தற்போதைய ஜனாதிபதி, மஹிந்த ராஜபக் ஷவின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டே நிறைவடைகின்றது. அவ்வாறான நிலையில் அதற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடாது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாயின் அச்செயற்பாடானது சர்வாதிகார ஆட்சிக்கு வித்திடுவதாக அமையும் என எச்சரித்துள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் இலக்குக் கொண்ட அனைத்துச் சக்திகளுடனும் ஒன்றுபட்டு செயற்படத்தயார் எனவும் அறிவித்துள்ளார்.
அடுத்தடுத்து இரண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக வெளியான தகவல்கள், ஜனாதிபதி மூன்றாவது தடவையாக போட்டியிடுதல், நிறைவேற்று அதிகார ஒழிப்பு மற்றும் அவருடைய சமகாலச் செயற்பாடுகள் தொடர்பாக கேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உயர் நீதிமன்றத்தை நாடமுடியாது நாட்டின் ஜனாதிபதியொருவர் பொது நலன் கருதியே சட்ட சிக்கல்களுக்கு உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்க முடியும் அதைவிடுத்து தான் மூன்றாவது முறை போட்டியிடுவது சம்பந்தமான ஒரு தனிப்பட்ட நபரின் அபிலாசைகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கும் உரிமை கிடையாது.
ஜனாதிபதியினால் பொதுமக்களின் நன்மை கருதி அல்லது அரசியல் அமைப்பின் தெளிவுக்குறித்து உயர்நீதிமன்றத்தை நாடலாம். தற்போதுள்ளது ஜனாதிபதியின் தனிப்பட்ட பிரச்சினையாகும். நாட்டின் தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகளுக்கு உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது.
3ஆவது முறைக்கு சட்டத்தில் இடமில்லை
ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் ஜனாதிபதி தேர்தலை நடாத்த எந்த சந்தர்ப்பத்திலும் நான்கு வருட முடிவில் தீர்மானிக்கலாம் என்பதை அரசியல் அமைப்பு பிரிவு 31(3யு) மிக தௌிவாக குறிப்பிடுகின்றது.
ஆனால் 31(3யு)(னு) பிரிவானது சத்திய பிரமாணம் செய்த நாளில் இருந்து ஆறு வருடங்களுக்கு அந்த பதவியின் காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 18ஆவது திருத்த சாசனத்தின் 31 (2) பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது முறை போட்டியிட தகுதியற்றவர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2010ஆண்டு இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிடும் போது மனுவொன்றையும் நீதிமன்றுக்கு சமர்பித்தே 19.11.2010ஆம் திகதி பதவியேற்றிருந்தார்.
ஆகவே குறித்த திகதியிலிருந்து ஆறு வருடங்கள் அதாவது 19-11-2016 ஆம் ஆண்டுவரை அவர் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதற்கு முன்னதாக அதாவது பதவிநிறைவுக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் முடியாது மூன்றாவது முறை முறை போட்டியிடவும் முடியாது.
பாராளுமன்ற தேர்தலே முதலில் நடத்தவேண்டும்
தற்போது எதிர்க்கட்சிகள் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன நிறவேற்று அதிகாரமுறைமையை நீக்க வேண்டும் எனக் கோரிவருகின்றன. இவ்வாறான நிலையில் முதலில் பாராளுமன்ற தேர்தலையே நடத்த வேண்டும்.
அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்றத்திற்கான அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறில்லாது 2016 நவம்பருக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதானது சர்வாதிகார ஆட்சிக்கே வித்திடும்.
காரணம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமாயின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் தமக்கு விரும்பியதொரு பாராளுமன்றமே உருவாக்கப்படும்.
அப்பாராளுமன்றத்தின் மூலம் ஜனநாயக் ஆட்சி மேற்கொள்ளப்படும் என்பது சந்தேகம். மேலும் நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி எதேச்சதிகார செயற்பாடுகள் நடைபெற்றமைக்கு தற்போது கூட உதாரணங்கள் உள்ளன.
குறிப்பாக இரண்டாவது ஆட்சி ஆரம்பமாகி நான்கு வருடங்கள் கழிந்த நிலையில் கூட பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். இச் செயற்பாடானது ஏதெவொரு பின்னணியைக் கொண்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்பில் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறான பல நிலைமைகள் மாற்றப்பட வேண்டுமாயின் முதலில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதே பொருத்தமானது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ முதற் தடவையாக தேர்தலில் போட்டியிடும் போது மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம் -1 ஐ வௌிட்டார் இதில் அதிகாரங்கள் பகிரப்படுவதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும் உறுதியளித்திருந்தார்.
ஆதேபோன்று இரண்டாவது தடவையாக 2010இல் போட்டியிடும் போதும் மஹிந்தசிந்தனை வேலைத்திட்டம் 11 இலும் அவ்வாறான வாக்குறதிகளை குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது வரை வாக்குறதிகள் நிறைவேற்றப்படாது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான நிலைமையே ஏற்பட்டுள்ளது.
பொதுவேட்பாளருக்கு அவசரமில்லை
தற்போது பொதுவேட்பாளர் யார்? தனித்துப் போட்டியிடுவதா தனித்தனி வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றார்கள். அதுகுறித்து தற்போது அவசரப்படவேண்டியதில்லை.
