தமிழக தலைவர்களாகட்டும், இலங்கையிலுள்ள தமிழ்த் தலைவர்களாகட்டும் இலங்கை இனப்பிரச்சினையில் ஒற்றுமையுடன் செயற்படவில்லை என்பது தான் எனது அபிப்பிராயம். ஆதங்கமும் கூட. அனைவரும் ஒற்றுமையாக இருந்திருப்பார்களேயானால், ஒற்றுமையாகக் கூடிப் போராடியிருந்தால் இவ்வளவு உயிரிழப்புக்களும், நஷ்டமும் ஏற்பட்டிருக்காது.
நம்முடைய உரிமைகளுக்கும் முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்காது என்று தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி தெரிவித்தார்.
தமிழகத்திற்கு அண்மையில் வந்த இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்கள் எம்மைச் சந்திக்காமை வருத் தம் அளிக்கிறது.
நான் பதவியை பெரிதாக கருதுபவன் அல்ல. எனது இந்த வருத்தம் நியாயமானதா? இல்லையா? என்பதை நீங்கள் தான் கூறவேண்டும். ஈழத்து மக்களுக்காகப் பாடுபடும் தமிழக அரசியல் தலைவர்களுக்குரிய மதிப்பளிக்கப்படுகின்றதா என்ற ஆதங்கம் என்னுள் உள்ளது.
நான் கடந்த ஆறு தசாப்த காலமாக தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறேன் என்றும் கலைஞர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழினத்தின் தலைவர் என்ற குறியீட்டுக்கு பொருத்தமானவர். தீர்க்கமான அரசியல் ராஜதந்திரி. பரந்த அறிவாளி. அரசியலில் பழுத்த அனுபவசாலி. திராவிட இயக்கத்தின் நடமாடும் வரலாறு.
இப்படி பல போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர் கலைஞர். அவருடனான நேர்காணல் வருமாறு,
கேள்வி: தேசிய இனப்பிரச்சினையை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தட்டிக்கழித்துக் கொண்டே வருகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் தலைவர்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: தமிழ் தலைவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது தமிழகத் தலைவர்களை மட்டுமல்ல என்றும், இலங்கையில் இருக்கின்ற தமிழ் தலைவர்களையும் சேர்த்துத்தான் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்றும் எடுத்துக்கொள்கின்றேன்.
தமிழக தலைவர்களாகட்டும், இலங்கையிலுள்ள தமிழ் தலைவர்களாகட்டும் இப்பிரச்சினையில் ஒற்றுமையுடன் செயற்படவில்லை என்பது தான் என்னுடைய ஆதங்கம். என்னைப் பொறுத்த வரையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, அறிஞர் அண்ணா அவர்களின் காலத்திலேயே, ஈழத்தந்தை செல்வநாயகத்தின் காலத்திலேயே இப்பிரச்சினைக்காக குரல் கொடுத்திருககிறேன்.
அந்த வகையில் அந்த காலம் முதல் தம்பி பிரபாகரனின் இந்த காலம் வரை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை தொடர்ந்து பார்த்து வருகின்றவன் என்ற வகையில் கூறுகிறேன்.
இவ்விடயத்தில் இலங்கையில் உள்ளவர்களிடம் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ளவர்களிடமும் கூட ஒற்றுமையில்லை என்பதையே காண முடிந்தது. அனைவரும் ஒற்றுமையாக இருந்திருப்பார்களேயானால், ஒற்றுமையாக கூடி போராடியிருந்தால் இவ்வளவு உயிரிழப்புகளும், நஷ்டமும் ஏற்பட்டிருக்காது. நம்முடைய உரிமைகளுக்கும் முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்காது.
கேள்வி: இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழக அரசும் மத்திய அரசும் எவ்வாறான கடமைகளையாற்றவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: தமிழக அரசும் மத்திய அரசும் ஒன்றுக்கொன்று கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும். அரசியல் வேறுபாடுகளை களைந்து இன அழிப்பை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கடமையாற்றவேண்டும் என்று கருதுகிறேன்.
கேள்வி: முந்தைய காங்கிரஸ் அரசிற்கும், தற்போதைய பா.ஜ.க. அரசிற்கும் ஏதேனும் வேறுபாடுகளை அவதானிக்க முடிகின்றதா?
