சர்வாதிகார போக்கில் இருந்து நாட்டை காப்பாற்றுவதும் அதிகாரப்பகிர்வினூடான ஜனநாயகத்தை நோக்கி பயணிப்பதுமே எமது நோக்கம். இலங்கையில் நடைபெறும் இறுதி ஜனாதிபதி தேர்தல் இதுவாகவே இருக்க வேண்டும் என தெரிவித்த சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர்,
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதான எதிர்த்தரப்பு வேட்பாளராக களமிறங்குவதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றுவாராக இருப்பின் ஆதரிக்கத்தயார் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் போட்டி நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில்விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் செய்திகள் கசிந்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணான வகையில் இடம்பெறும் ஆட்சியினை முடிவிற்கு கொண்டுவர வேண்டும். அரசாங்கம் ஆட்சியமைத்த போது பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி தான்தோன்றித்தனமான ஆட்சியினை மேற்கொண்டு வருகின்றது.
எனவே, அதனை தடுக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அனைவரும் இவ்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேபோல் இலங்கையில் நடைபெறும் இறுதி ஜனாதிபதி தேர்தலாக தற்போது நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலே அமைய வேண்டும்.
அதனை ஏற்றுக்கொண்டு ஆறு மாத காலத்தினுள் ஜனாதிபதி முறையினை மாற்றி அனைத்து அதிகாரங்களையும் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்க தயார் எனின் ரணில் விக்கிரமசிங்க அந்த வாக்குறுதிகளை எமக்கு வழங்கினால் நாம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தயார்.
அதேபோல் பொது எதிரணியின் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வரவேண்டும். குறிப்பாக இந்த ஆட்சியினை மாற்றியமைக்க பலமான பொது எதிரணியொன்று உருவாகுமாயின் அதுவே சிறந்த முடிவாக அமையும்.
ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளின் துணை மிகவும் அவசியமானது. ஆகவே, இம்மூன்று கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என்றால் அடுத்த அரசாங்கம் இலகுவில் உருவாகும்.
மேலும், தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியமானது. சிறுபான்மை மக்களின் ஆதரவு முழுமையாக இருக்குமாயின் அதுவே இவர்களுக்கு கிடைக்கும் முதல் வெற்றியாகும்.
அதற்காகவேனும் தமிழ் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளை தன்வசப்படுத்திக்கொள்ள பிரதான எதிர்க்கூட்டணி முயற்சிக்க வேண்டும்.
எனவே, நாட்டின் ஜனநாயகத்தினை நிலைநாட்டி அதிகாரப்பகிர்வு நோக்கிய பொது எதிரணி உருவாகுமாயின் சகல எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அதேபோல் ஆட்சியமைத்து 6 மாத காலத்தினுள் ஜனாதிபதி அதிகாரங்களை பாராளுமன்றிடம் ஒப்படைப்பாராயின் தயக்கமின்றி நாம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்போம்.
எமக்கு யார் பொது வேட்பாளர் என்பதை விடவும் பொது வேட்பாளர் கொடுத்த வாக்கினை காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுவேட்பாளராக ரணிலை நிறுத்துவது தொடர்பில் எதிரணியுடன் ஐ.தே.க. பேச்சு: சரத் பொன்சேகா, மாதுலுவாவே சோபித தேரர் ஆதரவு
13-10-2014
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்தநிலையில் அவரை பொது வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதற்கென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பீடமானது ஜீ 20 என்ற அமைப்பினை உருவாக்கியிருந்தது.
இந்த அமைப்பானது கலந்துரையாடல்களை மேற்கொண்டு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதென வெள்ளிக்கிழமை தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து தமது கட்சியின் வேட்பாளரை எதிரணியின் சார்பில் பொது வேட்பாளராக நியமிப்பதற்கு ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு இந்தக் குழு தீர்மானித்துள்ளது.
இதன் ஓரங்கமாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை சந்தித்து பேசியுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த கட்டமாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்து பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதற்கு ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்திருக்கின்றார். ஆனால் பொதுச் சின்னத்தில் அவர் களமிறங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவை மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் தூதுக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போதும் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது பொதுச் சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் ஆதரிக்க தயார் என்று பொன்சேகா தெரிவித்துள்ளதாக தெரிகின்றது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று மாதுலுவாவே சோபித தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போதும்பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
ரணில் விக்கிரம சிங்கவை பொதுவேட்பாளராக நியமிப்பதற்கு மாதுலுவாவே சோபித தேரரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகின்றது.
பொதுவேட்பாளராக ரணிலை ஒருபோதும் ஆதரியோம்: ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார
13-10-014
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில்mவிக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்ற நிலையில் ஜே.வி.பி. யின் ஆதரவு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது எதிரணி தொடர்பில் சிந்திப்பது வரவேற்கத்தக்க விடயமே. சகல கட்சிகளையும் ஒன்றிணைத்த பொது எதிரணிக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது ஆதரவினை தெரிவிக்கும்.
ஆனால் பொது எதிரணியில் களமிறக்கப்படுபவர் பொதுவான கொள்கையினையும் சகல கட்சிகளின் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதிகளை அனுசரிப்பவராகவும் இருக்க வேண்டும்.
இவ்விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தமது சுயநலத்தினை மட்டுமே கருத்திற்கொண்டு செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. பொது வேட்பாளர் எனும் சொற்பதத்திற்கு ரணில் விக்கிரமசிங்க தகுதியானவர் அல்ல. ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது பொது எதிரணியும் அல்ல. எனவே அவ்வாறானதொரு நிலையில் நாம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தயாரில்லை.
அதேபோல் ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ திகதிகள் இன்னமும் வெளியிடப்படாததனால் எமது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தல் எப்போது என்பது வெளியிடப்பட்டதும் ஜே.வி.பி. யின் முடிவும் தெரிவிக்கப்படும்.
அது வரையில் சகல தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டினை எட்டும் முயற்சிகளை மேற்கொள்வோம். அதேபோல் தமிழ் – முஸ்லிம் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தும் திட்டமுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் பொது எதிரணியில் பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும். இல்லையேல் ஜே.வி.பி. தனது தனிப்பட்ட கொள்கையில் செயற்படும். அதை விடுத்து தனிப்பட்ட கட்சிகளின் சுயநல கொள்கைகளுக்கு எமது ஆதரவு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்தார்.