Site icon ilakkiyainfo

ஜெர்மன் அகதி முகாம்கள் : தனியாரின் சித்திரவதைக் கூடங்கள்

ஜெர்மன் அகதி முகாம்கள் : தனியாரின் சித்திரவதைக் கூடங்கள்

ஜெர்மனியில், அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிகள், பாதுகாவலர்களினால் அடித்து, உதைத்து, சித்திரவதை செய்யப் படுகின்றனர். கெல்ன் (Köln, ஆங்கிலத்தில்: Cologne) நகருக்கு அருகில் உள்ள, பூர்பாஹ் (Burbach) எனும் கிராமத்தில் உள்ள அகதி முகாமில் நடந்த சித்திரவதைகள் தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளன.

ஓர் அல்ஜீரிய அகதியின் தலையை, இரண்டு பாதுகாவலர்கள் காலில் போட்டு மிதிக்கும் காட்சிகள், ஊடகங்களில் காட்டப் பட்டன.

அதன் பின்னர், ஜெர்மன் அகதி முகாம்களில் வாழும் அகதிகள் சித்திரவதை செய்யப் படுவது பற்றிய தகவல்கள், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப் பட்டு வருகின்றன.

இது வரையில், கைத்தொலைபேசியால் எடுத்த வீடியோவும், நிழற்படமும் வெளியாகி உள்ளன. இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதாக கூறிய பொலிஸ் தரப்பு பேச்சாளர், “ஜெர்மனியின் குவாந்தனமோ பே” என்று வர்ணித்தார்.

கெல்ன் நகரம் அமைந்துள்ள, நோர்ட்ரைன்-வெஸ்ட்பாலின் மாநிலத்தில், உள்ளூர் தொலைக்காட்சி சேவையான WDR, இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

அகதிகள் துன்புறுத்தப் படுவதாக படுவதாக, வேறு இடங்களில் இருந்தும் தகவல்கள் கிடைத்ததாக அறிவித்துள்ளது. எஸ்சென் (Essen) நகரில் உள்ள அகதி முகாமில் வசிக்கும் அகதிகள், வன்முறைக்கு உள்ளான ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

ஜெர்மனியில், அகதிகளாக வருவோர், முகாம்களில் தங்க வைக்கப் படுகின்றனர். குறைந்தது ஒரு வருடத்திற்கு, அகதிகள் வேலை செய்ய அனுமதி கிடையாது. அது மட்டுமல்லாது, குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பிரயாணம் செய்ய முடியாது.

முந்திய காலங்களில், அகதிகளின் பராமரிப்பை அரசு பொறுப்பேற்று நடத்தி வந்தது. தற்போது, அந்தப் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். முழுப் பொருளாதாரமும் தனியார்மயத்தை நோக்கி நகரும் பொழுது, அகதிகளை மட்டும் விட்டு வைப்பார்களா?

நோர்ட்ரைன்-வெஸ்ட்பாலின் மாநிலத்தில், “European Homecare” எனும் தனியார் நிறுவனம் பல அகதி முகாம்களை நிர்வகித்து வருகின்றது. அந்த நிறுவனம், முகாம் தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு, பிற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

முகாமில் பணி புரியும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், SKI எனும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். அந்த நிறுவனத்தின் இரண்டு பாதுகாவலர்கள் தான், சித்திரவதை குற்றச்சாட்டில் சம்பந்தப் பட்டிருந்தனர். அவர்கள் தற்போது பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப் பட்டுள்ளனர்.

பூர்பார்க் முகாமில் சுமார் 700 அகதிகள் வசிக்கின்றனர். சித்திரவதை குற்றச்சாட்டு சம்பந்தமாக அவர்களில் பலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருந்தாலும், சம்பந்தப் பட்ட பாதுகாவலர்கள் இனவெறியர்கள் என்பதை அரசாங்கம் மறுத்து வருகின்றது.

சித்திரவதை குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், “கடந்த காலங்களில் போதைவஸ்து பாவனை, வன்முறையில் ஈடுபட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக,” பொலிஸ் தெரிவிக்கின்றது. “கிரிமினல்களை கடமையில் ஈடுபடுத்தும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்” என்று மாநில அரசின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

சாதாரணமாக, ஒருவர் விமான நிலையத்தில் கழுவித் துடைக்கும் வேலை செய்வதற்கு விண்ணப்பித்தாலே, பொலிஸ் சான்றிதழ் இல்லாமல் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். பாதுகாப்பு நிறுவனங்களில், ஒருவரின் கடந்த காலத்தைப் பற்றி, பொலிஸ் பதிவுகளில் ஆராயாமல் சேர்த்துக் கொள்வார்களா?

அகதி முகாம்களில் நடக்கும் சித்திரவதை தொடர்பாக, ஜெர்மன் பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகளான die Linke மற்றும் பசுமைக் கட்சி உறுப்பினர்கள், அரசாங்க கொள்கைகளை விமர்சித்துப் பேசினார்கள்.

“அகதிகளை முகாம்களில் தங்க வைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மனிதாபிமானமற்றது. அதிகார துஸ்பிரயோகத்தை உருவாக்குகின்றது. முகாம்களுக்குப் பதிலாக, அகதிகள் தாம் விரும்பிய இடத்தில் வசிக்கும் உரிமையை வழங்க வேண்டும்.” என்று die Linke பாராளுமன்ற உறுப்பினர் Bernd Riexinger தனது கருத்தைத் தெரிவித்தார்

Exit mobile version