தயாளுவுக்கு அல்சைமர் எனும் மறதி நோய் இருப்பதாகக் கூறப்படும் (பொய்) வாதத்தைக் கூட அமுலாக்கப் பிரிவு ஏற்கவில்லை!
டூ – ஜி வழக்கில் கனிமொழியும் திருமதி தயாளு கருணாநிதியும் சிக்கியது போல ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் திருமதி காவேரி கலாநிதிக்கும் வில்லங்கம் சூழ்கிறது. இதனால் மாறன் தரப்பு அதிர்ந்து போயிருக்கிறது!
சுமார் 15 ஆண்டுகள் மத்திய அரசில் அதிகாரத்தைச் சுவைத்த பலனை தி.மு.க. வி.ஐ.பி. க்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்.
ஏற்கனவே டூ –ஜி வழக்கில் ஆ. ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. முன்னாள் எம்.டி சரத்குமார் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. அந்த வழக்கில் தாயளுவும் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
ஆனால் அதே விவகாரம் தொடர்பாக அமுலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தயாளுவையும் குற்றவாளியாக இணைத்துள்ளது.
தயாளுவுக்கு அல்சைமர் (மறதி நோய்) இருப்பதாகக் கூறப்பட்ட பொய் வாதத்தைக் கூட அமுலாக்கப் பிரிவு ஏற்கவில்லை. கலைஞர் டி.வி. நிர்வாகக் குழுக் கூட்டத்தின் நடைமுறைகளைத் தயாளு தமிழில் தெளிவாக தெரிவித்ததாக சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் அமுலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதே தனி நீதிமன்றத்தின் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் தான் ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் கலாநிதி மாறனின் சன் டைரக்டர் நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அப்போதைய தொலைத்தொடர்பு துறை அமைச்சரான தயாநிதி மாறனும் சன் டைரக்ட் நிறுவன எக்ஸிகியூட்டிவ் சேர்மன் கலாநிதி மாறனும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இதே சன் டைரக்டில் 82 சதவிகிதப் பங்குகளை வைத்திருப்பவரும் அந்த நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் இயக்குனருமான திருமதி காவேரி கலாநிதியை சி.பி.ஐ. விசாரிக்கவே இல்லை.
இந்த விவகாரம் ஏற்கனவே விவாதங்களைக் கிளப்பியிருந்தது. கலைஞர் டி.வி.யின் பணப் பரிமாற்றத்திற்கு 85 வயதான தயாளுவைப் பொறுப்பாக்கும் சூழலில் சன் டைரைக்டின் செயல்பாடுகளுக்கு காவேரி எப்படி சம்பந்தம் இல்லாதவராக இருக்க முடியும்?
இவ்வளவு காலமும் சி.பி.ஐ. அவரை விசாரிக்காதது ஏன்? என அரசியல் வட்டாரங்களிலேயே கேள்விகள் எழுந்தன.
தி.மு.க. வட்டாரமோ காவேரியைப் பாதுகாத்த இரகசியத்தை மாறன் தரப்பு கூறியிருந்தால் அதே வியூகத்தில் தயாளுவையும் காப்பாற்றியிருக்கலாமே? என ஆதங்கத்தை அள்ளிக் கொட்டியபடி இருந்தது.
தயாளுவை ஒப்பிடுகையில் காவேரி கல்வி அறிவுமிக்கவர். சன் நிறுவனம் அதிகாரபூர்வமாக தாக்கல் செய்துள்ள வரவு – செலவுக் கணக்கிலேயே காவேரி கடந்த ஆண்டில் சம்பளம் மற்றும் இதரச் சலுகைகளாக சுமார் 50 கோடி ரூபாய் பெற்றிருக்கிறார்.
அந்த வகையில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் கார்ப்பரேட் நிர்வாகியாக அவர் உள்ளார். அப்படிப்பட்டவர் தனது நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு எப்படி பொறுப்பேற்காமல் இருக்க முடியும்? என்றும் விவரமான பலர் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர்.
இந்தச் சூழலில் தான் செப்டெம்பர் 22 ஆம் திகதி தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒ.பி. சைனியே சன் டைரக்டில் 82 சதவிகிதிப் பங்குகள் வைத்திருக்கும் காவேரி கலாநிதி மாறனை விசாரிக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே. கோயல் சன் டைரக்டில் நிர்வாக ரீதியான முடிவுகளை கலாநிதியே எடுத்துள்ளார். காவேரியை நேரடியாகத் தொடர்புபடுத்தும் விதமாக ஆவணங்கள் இல்லை.
எனினும் நீதிமன்றம் உத்தரவிட்டால் அது குறித்து விசாரிக்கத் தயார் என குறிப்பிட்டார்.
சி.பி.ஐ. வழக்கறிஞரின் பதிலை தனி நீதிபதி ஒ.பி. சைனி குறித்து வைத்துக் கொண்டார். ஒக்டோபர் 13 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இது குறித்து தனி நீதிபதி உரிய உத்தரவை பிறப்பிக்கக் கூடும்.
கனிமொழி தயாளு வரிசையில் காவேரிக்கும் இப்படியொரு நெருக்கடி உருவாகும் என்பதை மாறன் தரப்பு எதிர்பார்க்கவில்லை. நீதிமன்றத்தில் என்ன உத்தரவு வரப்போகிறதோ? நெஞ்சுக்கு நீதி கேட்டு கட்டுரைகள் எழுதிய கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் இப்படியும் சோதனை மேல் சோதனையா? சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்.
அ.தி.மு.கட்சியினரை கொதிப்படைய வைத்த கன்னட நடிகை: அப்படி என்ன செய்தார்?