அடுத்தவருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில் அரசியல் கட்சிகளுக்கு உள்ளேயும் மற்றும் கட்சிகளுக்கு வெளிமட்டத்திலுமான தீர்மானங்கள் நகர்வுகள் என்பன பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
குறிப்பாக அரசியல் கூட்டணிகளில் ஏற்பட்டுவருகின்ற உட்கட்சிப் பூசல்கள் கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்ற பிரதான கட்சிகளின் சந்தேகங்கள் ஆதங்கங்கள் என்பன பரபரப்புக்கு தீனிபோட்டுவருகின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதித் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகிவருகின்றது. அந்த வகையில் லங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தீவிரமான தயார்படுத்தலுக்கு ஆளும்கட்சியினரை உட்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலுக்கு தயாராகிவருகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் நெருக்கடிகள் இல்லாமல் இல்லை. அதன்படி ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலியே ரத்ன தேரர் ஊடாக அரசாங்கத்துக்கு புதிய தலைவலி ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளது.
தற்போதைய தேர்தல் காலத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலியே ரத்ன தேரர் அரசியல் களத்தில் புதிய விஸ்வரூபமாகவே மாறியுள்ளார். கடந்த காலங்களில் அதாவது 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் கடும்போக்குவாத கொள்கையையே ஜாதிக ஹெல உறுமய முன்னெடுத்துவந்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டளவில் யுத்தம் தீவிரமடைவதற்கும் ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு தீவிரமான அழுத்தத்தை பிரயோகித்ததுடன் கடுமையான ஆதரவையும் அரசாங்கத்துக்கு வழங்கியது.
அது மட்டுன்றி 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஹெல உறுமய தற்போதைய அரசாங்கத்துக்கு பாரியளவில் ஆதரவை வழங்கியது.
மேலும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஹெல உறுமய முழுமையான ஆதரவை வழங்கியது.
18 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஒருவர் ஜனாதிபதியாக இரண்டு தடவைகளே பதவி வகிக்க முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதுடன் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை நிறுவப்பட்டது.
இந்த சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறுவதற்கான ஆதரவை அரசாங்கத்துக்கு ஹெல உறுமய வழங்கியிருந்தது. இவ்வாறான பின்னணியைக்கொண்ட ஜாதிக ஹெல உறுமய அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அந்தவகையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் 19 ஆவது திருத்தச் சட்ட யோசனையை முன்வைத்து உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர்,
நிறைவேற்று அதிகார முறையினை நீக்கி அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் வகையில் நாம் 19 ஆவது திருத்தச் சட்டத்தினைக் கொண்டுவந்திருப்பது இந்த நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவே தவிர தனி நபரையோ, குடும்ப அரசியலையோ காப்பதற்காகவல்ல.
நாட்டின் தற்போதைய தேவை அதிகாரப் பகிர்வேயாகும், ஜனாதிபதித் தேர்தல் அல்ல. எனவே எமது கோரிக்கையினை மீறி ஜனாதிபதித் தேர்தலை மஹிந்த ராஜபக் ஷ நடத்துவாராயின் அரசை கவிழ்க்கும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எமது கொள்கைப் பிரகடனத்தினை ஆதரித்து சகல எதிர்க்கட்சிகளும் துணை நிற்கின்றன. இதனை மீறி ஜனாதிபதி செயற்பட்டால் விளைவுகள் மிக மோசமானதாக அமையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த நிகழ்வில் தேரர் மேலும் குறிப் பிடுகையில்
தனி நபரின், தனி குடும்பத்தின் தனிப்பட்ட சிந்தனையில் இன்று அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கோ மக்களின் சிந்தனைகளுக்கோ இடமில்லை.
சுய விருப்பின் பேரில் அரசாங்கத்தின் ஆட்சி நடக்குமாயின் அதனை வாய்மூடி அவதானித்துக் கொண்டிருக்க முடியாது. தனிநபரின் விருப்பில் சட்டத்தையும் நீதியையும் தன் வசப்படுத்திக் கொண்டு தனது விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்வதை மக்களும் விரும்பவில்லை.
அவ்வாறானதொரு நிலையில் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலை நடத்த முயற்சித்து வருகின்றார். ஜனாதிபதித் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் அது மக்களின் விருப்பத்துடன் நடத்த வேண்டுமே தவிர தனி நபரின் விருப்பத்திற்கிணங்க நடத்தக்கூடாது.
அதேபோல் நாட்டில் அதிகாரப் பகிர்வு, சுயாதீன சேவைகளின் செயற்பாட்டினை உறுதிப்படுத்திவிட்டு சுயாதீனமான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துரலியே ரத்ன தேரர் தலைமையிலான ஜாதிக ஹெல உறுமயவின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்பதே தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.
அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மேலும் வலுவடைவதற்கு ஆதரவளித்த ஹெல உறுமய தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்று கூறுவதுடன் நின்று விடாமல் அதற்காக 19 ஆவது திருத்தச் சட்ட நகலையே உருவாக்கிக் கொடுத்துள்ளது.
