பளையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் மற்றும் தண்டவாளத்தின் தரத்தை பரீட்சிக்கும் இயந்திரம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதன் உள்ளே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பயணித்தவாறு ரயில் பாதையை பார்வையிடுகின்றனர்.
ரயில் தண்டவாளத்தின் இரண்டு புறங்களிலும் சிறுவர்கள் உள்ளிட்ட மக்கள் ஆச்சரியமாக இதனை பார்க்கின்றனர். அனைவரது முகங்களி லும் மீண்டும் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணத்துக்கு வரப்போகின்றது என்ற எதிர்பார்ப்பே காணப்படுகின்றது. ஆம். 24 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி ரயில் பயணிக்கப்போகின்றது.
”யாழ் தேவி ” இது வடக்கு மக்களின் இதயங்களில் பதிந்த ஒரு பெயராகும். இந்த யாழ் தேவி என்ற பெயரில் எத்தனையோ கதைகள் நாடகங்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்நிலையில் 24 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் காரணமாக யாழ்தேவி ரயில் சேவை தடைப்பட்டது.
அதன் பின்னர் வட பகுதிக்கான போக்குவரத்துக்காக மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள் துயரங்கள் அசெளகரியங்கள் என்பன சொற்களினால் விபரிக்க முடியாதவையாக இருந்தன. போக்குவரத்து முழுமையானதாக இருக்கவில்லை. கட்டுப்பாடுகளுடன் சிலகாலம் ஏ -9 வீதியூடாக வட பகுதிக்கான போக்குவரத்து இருந்தது.
ஒரு சமயத்தில் முற்றாக வட பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வடக்குக்கு கடல் மார்க்கமாக மக்கள்பயணிக்கவேண்டிய நிர்ப்பந்தமும்காணப்பட்டது.
இந்நிலையில் யாழ்தேவி ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கபோகின்றது என்ற செய்தியானது வடக்கு மக்களை பொறுத்தவரை இனிமையான செய்தியாகும். யாழ்தேவி யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் செல்லப்போகின்றது. மீண்டும் ரயில் தடங்கள் ஒலிக்கப்போகின்றன.
வடக்கு மக்களின் கனவு நனவாகப்போகின்றது. யாழ்தேவி ரயில் என்பது இந்த நாட்டு மக்களின் இதயங்களில் ஒன்றித்துப்போன ஒன்றாகும். அந்தவகையில் அந்த கனவு தற்போது நனவாகப்போகின்றது. ஆனால் இந்தக் கனவு வெறுமனே நனவாகவில்லை.
இதற்கு பின்னால் இரண்டு அரசாங்கங்களின் கடின உழைப்பு உள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ் தேவி ரயில் பயணம் பளை ரயில் நிலையத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
வடக்கு ரயில் பாதைக்கான வரலாற்றை பார்ப்போமானால் மதவாச்சியிலிருந்து தலை மன்னார் வரையான ரயில் சேவை 1914 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது 106 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்டதாகும்.
மேலும் பொல்கஹவெல முதல் காங்கேசன்துறை வரையான ரயில் பாதை 1894 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது 339 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்டதாகும்.
அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கம் வடக்குக்கான ரயில் பாதையை மீள் புனர்நிர்மாணம் செய்வதற்கு ஆரம்பித்தது. அதன்படி இந்தியாவின் இர்கொன் என்ற நிறுவனம் வடக்கு ரயில் பாதையை அமைப்பதற்கான பணியை பொறுப்பெடுத்தது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில் மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையும் ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரையிலுமான ரயில் தண்டவாளத்தை அமைப்பதே இந்த இர்கொன் நிறுவனத்தின் பணியாகும். தற்போதைய நிலைமையில் ஓமந்தையிலிருந்து பளை ரயில் நிலையம் வரை தண்டவாளம் நிர்மாணிக்கப்பட்டு ரயில் சேவை இடம்பெறுகின்றது.
ஓமந்தையிலிருந்து பளை வரையான தூரம் 90 கிலோ மீற்றர்களாகும். தற்போது பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுவிட்டது. அதன்படி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவையை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயாராக உள்ளன.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை அழகுபடுத்தும் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைவரையான ரயில் பாதையும் 90 வீதம் அமைக்கப்பட்டுவிட்டது. இவ்வருடம் டிசம்பர் மாதம் காங்கேசன் துறை வரையான ரயில் பாதையும் அமைக்கப்பட்டுவிடும்.
மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணியும் இர்கொன் நிறுவனத்தினால் முன்னெ டுக்கப்படுகின்றது. மதவாச்சியிலிருந்து மடுரோட் ரயில் நிலையம் வரை ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டு தற்போது ரயில் சேவை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இது 42 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்டதாகும். மடுரோட் ரயில் நிலையத்திலிருந்து தலை மன்னார் வரையான ரயில் பாதையும் இவ்வருடம் டிசம்பர் மாதம் நிர்மாணிக்கப்பட்டு முடிந்துவிடும்.
இது 63 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்டதாகும். அந்தவகையில் இந்திய கடனுதவியில் இந்தரயில் பாதை நிர்மாணிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மொத்தமாக 650 மில்லியன் டொலர் செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடக்கின் ரயில் பாதையை பார்வையிடச் சென்ற உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட இலங்கையில் ரயில் பாதை புனர்நிர்மாணத்தை முன்னெடுக்கும் இர்கொன் நிறுவனத்தின் பணிப்பாளர் குப்தா தகவல் வெளியிடுகையில் எமது இர்கொன் நிறுவனம் என்பது இந்தியாவின் ரயில்வே அமைச்சுக்கு கீழ் வருகின்ற அரச நிறுவனமாகும்.
உலகில் பல நாடுகளில் நாங்கள் ரயில் பாதை அமைக்கும் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். உட்கட்டமைப்பு வசதித்திட்டங்களையும் முன்னெடுக்கின்றோம். கடந்த 38 வருடங்களாக 20நாடுகளில் 100 திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இலங்கையில் 2009 ஆம் ஆண்டுமுதல் எமது வேலைத்திட்டங்களை ஆரம்பித்தோம்.
முதலில் தெற்கில் ரயில் பாதையை நிர்மாணித்தோம். அதன் பின்னர் வடக்கில் எமது வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். வடக்கில் மொத்தமாக 250 கிலோ மீற்றர் தூரம் ரயில் பாதையை அமைத்தோம்.
மதவாச்சியிலிருந்து தலை மன்னார் வரை 106 கிலோ மீற்றர் தூரம் ரயில் பாதை அமைக்கப்படுகின்றது. மறுகட்டமாக ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதை 145 கிலே மீற்றர் தூரத்தைக்கொண்டது.
ஏற்கனவே ஓமந்தையிலிருந்து பளை மற்றும் மதவாச்சியிலிருந்து மடுரோட் வரையான பாதை நிர்மாணிக்கப்பட்டு ரயில் சேவை இடம்பெறுகின்றது. அடுத்தகட்டமாக பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பாதை நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதியினால் பாதை திறந்து வைக்கப்படவுள்ளது.
முழு வடக்கு மக்களும் இதனை எதிர்பார்த்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றுகின்றோம். கனவு நனவாகப்போகின்றமை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.
தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரை மக்கள் பயணிக்கலாம்.
யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைவரை 18 கிலோ மீற்றர் தூரம் உள்ளது. இதில் இடையில் காணப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலய சிக்கல் காரணமாக தாமதமாகியது.
எனினும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டு எமக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனவே இவ்வருடம் டிசம்பர் மாத பகுதியில் காங்கேசன்துறைவரையான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுவிடும்.
மடுரோட் நிலையத்திலிருந்து திருக்கேதிஸ்வரம் வரையான 30 கிலோ மீற்றர் ரயில் பாதை நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் தலைமன்னார் வரையான பாதையும் அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும். கொழும்பு – யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவையில் மக்கள் 8 மணித்தியாலங்களில் பயணிக்கலாம் என்பதனை குறிப்பிடுகின்றோம்.
கொழும்பு – யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை சுமார் 400 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்டது. இந்த தூரத்தை வாகனங்களில் செல்வது கடினமாகும்.
நாம் நிர்மாணித்துள்ள ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையான பாதை 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியுமான அமைப்பைக்கொண்டது.
