம் பொதுபலசேனாவுடன் இணைந்தோம்.
மட்டக்களப்பு காரைதீவு விபுலானந்தா சதுக்கம் இந்துக்களிடமிருந்து பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.அங்கு பள்ளிவாசல் அமைக்க திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வடக்கில் ராயப்பு ஜோசப் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றி, மன்னாரில் மறை மாவட்டங்களை உருவாக்கி வருகின்றார் என்றார்.