இந்த நகலை வெளியிடும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல அதிகாரப் பகிர்வுக்கு செல்லவேண்டும் என்றும் அந்தக் கட்சி கூறுகின்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரை ஹெல உறுமயவின் இந்த புதிய நகர்வு அரசாங்கத்துக்கு புதிய தலையிடியாகவே அமைந்துள்ளது என்று கூறலாம்.
இதற்கான காரணம் என்னவென்று ஆராய்கின்றபோது அரசாங்கத்தின் அண்மைக்கால ஒருசில நடவடிக்கைகள் ஹெல உறுமயவை அதிருப்தியடைய வைத்திருக்கலாம். . ஜாதிக ஹெல உறுமய பௌத்தர்களை அடிப்படையாகக்கொண்ட கட்சியாகும்.
இந்நிலையில் கடந்த காலங்களில் பொதுபலசேனா என்ற பௌத்த அமைப்பு மிகவும் பலமான அமைப்பாக உருவாகி வந்தமை ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்ற தோற்றப்பாடு உள்ளது.
அதாவது பொதுபல சேனா அமைப்பு வலுவான அமைப்பாக உருவாகி வருகின்றமையானது ஹெல உறுமயபோன்ற பௌத்தர்களின் வாக்குகளை நம்பியுள்ள கட்சிகளுக்கு பாரிய சவாலாக இருக்கும் என்றே கருதப்படுகின்றது.
குறிப்பாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிவரும் ஹெல உறுமயபோன்ற கட்சிகளின் பேரம்பேசும் சக்திக்கு சவால் விடும் வகையில் பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் வலுவான முறையில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்ற ஆதங்கம் ஹெல உறுமயவுக்கு இருக்கலாம். தமது பலத்துக்கு சவால் விடும் வகையில் உள்ளதாக அந்தக் கட்சி கருதுவதற்கு சாத்தியமுள்ளது.
இந்நிலையில் ஜாதிக ஹெல உறுமயவின் இந்த காலக்கெடு மற்றும் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்ற அறிகுறி இல்லை. ஹெல உறுமயவின் கோரிக்கையின் பிரகாரம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுக்கப்போகின்றதா?
அல்லது திருத்தத்தை முன்னெடுக்காமல் ஹெல உறுமயவின் ஆதரவை இழக்கப்போகின்றதா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும். காலநிர்ணயம் விடுத்தே அத்துரலியே ரத்ன தேரர் விடயங்களை முன்வைத்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது. அல்லது ஹெல உறுமய என்ன செய்யப்போகின்றது? என்பது சில வாரங்களில் தெரியவரும்.
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை யாரை வேட்பாளராக களமிறக்குவது என்பது குறித்து ஆராய்ந்துவருகையில் ஆளும் கட்சிக்குள் இவ்வாறானதொரு முறுகல் நிலை அல்லது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளமையே அரசியலில் பரபரப்பூட்டும் விடயமாக மாறியுள்ளது. எது எவ்வாறெனினும் ஆளும் கூட்டணியை பொறுத்தவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அது தயாராகிவருகின்றது.
ஆளும் கட்சிக்குள் அங்கம் வகிக்கும் மலையக கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு அடுத்த தேர்தலில் முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்துத் பேச்சு நடத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான கட்சியின் பிரதிநிதிகள் இந்த உறுதிமொழியை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர்.
எனினும் சிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்யப்போகின்றது என்பதே இன்னும் புதிராக உள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கூறுகின்றதே தவிர அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது.
எதிர்க்கட்சியை பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார் என்று இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிடினும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்திய வகையிலான அதன் காய்நகர்த்தல்கள் அமைந்துள்ளன.
எனவே பெரும்பாலும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நவம்பர் மாதம் 20 ஆம் திகதியளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு எவ்வாறு அமையும் என்பதும் அரசியல் களத்தில் மிக முக்கிய விடயமாகும். கடந்த 2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் கூட்டமைப்பு எதிரணி வேட்பாளருக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கியது.
ஆனால் இம்முறை தேர்தலில் யாருக்காவது கூட்டமைப்பு பகிரங்க ஆதரவு வழங்குமா அல்லது மௌனமாகவே இருந்துவிடுமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
–ரொபட் அன்டனி–
எவ்வாறெனினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப்போகும் தீர்மானம் தீர்க்கமானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. கடந்தவாரம் வடக்குக்கான யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
சிறுபான்மை கட்சிகளை பொறுத்தமட்டில் தாம் அடுத்த பிரதான தேர்தலில் எடுக்கும் தீர்மானங்கள் தமது சமூகத்திற்கு நன்மை பயப்பதாகவும் தமது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.
குறிப்பாக ஆளும் கட்சிக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிலைப்பாடுகள் முரண்பாடான நிலையை தோற்றுவித்துள்ள நிலையில் சிறுபான்மை கட்சிகள் மிகவும் நிதானமாக சிந்தித்து தீர்க்கதரிசனமான முடிவை எடுக்கவேண்டும் என்பதே தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்பார்ப்பாகும். அரசியல் களநிலைவரங்களை புரிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுப்பது முக்கியமாகும்.