ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக அஷ்ரப் கானி திங்கட்கிழமை பதவியேற்றார். காபூல் நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்றது.
ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பின் பெறுபேறுகள் குறித்து நிலவிய 6 மாத கசப்பான சர்ச்சையொன்றையடுத்தே இந்தப் பதவியேற்பு வைபவம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய அரசாங்க உடன்படிக்கையின் கீழ் அஷ்ரப் கானி ஜனாதிபதியாக பதவியேற்கின்ற அதே சமயம்இ ஜனாதிபதி தேர்தலில் இரண்டாமிடத்தைப் பெற்ற அப்துல்லாஹ் பிரதமரின் அதிகாரங்களைக் கொண்ட பதவி நிலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஐக்கிய அரசாங்க உடன்படிக்கையானது அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட மோசடி என தலிபான் போராளிகள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த உடன்படிக்கையை அஷ்ரப் கானி மாபெரும் வெற்றியாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் சுமார் 100 க்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அரசியலமைப்பின் கீழ் பதவியேற்றார்.
புதிதாக உருவாக்கப்பட்ட தலைமை நிறைவேற்றதிகார பதவிக்காக சத்திய பிரமாணம் செய்து கொண்ட அப்துல்லாஹ், ”நாட்டின் எதிர்காலத்துக்காக நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் ஜனாதிபதியும் தானும் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தலைநகர் காபூலில் விமான நிலைய வீதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 4 பொதுமக்கள் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.