லண்டன்: தாலிபான்களின் தாக்குதலில் தலையில் குண்டடிபட்டு நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் செட்டில் ஆன மலாலா யூசப்சாய்க்கு 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர்-படுங்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில் இருக்கும் மிங்கோரா நகரைச் சேர்ந்தவர் மலாலா யூசப்சாய் (17). பெண் கல்விக்காக குரல் கொடுத்ததால் அவர் தாலிபான்களின் கோபத்திற்கு ஆளானார். பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தாலிபான்கள் தடைவிதித்த ஸ்வாட் மாவட்டத்தில் மலாலா துணிந்து பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார்.
தாக்குதல்
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி பள்ளி வாகனத்திற்குள் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி ஒருவர் மலாலாவை நோக்கி சுட்டார். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்தது.
அதிர்ச்சி
பெண் கல்விக்காக குரல் கொடுத்ததற்காக பள்ளி சிறுமியான மலாலா சுடப்பட்டது உலக மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
சிகிச்சை
பாகிஸ்தானில் சிகிச்சை பெற்ற மலாலா மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டார். குணமடைந்த பிறகு அவர் தனது குடும்பத்தாருடன் இங்கிலாந்திலேயே தங்கிவிட்டார்.
படிப்பு
பாகிஸ்தானில் தாலிபான்களின் அச்சுறுத்தல் இருப்பதால் மலாலா இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் பகுதியில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
உலக அளவில் பிரபமாகிவிட்ட மலாலா பெண் கல்விக்காக துணிந்து குரல் கொடுத்து வருகிறார். ஐ.நா.விலும் பேசியுள்ளார், தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
நோபல் பரிசு
தீவிரவாதிகள் சுட்டதில் படுகாயம் அடைந்து மறுஜென்மம் எடுத்து பெண் கல்வி, முன்னேற்றத்திற்காக பாடுபடும் மலாலாவுக்கு 2014ம் ஆண்டுக்கான அமைத்திக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. அவர் இந்த பரிசை இந்திய குழந்தைகளின் உரிமைகளுக்காக பச்பன் பசாவ் அன்டோலன் அமைப்பை நடத்தி வரும் டெல்லியைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்கிறார்.