நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலரிமாளிகையில் நடைபெற்ற ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்குகொண்ட கூட்டத்திலேயே ஹக்கீம் இவ்வாறு உறுதியளித்திருக்கின்றார்.
அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தான் அவசரமாக ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக அங்கு அறிவித்தார்.
அதன்போதே ஹக்கீம் தன்னுடைய நிலையை விளக்கியதாக சிங்களத் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் டியூ குணசேக்கர இந்தத் தேர்தலில் ராஜபக்ஷ எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாக அங்கு கருத்துத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம். இந்த நாட்களில் தன்னைப் பற்றி ஊடகங்கள் அப்பட்டமான கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கின்றது.
அரசை வீழ்த்துகின்ற விளையாட்டொன்றில் தான் இறங்கி இருப்பதாகவும் அரசைக் கவிழ்க்கச் சதி செய்து வருவதாகவும் ஒரு பத்திரிகையின் பெயரைக் குறிப்பிட்டு ஜனாதிபதியிடம் முறையிட்டார்.
தான் அரசுக்கு எதிரான கட்சிகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கின்றது.
இதில் எந்தவிதமான உண்மைகளுமில்லை. வருகின்ற தேர்தலில் நாம் உங்களையே ஆதரிக்க இருக்கின்றோம் என்று ஹக்கீம் ஜனாதிபதியிடத்தில் உறுதி கூறி இருக்கின்றார் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் ஹக்கீமுக்குப் பதிலளித்த ஜனாதிபதி அந்தப் பத்திரிகை அரசை வீழ்த்துவதற்கென்றே தற்போது காரியம் பார்த்து வருகின்றது. அவற்றை எல்லாம் நீங்கள் பெரிது படுத்த வேண்டாம்.
அந்தப் பத்திரிகையைப் பற்றியும் எனக்குத் தெரியும் உங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். கடந்த காலங்களில் நடந்த சிறிய சிறிய விடயங்களைப் பெரிது படுத்த வேண்டாம் எனக் கூறியிருக்கின்றார்.
இந்தக் கூட்டத்தையடுத்து அமைச்சர் ஹக்கீம் அவசரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருக்கின்றார். ஜனாதிபதியின் செய்தியொன்றை எடுத்துக் கொண்டு ஒரு சவுதி அரேபியாவிலுள்ள முக்கியமான முஸ்லிம் இராஜதந்திரி ஒருவரைச் சந்திக்கவே ஹக்கீம் சென்றிருக்கின்றார் என்றும் சொல்லப்படுகின்றது.