கிழக்கு மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செங்கலடி இரட்டைக்கொலை தொடர்பான வழக்கின் நான்காவது சந்தேக நபரான கொலையுண்டவர்களின் மகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த மேற்படி இரட்டைக் கொலை வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் குறித்த நான்காவது சந்தேக நபரான ரகுடக்சனா (வயது 17) எனும் மாணவிக்கு நிபந்தனைகளுடன் கூடியதான பிணை வழங்க உத்தரவிட்டார்.
மேற்படி, செங்கலடி இரட்டைக்கொலை (கணவன் மனைவி) வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரே வகுப்பில் கல்வி பயின்ற முதல் மூன்று சந்தேக நபர்களான மாணவர்கள் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் நான்காவது சந்தேக நபரான இறந்த தம்பதியின் புதல்வி ரகுடக்சனாவுக்கு அவரது பாதுகாப்பு காரணமாகவே பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அப்பொழுது மறுப்புத் தெரிவித்ததுடன் பிணை கோரிய சந்தேக நபரான மாணவியின் அம்மம்மாவினால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதெனவும் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் குறித்த இரட்டைக் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் நான்காவது சந்தேக நபரான ரகுடக்சனா கடந்த ஒரு வருடமும் மூன்று மாதங்களும் விளக்கமறியலில் இருந்து வருவதையும் வழக்கின் நிகழ்வுகளுக்கு நடவடிக்கைகளெடுக்கும் சந்தர்ப்பங்களில் இடையூறுகளேற்படக்கூடாது என்பன போன்ற விடயங்களையும் கவனத்தில் கொண்ட நீதிபதி நிபந்தனைகளுடனான பிணை வழங்க உத்தரவிட்டார்.
இதன்படி 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான அந்தாட்சிப்படுத்தப்பட்ட பிணையிலும் செல்ல பிணை வழங்கிய நீதிபதி மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பாதுகாப்பு இல்லத்திலேயே தங்க வேண்டுமெனவும் ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையில் தனது கல்வியைத் தொடரலாமெனவும் நிபந்தனையுடனான உத்தரவிட்டார்.
மேலும், நீண்ட காலம் விளக்கமறியலில் இருந்து வரும் இளம் பருவத்தினரான சந்தேக நபர் தாய், தந்தையை இழந்த நிலையிலுமிருப்பதால் அவரது உள நல விடயத்தில் அக்கறை கொள்வது அவசியமெனக் குறிப்பிட்ட நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கீழுள்ள உளவள ஆற்றுப்படுத்தல் நிலையம் மூலம் ஆறு வாரங்களுக்கு பிறகு நன்னடத்தை உத்தியோகத்தர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.