நாய் மற்றும் வனவிலங்குகளின் இறைச்சியை கலந்து ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இறைச்சி வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரட்சி காலநிலை காரணமாக தண்ணீர் தேடி காடுகளிலில் இருந்து வெளியே வரும் விலங்குகளை பிடித்து, அவற்றை கொன்று, இறைச்சியாக்கி விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளதாக வனவிலங்கு துறை அதிகாரி டபிள்யூ.ஏ.குணதுங்க கூறினார்.
இவ்வாறு கொல்லப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சியை ஏமாற்று குழுவினர் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கொல்லப்பட்ட நாய்கள் மற்றும் விலங்குகளில் தலைகள் மற்றும் உடற்பாகங்கள் ஒதுக்குபுறமான இடத்தில் வீசப்பட்டுள்ளன.
இவ்வாறு மோசடி செய்யப்பட்ட இறைச்சித்துண்டுகளில் நாய் இறைச்சியுடன் கலக்கப்பட்டுள்ள ஏனைய இறைச்சி வகைகளை வேறுபடுத்தி பார்ப்பது கடினமானதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹம்பாந்தோட்டை, அப்பலாந்தோட்டை, ஹூணுகம ஆகிய பிரதேசங்களில் விற்கப்படும் இறைச்சிகளில் வேறுபட்ட சுவைகள் இருப்பது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளன.
இந்த பிரதேசங்களில் விற்கப்படும் இறைச்சிகள் மற்றும் வேட்டைகாரர்களிடத்தில் வாங்கும் இறைச்சிகள் தொடர்பில் கதிர்காமத்திற்கு செல்லும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றூலாப் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.