ஆனால் சாதாரணமாக ரயில் 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும். அந்தவகையில் சுமார் 400 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்ட கொழும்பு –யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதையின் தரத்தை உயர்த்தினால் 5 மணித்தியாலங்களில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கலாம். எந்தவொரு களைப்பும் இன்றி மகிழ்ச்சியாக பயணிக்கலாம்.
தற்போது கூட கொழும்பிலிருந்து ஓமந்தை வரை ஒரு குறைந்த வேகத்தில் பயணித்தாலும் பளையிலிருந்து யாழ்ப்பாணம்வரை 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கலாம்.
எமது நிர்மாணம் அந்தளவிலேயே விடப்பட்டுள்ளது.எனவேகொழும்பிலிருந்து ஓமந்தை வரை யான ரயில் பாதை தரமுயர்த்தப்படுவதானது அவசியமாகும்.
இதற்கான யோசனையை அரசாங்கத்துக்குவழங்கியுள்ளோம். அதனைமுன்னெடுப்பதா இல்லையாஎன்பதனை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கவேண்டும்.
அண்மையில் கூட மாஹோவில் ரயில் தடம்புரண்டது நினைவிருக்கலாம். பாதுகாப்பான ரயில் சேவையை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்தியாவில் நாங்கள் 160 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் ரயில் பாதை அமைத்துள்ளோம். அடுத்ததாக இந்தியாவில் 350 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
அதனை இலங்கையில் அமைத்தால் என்ன நடக்கும். மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 560 கிலோ மீற்றர் தூரத்தை ஒன்றரை மணிநேரத்தில் சென்றடையலாம். ஆனால் தற்போது 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் பாதையை ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை அமைத்துக்கொடுத்துள்ளோம்.
மேலும் சமிக்ஞை அமைக்கும் வேலைத்திட்டத்தையும் நாம் முன்னெடுத்துள்ளோம். அதுவும் மிகவும் செயற்திறனான சமிக்ஞை கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். வீதி பயணத்தைவிட ரயில் பயணம் மிகவும் சிறந்தது. எரிபொருள் சிக்கனம் வாய்ந்தது. மகிழ்ச்சியாக பயணிக்கலாம்.
நாம் எதிர்கொண்ட சவால்கள் என்ற வகையில் முதலில் சிறிய கற்களை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டோம். எவ்வாறெனினும் இறுதியில் அவற்றை பெற்றோம்.
அடுத்த சவாலாக யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில்பாதையை ஆரம்பிக்கும்போது அங்கு அதியுயர் பாதுகாப்பு வலய பிரச்சினை ஏற்பட்டது. பாதுகாப்பு தரப்பு மிகவும் தாமதமாகியேகுறித்த பகுதியை எமக்கு விடுவித்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னரே அவற்றை பெற்றோம்.
தற்போது அந்தப்பாதையை அமைத்துவருகின்றோம். அடுத்ததாக கண்ணிவெடியகற்றும் பணிகளிலும் சவால்களை எதிர்கொண்டோம். மதவாச்சியிலிருந்து தலைமன்னார்வரை இந்திய நிறுவனம் கண்ணிவெடிய கற்றும் பணிகளை மேற்கொண்டது.
ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறைவரை இலங்கை இராணுவம் அந்தப் பணிகளைமுன்னெடுத்தது.
இவற்றில் ஏற்பட்ட தாமதமும் ரயில் பாதை நிர்மாணிக்கும் செயற்பாட்டில் தாமதத்தை ஏற்படுத்தியது. எவ்வாறெனினும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ எங்களுக்கு பாரிய உதவியை வழங்கினார். அவரின் உதவி இல்லாவிடின் இதனை சாதித்திருக்க முடியாது.
நாங்கள் மரக்கட்டைகளை அமைக்கவில்லை.மாறாக கொங்ரீட் தூண்களையே அமைக்கின்றோம் என்றார்.
யாழ்தேவி மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வரப்போகின்றது என்பதில் மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனேயே உள்ளனர். வடக்குக்கு கொழும்பிலிருந்து மீண்டும் ரயில்பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவது வரவேற்கத்தக்க விடயமாகும். அந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் வழங்கும் உதவியும் பாராட்டத்தக்கது.
மீண்டும் யாழ்தேவி யாழ்ப்பாணத்துக்கு செல்லப்போ கின்றது என்றார்.
-ரொபட் அன்டனி-