காரணம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக மக்களுக்கு தௌிவுபடுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எதிர்க்கட்சிகள் அவ்விடயம் தொடர்பிலேயே கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதற்கான ஆக்கபூர்வமான தௌிவுபடுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஒரே இலககை உடைய சக்திகளுடன் இணையத் தயார்
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பாகவும், மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாதென்பது தொடர்பிலும் மக்கள் விடுதலை முன்னணியானது மக்கள் தௌிவுபடுத்தல்களை மேற்கொண்டுவருகின்றது.
இதற்காக எனக்கு அழைப்பு விடக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதுடன் இவ்வாறான இலக்குகளை முன்வைத்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக முன்வரும் அனைத்து சக்திகளுடனும் நான் இணைந்து செயற்படத்தயாராக இருக்கின்றேன்.
மாறாக ஒருபோதும் அக்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதால் அக்கட்களின் பிரசார நபராக இருக்கப்போவதில்லை என்பது உறுதி என்றார்.
ஜனவரி 9 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வு
10-10-2014
எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆராய்ந்துவருவதாக அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலை அடுத்தவருடம் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நடத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்துவருவதாக ஜனாதிபதியின் நெருங்கிய முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள போதிலும் இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருந்தந்தை அடுத்தவருடம் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு அவருக்கு ஆட்சேபனை இல்லை என்ற விடயத்தை அண்மைய வத்திக்கான் விஜயத்தின்மூலம் அரசாங்கம் உறுதிபடுத்திக்கொண்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவித்தன.
காரணம் நாடு ஒன்றில் தேர்தல் பிரசாரக்காலம் நடைமுறையில் இருக்கும்போது பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருந்தந்தை குறித்த நாட்டுக்கு விஜயம் செய்யமாட்டார் என்பது தற்போதைய பாப்பரசர் கடைபிடித்துவரும் ஒழுங்குமுறையாகும்.
அதனடிப்படையிலேயே பாப்பரசரின் விஜயத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறலாம் என்பதனை அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல அண்மையில் உறுதிபடுத்தியிருந்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற நான்கு வருடங்களுக்கு மற்றுமொரு தேர்தலுக்கு செல்வதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதால் அவர் அந்த உரிமையை பயன்படுத்தவுள்ளார் என்றும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை உறுதிபடுத்தும் வகையில் அடுத்தவருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தையும் அரசாங்கம் இவ்வருடம் முன்னதாகவே சமர்ப்பிக்கவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் இம்முறை அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு இறுதிவாக்கெடுப்பு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்ததுமே அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் உடனடியாகவே அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கே தீர்மானிக்கப்பட்டதாக அறிய முடிந்தது. எனினும் ஊவா தேர்தல் முடிவுகளின் பின்னர் ஜனவரி மாதமே தேர்தலுக்கு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் அவர் மூன்றாவது தடவையாக போட்டியிட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசரும் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களும் தெரிவித்துவருகின்றனர்
இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று சிரேஷ்ட சட்டத்தரணிகளான நிஹான் ஜயமான்ன மற்றும் கோமின் தயாசிறி ஆகியோர் கடந்தவாரம் தெரிவித்தனர்.
கொழும்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கருத்து வெளியிட்ட இந்த சட்டத்தரணிகள் மூன்றாம் தடவையாக போட்டியிடுவதில் அரசியலமைப்பில் எவ்விதமான சட்ட சிக்கலும் இல்லை. சிலர் இறந்து அடக்கம் செய்யப்பட்ட சட்டங்களுக்கு உயிர்கொடுக்க முயற்சிக்கின்றனர் என்று குறிப்பிட்டனர்.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஒரு சிலரினால் முன்வைக்கப்பபடும் தர்க்கம் விவாதிக்கவேண்டிய விடயமே அல்ல. அவ்வாறு ஒரு பிரச்சினையே சட்டததில் இல்லை. ஜனாதிபதியினால் அடுத்தத் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் இவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் காய்நகர்த்தல்கள் மற்றும் நகர்வுகள் ஆளும் கட்சி மட்டத்திலும் எதிர்க்கட்சிகளின் சார்பிலும் நடத்தப்பட ஆரம்பித்துவிட்டன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே போட்டியிடவுள்ளார் என்ற நிலையில் மிக அதிகளவில் எதிர்க்கட்சிகளே அரசியல் காய்களை நகர்த்திவருகின்றன.
எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா அல்லது தனித்தனி வேட்பாளர்களை நிறுத்துவதா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன.
இதேவேளை லண்டனில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்த்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச்சு நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை போட்டியிடவேண்டாம் என்றும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குமாறும் சந்திரிகா குமாரதுங்க கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இதுவே சிறந்த தருணம் என்றும் பொதுவேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர் நிறைவேற்று முறைமையை நீக்கி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும் என்று சந்திரிக்கா குமாரதுங்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக்கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் எதிர்க்கட்சிகளினால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் எவரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெற்றது. இதில் 57.88 வீதமான வாக்குகளை பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார்.
எதிரணியில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா 40.15 வீதமான வாக்குகளை பெற்றிருந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.