பதில்: அவர்கள் எவ்வளவு தான் அரசியல் எதிரியாக இருந்தாலும், தமிழர்களின் இன உணர்வைப் பற்றி கவலைப்படாத சூழ்நிலையில் முந்தைய அரசும், தற்போதைய அரசும் ஒன்றாகவே எனக்குத் தெரிகிறது. அதில் மாறுபாட்டை நான் காணவில்லை.
கேள்வி: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் காட்டி வரும் அக்கறை அரசியல் நோக்கம் கொண்டது என்று சிலர் கூறுகிறார்கள். இது குறித்து தங்களின் கருத்து என்ன?
பதில்: சிலர் கூறுகிறார்கள் என்று கூறுவது தான் அரசியல் நோக்கம் கொண்டது.
கேள்வி: அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு விஜயம் செய்து, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. ஆனால் தமிழக முதல்வரை சந்திக்க இயலாமற் போனது. இது குறித்து தங்களின் கருத்து என்ன?
பதில்: இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் பதிலளிக்கவேண்டும். இப்பிரச்சினைக்கு நான் அந்நியன்.
கேள்வி: கறுப்பு சட்டை அணியும் போராட்டம் குறித்து…?
பதில்: அது எங்களுடைய உணர்வை எடுததுரைப்பதற்கான போராட்டம்.
கேள்வி: பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எதிர்காலத்தில் இப்பிரச்சினையில் சாத்தியமான பங்களிப்பு வழங்கும் என்று கருதலாமா?
பதில்: வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கேள்வி: இன்றைய நிலையில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளுக்கு மத்திய அரசாங்கம் முன்கூட்டியே தலையிட்டிருந்தால், காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை ஓரளவு குறைத்திருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பதில்: குறைத்திருக்கலாம். ஆனால், இது விவாதத்திற்குரிய பிரச்சினை என்பதே எனது கருத்து.
கேள்வி: இந்திய மீனவர் விவகாரத்தில் தமிழக அரசும், இந்திய அரசும் மாறுபட்ட கொள்கையை கடைப்பிடித்து வருகிறதே ?
பதில்: கொள்கைகள் மாறுபட்டிருக்கின்றன என்று நினைக்கவில்லை. ஆனால் நடைமுறையில் இருதரப்பினருக்கும் உள்ள வேறுபாடுகளை களையவேண்டும். இதில் அரசியல் நோக்கமில்லை என்றே நினைக்கிறேன். இதற்கு நிர்வாகக் குளறுபடிதான் காரணம் என்று எண்ணுகிறேன்.
கேள்வி: தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதற்காக, தமிழ் மக்கள், தமிழக அரசு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய இவற்றின் நடவடிக்கைகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்று கருதுகிறீர்கள்?
பதில்: இதற்கான பதில் உங்களுடைய கேள்வியிலேயே இருக்கிறது. தமிழ் மக்கள், தமிழக அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்மூன்றும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யலாம்.
கேள்வி: தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதன் மூலம் மத்திய அரசின் கவனத்தை கூடுதலாக ஈர்க்க இயலும் என்று கருதுகிறீர்களா?
பதில்: கருதுகிறேன். இதிலென்ன சந்தேகம். ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், ஒன்றிணைந்து போராடவும் தயாராக இருக்கிறோம். இருக்கவேண்டும்.
கேள்வி: ஈழத்து மக்களுக்காக தங்களின் அரசியல் அனுபவங்களிலிருந்து வழங்கும் ஆலோசனை என்ன?
பதில்: ஈழத்து மக்களுக்காகப் பாடுபடுகின்ற தமிழக அரசியல் தலைவர்களுக்கும், அவர்களின் அரசியல் செயற்பாட்டிற்கும் அவர்கள் மதிப்பளிக்கிறார்களா? என்ற வினாவிற்கு இன்னும் தெளிவாக விடை கிடைக்கவில்லை.
அங்கே உருவாகின்ற தலைமை, தங்களுக்காக யார் முதலில் பாடுபட்டார்கள் என்பதை அறிந்திருக்கிறார்களா? தங்களுக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்களா? அந்த உணர்வை பெறுகிறார்களா? என்பதைப் பற்றியெல்லாம் முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகிறது.
குறிப்பாக அண்மையில் தமிழகத்திற்கு வருகைத் தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு எம்மை சந்திக்கவில்லை. என்பது வருத்தமளிக்கிறது. இந்த வருத்தம் நியாயமானதா? இல்லையா? என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.
கலைஞர் கருணாநிதி வீரகேசரிக்கு நாழிதலுக்கு அளித்த பேட்டி…