கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் பெண்ணொருவர் கண்டியில் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, மொரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயது பெண்ணே இவ்வாறு உயிரழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற இப்பெண் கடந்த 22 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கண்டியிலுள்ள தனது மகனின் வீட்டுக்கு சென்றபோது இவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இவர் குருநாகலில் உள்ள தனது நண்பியின் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளதுடன் மாலையே வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது, இவருக்கு கடும் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டரை மாதங்களில் கருக்கலைப்பு செய்ததால் இம்மரணம் சம்பவித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிவந்துள்ளது.
இவரது மரண விசாரணையை கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே நடத்தியதுடன் பிரேத பரிசோதனையை கண்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எம்.சிவசுப்ரமணியம் நடத்தியுள்ளார்.
இப்பெண், கருக்கலைப்பு நிலையத்தை கண்டறிவதற்காக பொலிஸார் கடும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.