வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்துள்ளவர்கள் வடக்கிற்கு செல்லவே வேண்டுமானால் பயணத்தின் நோக்கம், செல்லுமிடங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்து முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்த பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி ஏற்கனவே அமுலிலிருந்த இந்த நடைமுறையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுள்ளவர்கள் நாட்டின் வட மாகாணத்திற்கு செல்ல முடியாது. வெளிநாட்டவர் வடக்கிற்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டே இத்தடைகள் கொண்டு வரப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திகள் அனைத்தையும் நிராகரித்த பிரிகேடியர், இச்செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை எனவும் தெரி வித்தார்.
பாதுகாப்பு மற்றும் சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்க மளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரிகேடியர் மேலும் விளக்கமளிக்கையில்;
பல வருட பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டிருந்த வடபகுதியை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்த பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கம், அரச நிறுவனங்கள், வெளிநாடுகள், ஐ.நா. அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என்று பலதரப்பட்டவர்கள் இந்த அபிவிருத்தி பணிகளுக்காக உதவி, ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு வடக்கிற்கு செல்பவர்களில் 99 வீதமானவர்கள் நல்ல நோக்கங்களுடன் சென்று வருகின்ற போதிலும், ஒரு சிலர் உதவி என்ற போர்வையில் சென்று இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத் தல்களை ஏற்படுத்தும் ஒன்றாகும். எனவே, பிரிவினை வாதத் தையும் பிரச்சினைகளையும் மீண்டும் ஏற்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனாலேயே ஏற்கனவே இருந்த நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்ப ட்டுள்ளது.
இதன் அர்த்தம், வெளிநாட்டு கடவுச் சீட்டுள்ளவர்கள் எவரும் வடக்கிற்கு போக வேண்டாம். அல்லது போகத்தடை என்பதல்ல. மாறாக ஏதாவது ஒரு தேவைக்காக, நோக்கத்திற்காக வடக்கிற்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சுக்கு அறியத்தந்து முன் அனுமதி பெற்றுச் செல்ல முடியும்.
அவ்வாறு செல்ல விரும்புபவர்கள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, 152, பாலதக்ஷன மாவத்தை, கொழும்பு – 03 (Ministry of Defence and Urban Development, 152, Baladakshana Mawatta, Colombo – 03) என்ற முகவரிக்கோ அல்லது 0112328109 என்ற பக்ஸ் இலக்கத்திற்கோ கடிதம் மூலம் அறியத் தருமாறு கேட்டுக்கொள்வதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.