சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து அதிமுகவினர் கொண்டாட்டங்களில் குதித்தனர்.
ஆனால் அது கடைசியில் பெரும் ஏமாற்றத்தில் போய் முடிந்தது. முதலில் ஜாமீன் என்று செய்தி வெளியானதால் மகிழ்ச்சி அடைந்த அதிமுகவினர் தற்போது கோபத்துடன் மீண்டும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
சென்னை முதல் செங்கோட்டை வரை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டங்களில் குதித்தனர் தொண்டர்கள். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தை தொடங்கினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவகம் முன்பு சரமாரியாக சரவெடிகள் கொளுத்தப்பட்டதால் அந்தப் பகுதியே கலங்கிப் போனது. அதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அதிமுகவினர் கொண்டாட்டங்களை தீவிரப்படுத்தினர்.
கடந்த 11 நாட்களாக தமிழகம் முழுவதும் சோகப் போராட்டம் நடத்தி வந்த அதிமுகவினர் இன்று சந்தோஷக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பாடா, இனிமேலாவது நம்ம பொழப்பக் கெடுக்காம இருப்பாங்கப்பா என்று மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஆனால் கடைசியில் அனைத்தும் புஸ்வாணமாகிப் போய் விட்டது. தற்போது அதிமுகவினர் மீண்டும் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி போராட்டங்களில் குதித்துள்ளனர்.